நீள் மகுடம் ஏந்திதமிழ் ஈழநிலம் ஆண்ட இனம்
நேர் எதிராய்கீழ் கிடப்பதேனோ
ஆள்திறனும் ஆற்றலுடன் அரசுகொண்டு ஆண்டகுடி
அந்நியர்க்கு அடிமைகளாய் வாழ்வோ
தோள் வலித்த தீரமெழும் தீந்தமிழர் இனமழித்துத்
தூயகுலம் வாழ்வழித்த தீயர்
கேள் நல்லூரில் வாழ்முருகா சூரனைச் சம்ஹாரம் செய்ய
சூழ்வினையைத் தீர்க்க வேலைத் தாராய்
ஊழ்வினையோ ஈழமதில் உள்நுழையும் பாவியினம்,
ஊரழித்துக் காணிநிலம்கொள்ள
யாழெடுத்து மீட்டிடவோ யாரி்டம்கால் வீழ்வதுவோ
யாரிவர்கள் தொன்மை மறத்தீரர்
வாள் எடுத்துச் சொந்தஇன வாழ்வைவந் தழிப்பவனை
வீழ்த்தவென வேட்கை கொண்டமைந்தார்
ஆள்கொடுமை வேரறுக்க ஓன்றிணையா நாமிழிந்தோம்
ஓடி யெழுந்தெம்மை காக்க வாரீர்
சேல்விழிகொள் மாதர்குலம் சினமெடுத்து படைநடந்து
சிங்ககுணத்தாரை மோதி வெல்ல
வேல் பிடித்த கையெடுத்து வினைமுடித்த செயலும்கண்டு
வியந்தெழுந்த உலகமொன்று சேர
சூல்தரித்த பெருவயிறும் சுட்டொழிக்கும் கீழ்இனத்தர்
சொல்லிஒன்று சேர்ந்துநிற்கக் கண்டும்
பால்வடித்த வாயினரும் பாவையரும் தாயவரும்
பலிகொடுத்தும் ஒன்றுசேரல் விட்டோம்
உயிர்கொடுத்த மைந்தர்களே உறுதியொன்று போனதய்யா
உள்ளதின்னும் தமிழினத்தின் வாழ்வு
வயிறெரிந்த உலகமிது வயிரமென்னும் ஈரமற்ற
வாணிகத்து நேசங்களை காத்து
கயிறெறிந்து காலன்வரக் கட்டிதொகையென்றனுப்ப
கடனுமுண்டோ எழுதி வைத்ததேது
உயிர்பறிக்க மாவுலகும் இசைபடித்து ஆடுகிறார்
எம்கடமை என்ன வந்து சொல்வீர்
கிரிகாசன்
.jpg)