Friday, June 7, 2013

தளபதிகளிலும் போராளிகளிலும் மிகவும் அக்கறையாகச் செயற்பட்ட தேசியத் தலைவர்



தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வன்னியில் பாசறைகளில் மிக எளிமையான வாழ்க்கை நடத்திய போதிலும் அவரது வீடுகள் என்ற பெயரில் இன்று வரை பத்து வரையான வீடுகளை சிறிலங்கா படைத்தரப்பு அடையாளப்படுத்தியுள்ளது.

வன்னியில் அழகான நிலக்கீழ் பதுங்கு குழியொன்று கண்டுபிடிக்கப்படுமாயின் உடனடியாகவே பிரபாகரன் சொகுசாக வாழ்ந்த மேலுமொரு வீட்டைக் கண்டுபிடித்து விட்டோம் என்று படைத்தரப்பு தம்பட்டம் அடிக்கின்றது.

இதே போன்றே முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் கண்டுபிடித்த நிலக்கீழ் வீடொன்றை தற்போது படையினர் மக்களின் பார்வைக்கு விட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்தின் கீழ் சுமார் 40 அடிக்கு மேல் பதுங்கு குழி போன்று வெட்டப்பட்டு மூன்று அடுக்காக அமைக்கப்பட்டிருந்த வீட்டையே பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் பிரதான வீதியில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் உள்ளே காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த வீட்டைப் பெருமளவான சிங்கள மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த வீட்டின் முகப்பு தோற்றம் சாதாரண வீட்டின் தோற்றத்தை உடைய போதிலும் உள்ளே மூன்று அடுக்கு மாளிகையாகவும் உள்ளதுடன் நிலத்திற்கு கீழே வாகன தரிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை சுற்றி பல காவலரண்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே இந்த வீடு அமைக்கப்பட்டிருந்ததாக படையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த வீடுகளைப் பார்க்கின்ற போது படையினர் ஆச்சரியப்படுகின்றனர். ஆனாலும் இந்த வீடுகளை மக்கள் பார்வையிட விடுவதன் மூலம் புலிகளின் தலைவர் மிகவும் ஆடம்பரமாகவும் வசதியாகவும் வாழ்ந்தார் என்பதையும் புலிகள் மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி தாங்கள் சொகுசாக வாழ்ந்தார்கள் என்பதையும் மக்கள் மனதில் திணிக்க முற்படுகின்றனர். இந்த நிலையில் இதன் உண்மைத் தன்மையை மக்கள் அறியாதவர்கள் அல்ல. ஆனாலும் மக்களுக்கு சில உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும்.

வன்னியில் புலிகளின் கட்டுமானங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பான முறையிலேயே அமைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் இந்த வீடும் சிறப்பான கட்டுமானங்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலக்கீழ் பதுங்குகுழி வீடுகள் உண்மையிலேயே தேசியத் தலைவருக்காக அமைக்கப்பட்டவையல்ல. பிரதேச மட்டத் தளபதிகள், உயர் தளபதிகள் போன்றோரின் வாராந்த, மாதாந்த கலந்துரையாடல்கள், களமுனைத் தளபதிகளின் திட்டமிடல்கள், உயர் தளபதிகளின் பொது நிகழ்வுகள் போன்றவற்றுக்காகவே வன்னியில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகள் இவ்வாறான நிலக்கீழ் வீடுகளை அமைத்திருந்தனர்.

தமிழீழ தேசியத் தலைவர் தளபதிகளிலும் போராளிகளிலும் மிகவும் அக்கறையாகச் செயற்பட்டவர். அதிலும் களமுனைத் தளபதிகளில் மிகவும் அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர். தளபதிகளின் ஒன்றுபட்ட சந்திப்புகளின் போது அவர்களின் பாதுகாப்பில் மிகவும் அதிக கவனம் செலுத்தியிருந்தார். எங்கேயும் எப்போதும் துரோகிகள் இருப்பார்கள் என்று தலைவர் நம்பியிருந்தார். அதனால் தளபதிகளின் கலந்துரையாடல்களுக்காக நிலக்கீழ் பதுங்குகுழிகளில் வசதியுடன் கூடிய வீடுகளை அமைத்திருந்தார்.

இதற்கு மேலாக எப்போதும் தமது உயிரைத் தியாகம் செய்வதற்கு தயாராக இருந்த கரும்புலிகள் சில நாட்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் தலைவர் இந்த வீடுகளை அமைத்திருந்தார். தேசியத் தலைவர் மாத்திரமன்றி போராளிகளோ தளபதிகளோ கூட இந்த வீடுகளில் வாழவில்லை. அவர்களின் கலந்துரையாடல் இடங்களாகவே இவை திகழந்தன.

ஆனால், சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழ் மக்களும் தாயகத்திலுள்ள தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளை வெறுக்கத்தக்க நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த வீடுகளை காட்சிப் பொருட்களாக பயன்படுத்துகின்றன. இது கூட ஒரு வகையில் தமிழ் மக்களு வெற்றியாகவே அமைகின்றது. ஏனெனில், தங்களுக்காக போராடிய புலிகள், தங்கள் பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் எத்தகைய கட்டுமான வளர்ச்சியிலும் சிறப்பிடம் பெற்றிருந்தார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவதற்கும் புலிகளின் வீர தீரங்களை சிங்கள மக்கள் அறிவதற்கும் படையினர் சிறந்த களம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள் என்று நினைத்து நாங்கள் மகிழ்ச்சியடைய முடியும்.

- தாயகத்திலிருந்து சங்கதி24 இற்காக வீரமணி

தமிழ் தேசிய இனத்தின் விடுதலையை உளமார நேசித்து பணி செய்த உன்னத மனிதர் வண பிதா சந்திரா பெர்னாண்டோ அவர்களின் நினைவுநாள்



எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம், இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன.

மட்டக்களப்பில் பாதர் சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன் காரண கின்றது. தமிழ்மக்களுக்கு மாத்திரமல்லாது, அனைத்து இனமக்களுக்கும் சேவை புரிந்த ஒரு நல்ல இதயங்கொண்ட மனிதரை ஏன் அன்று திட்டமிட்டு அழித்தார்கள் என்பதை எமது இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டும் என்பது இந்த நினைவு கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், ஆக்கிரமிப்புப் படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு துணிந்து களமிறங்கி சேவை செய்த பாதர் சந்திரா அவர்கள்தமிழ்தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக்கொண்டவராக காணப்பட்டார். அதனால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பு பலம்பொருந்தியதாகவும், அனைத்து விடயங்களிலும் தகமைசார் செயற்பாட்டாளர்களை கொண்டிருந்ததற்கும் வணபிதா சந்திரா அதிபர் வணசிங்க போன்ற தனலம்ற உன்னத மனிதர்களின் செயற்பாடுகளே காரணமெனலாம்.

1983ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் 1988ம் ஆண்டு வரை விடுதலைப் போராட்டம் மக்கள் எழுச்சியுடன் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த வேளையில் சிங்களப் பேரினவாதிகளின் குறி தமிழ்மக்களை அழிப்பதாக அமைந்திருந்தன. இக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மக்கள் குழு மிகவும் பலம் பொருந்திய நியாயம் கேட்கும் நிலையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ராஜதந்திரிகள் உலகபொதுஅமைப்புக்கள் பிரதிநிதிகளைசந்தித்து உண்மை நிலையை வெளிப்படுத்தும் அமைப்பாகச் செயல்பட்டதனால் எதிரிகளின் எண்ணங்களில் இடர்பாடுகளை ஏற்படுத்தியிருந்தன.

பாதர் சந்திரா அவர்கள் எந்த விடுதலை அமைப்பையும் சேர்ந்தவரில்லை தமிழ்மக்களின் சுதந்திர வாழ்வை உண்மையாக நேசித்ததனால் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்தார். அக்காலத்தில் பல இயக்கங்கள் செயல்பட்ட போதும் இவருடைய சேவை மக்கள் நலன் சார்ந்ததாக மட்டுமே இடம்பெற்றிருந்தன. மக்களுக்காக வாழ்ந்த மட்டக்களப்பு மக்கள் குழுத்தலைவர். மக்கள் விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தில் மன்னிக்க முடியாத நிகழ்வாகவும், மறக்க முடியாத துயர சம்பவமாகவும் நடந்தேறியிருந்தன

வணக்கத்துக்குரிய பாதர் சந்திரா பெர்னாண்டோ அவர்கள் 09.08.1948 அன்று மட்டக்களப்பு புளியந்தீவில் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை சென் மேரிஸ் பாடசாலையிலும் , உயர்கல்வியை புனித மிக்கல் கல்லூரியிலும் கற்றார். தனது குருக்கல்வியை இந்தியா பெங்களூரிலும், சென்னையிலும் பயின்று

1972. 09. 21 நாள் அன்று குருப்பட்டத்தை மட்டக்களப்பு மறைமாவட்ட பிஷப் கிளரின் ஆண்டகை முன்னிலையில் ஏற்றார் .

உதவித் பங்குத்தந்தையாக மட்டக்களப்பு நகர் தேவாலயத்திலும், மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா தேவாலயத்திலும், திருகோணமலை மாதா தேவாலயத்திலும், சின்னக்கடை திருகோணமலை தேவலையத்திலும் பணிபுரிந்து 1978ம் ஆண்டு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் நிருவாகத்துக்கு நிதிப்பொறுப்பாளராக செயலாற்றினார்.

1981ம் ஆண்டு மறைக்கோட்ட முதல்வரானார் இதேகாலப்பகுதியில் கல்லாறு தேவாலயத்தில் பங்குத்தந்தையாகவும் இருந்தார் . 1984ம் ஆண்டு மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வராக பொறுப்பேற்றார் .

பாதர் சந்திரா அவர்களின் மக்கள் சார்ந்த பல நிகழ்வுகளில் இரு நிகழ்வை இங்கு குறிப்பிடலாம் .19.1.1986 அன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியில் அமைந்திருந்த இருதயபுரம் சிங்கள விசேட அதிரடிப் படையினரால் அதிகாலைவேளையில் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது .ஊரில் வாழ்கின்ற மக்களுக்கு என்ன நடந்தது ? மக்களின் நிலை என்ன ? என்பதை எவராலும் அறிய முடியாமல் இருந்த வேளையில் பாதர் சந்திரா அவர்கள் தனது மோட்டார் சைக்கிலில் உயிரைவிட மக்களின் உண்மை நிலையை அறிய வேண்டுமென்பதற்காக துணிந்து சிங்கள இராணுவத்தின் காவலையும் மீறி உள்ளே சென்று மக்களுக்கு பக்கபலமாக நின்றார். இச்சுற்றி வளைப்பில் இருபதுக்கு மேற்பட்ட மக்கள் சிங்கள அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர் .

இன்னுமொரு நிகழ்வாக 1988ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான சுகுணா, இஸ்லாமியக் பெண்ணான ரிபாயா ஆகிய இருவரையும் EPRLF குழுவினர் பிடித்து சென்று தங்களது வாவிக்கரை தங்குமிடத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். இச்சம்பவத்தை அறிந்த மக்கள் குழுத்தலைவர் பாதர் சந்திரா அவர்கள் இந்தியப் படை அதிகாரிகலுடன் தொடர்பு கொண்டு இருவரையும் மீட்கும் பணியை மேற்கொண்டார். ஆனால் சுகுணாவை மாத்திரம்தான் அவரால் மீட்க முடிந்தது. மற்றைய பெண்ணான ரிபாயாவுக்கு என்ன நடந்தது என்பதை அன்ரில் இருந்து இன்று வரையும் அறிய முடியவில்லை. இந்த சம்பவத்தில் நேரடியாக பங்குகொண்டவர் தற்போது மட்டக்களப்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினராக இருக்கின்ற இரா. துரைரெட்ணம் என்பதை உறுதிப்படுத்தபட்ட பின்பும் அவராலும் இதற்குரிய பதில் இன்று வரையும் வழங்கப்படவில்லை. பாதர் சந்திரா அவர்களும் தான் இருக்கும் வரை ரிபாயாவை மீட்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

மட்டக்களப்பு – அம்பாறையில் சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிட்டு இருதயபுரம், நற்பட்டிமுனை, உடும்பன்குளம், மண்முனை கொக்கொட்டிச்சோலை இறால் பண்ணை , மயிலந்தனை புணணை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைகளை வெளி உலகிற்கு கொண்டுவருவதில் பாதர் சந்திரா அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்களவு இருந்தன. இவ்வாறு மக்கள் நலன் பாதுகாப்பு என்பதில் தூய எண்ணத்துடன், செயல்பட்ட துறவியான இவர் இந்தியப்படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த வேளையில் பல இடையூறுகளை மக்கள் சேவையில் சந்தித்திருந்தார்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டப்பாதையில் இலக்குத் தவறிய பயணத்தில் செயல்பட்ட இயக்கங்கள் பாதையிலிருந்து விலக்கப்பட்ட நிலையில், இந்தியப்படையினரின் பிரசன்னம் எமது மண்ணில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளையும் போராட்டத்தை ஆதரித்து நின்றமக்களையும் அழித்தொழிப்பதற்கு இந்திய படையினருடன், தமிழ் இயக்கங்களான, EPRLF, TELO, ENDLF போன்றவற்றின் உறுப்பினர்களும் துணைபோயினர்.

இந்நாளில் தங்களைத் தமிழ்த்தேசியவாதிகளாகக்காடடி நிற்கின்ற இரா.துரைரெட்ணம், பிரசின்னா, ஜனா போன்ற வர்களின் தலைமையில் தமிழ்த்தேசவிரோதக் குழுக்கள் அந்நாளில் செயல்பட்டதை எவரும் மறுப்பதற்கில்லை, தமிழ்மக்களும் எளிதில் மறக்க மாட்டார்கள். இவர்களின் துரோகத்தனத்திற்கு அன்று இந்தியப் படையினர் துணைநின்றனர். இதற்கு பின்பு சிங்களப்படையினருக்கும் இவர்கள் துணைநின்றனர்.

மக்கள் சேவையை முன்னிறுத்தி செயல்பட்ட பாதர் சந்திரா அவர்களை 06.06.1988 அன்று மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மாதா தேவாலயத்தினுள் வைத்து தமிழ்த் தேசிய விரோதிகளினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் .அன்று மறைக்கப்பட்ட கறுப்புத் திரையினுள் இவர்களாலும், இந்தியப் படையினராலும் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையும், அடக்கு முறைகளையும் வெளிக்கொண்டு வந்து நியாயம் கேட்ட மக்கள் சேவையாளனான கிறிஸ்துவத்துறவியின் குரல் ஒய்ந்து விட்டதை எண்ணி, அடுத்த குரல்களான வணசிங்கா அதிபர் அவர்களையும், ஆரையம்பதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அதிபர் அவர்களையும் அழித்தனர். விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழீழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட மக்கள் சேவையில் ஈடுபட்ட தனிநபர்களுக்கு எதிரான படுகொலைகளில் மிகப் பெரிய நீதியற்ற படுகொலைகளாகக் இக்கொலைகளைக் குறிப்பிடமுடியும்.

இன்று தமிழ் தேசியத்தை ஊடகத்துறையில் வளர்த்த பிதாமகர்கள் தாங்களே என நீட்டி முழங்கும் பலர் இவ்வாறன மனிதர்களின் கொலைகளை வசதியாக மறந்துவிடுகின்றனர் . தங்களின் இருப்பையும் தாம் சார்ந்தவர்களின் இருப்பையும் பதவிகளையும் தக்கவைப்பதற்காக வரலாறுகளை கூட தமக்கு வசதியான காலத்தில் தொடங்க முற்படுகின்றனர். இந்த ஊடக வியாபரிகளினது நோக்கமும் , வணபிதா சந்திரா போன்றவர்களை கொலைசெய்த கொலயளிகளினது நோக்கமும் ஒன்றாகவே இருக்கமுடியும் .

இக்கொலைகளை எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் பணியில் உள்ள எவரும் நியாயப்படுத்த முடியாது.

அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் அடிமை நிலையைத் திணிப்பதே ஆக்கிரமிப்பு வாதிகளின் கொள்கையாகும். இக்கொள்கைக்கு துணைபோயுள்ளதன்மூலம் மூன்று கல்விமான்களை மட்டக்களப்பில் அழித்து மக்கள் சார்பாக ஒலித்த குரலை அணைத்து மார்தட்டி எக்காளமிட்ட இக்குழுவினருக்கு தமிழ் மக்களின், உரிமைபற்றியோ, விடுதளைபற்றியோ, கதைப்பதற்கு எந்த அருகதையுமில்லை இவ்மூவரின் இழப்பு அன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகவிருந்தன

இருபத்தைந்து வருடங்கள் கழிந்த நிலையில் பாதர் சந்திரா அவர்களை நாம் நினைவு கூருகின்றோம். இவரை நினைவில் கொள்வது தமிழ்மக்களின் தலையாய கடமையாகும் ,பாதர் சந்திரா அவர்கள் வாழ்ந்தகாலம் தமிழ்மக்களுக்கு குரல் கொடுப்பதற்கு துணிந்த ,துறவியொருவர் வாழ்ந்தகாலமாகும் .இக்காலத்தில் மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழ் அரசியல் வாதிகள் எவரும் ,சுயநலம் கருதி மக்கள் நலன்சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை. மாறாக தங்கள் பதவி ,அரசியல் வாழ்வு என்பனவற்றிக்காக தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்த வண்ணம் செயல்பட்டனர் .இன்று இவர்கள் போற்றப் பட்டாலும் உண்மையை ஒரு போதும் மறைக்கமுடியாது

உணர்வும், உறுதியும், நேர்மையும் , பொதுநலமும் உள்ளமக்கள் எமது மண்ணில் வாழும்வரை, பாதர் சந்திரா, வணசிங்கா ஐயா போன்றவர்களின் நினைவும், தன்னலம் கருதாத மக்கள் சேவையும் மறைக்கப்படமாட்டாது என்றும் பரம்பரைபரம்பரையாக நினைவில் நிலைத்து நிற்கும்.

காலவோட்டத்தில் தமிழ்த் தேசியம் கரைந்துவிடாது காக்கப்பட புல்லுருவிகளும், துரோகிகளும், இனப்படுகொலையாளர்களும் தூக்கி வீசப்படவேண்டும். இதற்கு எமது மண்ணில் வாழும் தமிழ்மக்கள் உறுதியான பதிலை தேர்தல் காலங்களில் வழங்க வேண்டும். அப்போதுதான் தமிழினத்தின் விடிவுக்கு, விலைபோகாத தலைவர்களை நாம் உருவாக்க முடியும்.

மதம் மொழி பார்க்காது மனிதனை நேசித்தம மனிதனின் மரணத்திற்காக ஓர்கணம் தலைசாய்த்து …..

எழுகதிர்

Friday, May 31, 2013

யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள நாசிக்களும் (Nazi)



சிங்களப் பயங்கர வாதிகளால் எம் அறிவுச் சொத்து அழிக்கப்பட்டு முப்பதிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது.

1981ம் ஆண்டு மே மாதம் 31 நள்ளிரவு முதல் யூன் மாதம் முதலாம் திகதிவரை தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப் பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது.

97,000க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். யார் பயங்கரவாதிகள் உலகமே?

தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளையும், வரலாற்று உண்மைகளையும் நாம் இங்கே ஆராய்ந்து பார்ப்பதோடு மட்டுமல்லாது, தேசிய இனங்களை ஒடுக்க முயன்ற பேரினவாத சர்வதேச அரசுகளின் செயல்களில் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதும் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இப்பேரழிவுச் செயல் நிகழ்த்தப் பட்ட யூன் மாதம் முதலாம் திகதிக்கு (1981) முதல் நாள் நடைபெற்ற விடயங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவையிரண்டையும் தர்க்க்pத்த பின்னர் இவற்றிற்கு முன்னோடியாக-ஏன் வழிகாட்டியாக இருந்த ஹிட்லரின் நாசி (Nazi) நடைமுறைகளையும், அதன் சட்டங்களையும், செயற்பாடுகளையும் சிறிலங்காவின் அரசுகளோடு ஒப்பிட்டுத் தர்க்கிக்க நாம் விழைகின்றோம்.

எல்லாவற்றிற்கும் முன்பாக தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் எவ்வாறு தோன்றியது, வளர்ந்தது என்பதைக் குறித்து எமக்கு கிடைத்த தகவல்களைத் தர விரும்புகின்றோம்.
1981ல் தீக்கிரையாக்கப் பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம்

1933ம் ஆண்டு மு.ஆ செல்லப்பா என்ற அன்புள்ளம் கொண்ட தமிழன் தன்னுடைய இல்லத்தில் இலவச நூல் நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் யாம் பெற்ற புலமைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் நல்லெண்ணத்தைத் தெரிவித்தார். செல்லப்பாவின் சிந்தனையை ஏற்றுக் கொண்ட பல அறிவு ஜீவித் தமிழர்கள், 1934ம் ஆண்டு யூன் மாதம் 9ம் திகதி ஒரு நூல் நிலையத்தை ஆரம்பித்தார்கள். அன்றைய நாட்களில் உயர் நீதிமன்ற நீதவானாக இருந்த திரு ஐசாக் அவர்கள் தலைவராகவும,; திரு செல்லப்பா அவர்கள் செயலாளராகவும் இந்த நூல் நிலையக் குழுவினராகத் தெரிவு செய்யப் பட்டார்கள்.

இந்த நூல் நிலைய நிர்வாகக் குழுவினரின் அயராத உழைப்பின் காரணமாக 1934ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியன்று, யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓர் வாடகை அறையில் 844 புத்தகங்களுடனும் 30 செய்திப் பத்திரிகைகள், மற்றும் சஞ்சிகைகளுடனும் ஒரு நூல் நிலையம் உருவானது. மிகவும் வயது குறைந்த இளைஞர்களினதும், வயது முதிர்ந்த முதியவர்களினதும் ஆர்வம் காரணமாகவும், ஆதரவு காரணமாகவும் இந்த நூல் நிலையத்தின் நூல்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. 1935ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணப் பிரதான வீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்திற்கு இந்த நூல் நிலையம் இடம் பெயர்ந்தது. 1936ம் ஆண்டு யாழ் மகாநகராட்சி மண்டபம் நிர்மாணிக்கப் பட்டது. இந்த நூல் நிலையம் இதற்கு அருகாமையில் உள்ள கட்டிடத்திற்கு மீண்டும் இடம் பெயர்ந்தது.

எரியும் நினைவுகள்

அந்தக் காலத்திலேயே, இந்த நூல் நிலையத்துக்குரிய சந்தா மூன்று ரூபாய்கள் ஆகும். ஆனால் அறிவுத் தாகம் கொண்ட தமிழர்கள்pன் ஆர்வத்துக்கு ஈடு செய்ய முடியாத அளவில் இந்த நூல் நிலையம் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நூல் நிலையம் விரிவாக்கப்பட வேண்டிய அவசியத்துடன் ஒரு நிரந்தரமான பாரிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எமது (அன்றைய) தமிழ் மக்கள் உணர்ந்தார்கள்.

அப்போது யாழ் மாநகரசபை முதல்வராக இருந்த திரு சாம் சபாபதி அவர்களின் தலைமையில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தத் திட்டமிடப் பட்டன. குதூகல விழா, இந்திய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி விழாக்கள், நல்வாய்ப்புச் சீட்டுக்கள் போன்றவற்றின் மூலமாக நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. எதிர்பார்த்ததையும் விட ஏராளமான தொகை திரட்டப்பட்டது. என்ற விடயத்தை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

1953ம் ஆண்டு, நூல் நிலையத்திற்கான நிர்வாகக்குழு ஒன்று தெரிவு செய்யப் பட்டது. வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்கள் இந்த நிர்வாகக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அன்னாரின் சிலை ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூல் நிலையத்தில் நிர்மாணிக்கப் பட்டது. 1981ம் ஆண்டு யூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட போது வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்களுடைய சிலையும் அக்காடையர்களால் சிரச்சேதம் செய்யப்பட்டது.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதியன்று இந்த நூல் நிலையத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது. திராவிடக் கட்டடக் கலை நிபுணரான மு.ளு நரசிம்மன் அவர்களைச் சென்னையிலிருந்தும், பேராசிரியர் இரங்கநாதன் அவர்களை டெல்லியிலிருந்தும், நூல் நிலைய நிர்வாகக்குழு அழைத்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றது. முதல் கட்டப் பணிகள் 1959ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நிறைவு பெற்றன. சிறுவர்களுக்கான பகுதி ஒன்று 1967ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப் பட்டது. 1971ம் ஆண்டில், நூல் நிலையத்தின் முதல் மாடியில் கூட்டங்கள் நடாத்துவதற்காக மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப் பட்டது.

இப்படிப்பட்ட கட்டிடமும் 97,000ற்கும் மேற்பட்ட அரிய நூல்களும், பழைய முக்கியமான சஞ்சிகைகளும் 1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதியன்று சிங்களப் பேரினவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. (மேற்கோள்: கட்டிடக் கலைஞர் ஏ.ளு.துரைராஜாவின் 1996ம் ஆண்டுக் கடிதம், மற்றும் சங்கம் இணையத் தளங்கள்)



மே மாதம் 31ம் திகதி நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற, தமிழர் விடுதலைக் கூட்டணித் தேர்தல் கூட்டத்தின் போது நடாத்தப் பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது ஒரு சிங்களப் பொலிஸ் கொல்லப் பட்டார். இதனை அடுத்து துரையப்பா ஸ்டேடியத்தில் நிலை கொண்டிருந்த சிங்களப் பொலிசார் யு சுப்பையா ரூ சன்ஸ் கடை உட்படப் பல கடைகளை உடைத்தும் எரித்தும், கொள்ளையிட்டும் அடாவடித்தனங்களில் இறங்கினர். நாச்சிமார் கோவில் தேருக்கு தீ மூட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பல பொதுமக்களின் வீடுகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தமிழர் கூட்டணியின் கட்சிச் செயலகம் தீயிடப்பட்டது. யாழ்;ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடும் வாகனமும் தீக்கிரையாக்கப் பட்டன.

இதற்கு அடுத்த நாள் இரவு யூன் 1ம் திகதி யாழ் நூல் நிலையத்தின் மூன்றாவது மாடி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த மூன்றாவது மாடியில் தான் கிடைத்தற்கு அரிய சுவடிகளும், மிக அரிய நூல்களும் இருந்தன. மிகவிரைவில் நூல்நிலையத்தின் சகல பகுதிகளுக்கும் தீ பரவியது.

யாழ் நூல் நிலையக் கட்டடத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டு அதனை முழுமையாக நாசமாக்கும் விதத்தில் நன்கு திட்டமிடப்பட்டே இப் பேரழிவு நடாத்தப்பட்டது. அன்றைய தினம் நடாத்தப்பட்ட கோர தாண்டவத்தில் ஈழநாடு பத்திரிகைக் கட்டிடம் உட்பட முக்கியமான புத்தகக் கடைகளும் எரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாணம் பெரிய கடை வீதியில் அமைந்திருந்த தமிழ்ப் புலவர்களின் சிலைகளும் சேதமாக்கப்பட்டன.

தமிழரின் பண்பாட்டு அடையாளங்கள் என்று கருதப்பட்ட விடயங்கள் மீதே சிங்களப் பேரினவாதிகள் தமது அழிவுத் தாக்குதல்களை நடாத்தினார்கள் என்பதில் ஐயமில்லை.

“தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர்கள் படிக்கின்ற நூல்கள் அன்று தீக்கிரையாக்கப்பட்டன.”

அன்றைய சிங்கள அரசினால் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட இந்த நாசகாரச் செயலை முன்னெடுக்கவும், கண்டு களிக்கவும் இரண்டு சிங்கள அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தமையாகச் சொல்லப்பட்டது. ஒருவர் சிறில் மத்தியூ. மற்றவர் காமினி திசநாயக்கா.

குடித்து வெறித்திருந்த சில பொலிஸ்காரர்கள் தாமாகவே திருட்டுச் செயல்களைப் புரிந்தார்கள் என்று அரசு தரப்பில் வியாக்கியானம் வேறு கொடுக்கப்பட்டது. திருடுகின்றவர்கள் தமக்கு ஆதாயம் தரக்கூடிய பொருட்களைத் திருடுவார்கள். நூல்களையா எரிப்பார்கள்.?

இந்த பண்பாட்டு அழிப்பினைத் தொடர்ந்து நடந்த அல்லது நடக்காத விடயங்கள் சில படிப்பினைகளைத் தந்தன. நூல் நிலைய அழிப்பு குறித்து உத்தியோக பூர்வ விசாரணைகள் எதையும் சிங்கள அரசு நடாத்த வில்லை. அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அந்த இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை பின்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் கொண்டுவர முயன்ற போது சிங்கள அரசு அவருக்கு எதிராகவே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தது.


சிங்களப் பாரளுமன்றத்தின் ஊடாக தமிழர்களுக்கு எந்தவிதமான நீதியோ நியாயமோ கிடைக்கப் போவதில்லை என்ற உண்மை மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியது.

இதன் பின்னனியில்தான் சிங்கள பேரினவாத அரசியல் சட்டங்களுக்கும் ஹிட்லரின் நாசிச் சட்டங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைத் தர்க்கிக்க விழைகின்றோம். சட்டங்கள் மட்டுமல்ல, அவையினூடாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1935ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம் திகதி நியூரம்பெக், ஜேர்மனியில் நடைபெற்ற நாசி மகாநாட்டில் சட்டமாக்கப்பட்ட சில விடயங்கள் பின்னாளில் அதாவது 1948, 1949களில் சிறிலங்கா அரசால் சட்டமாக்கப்பட்டன. உதாரணம் குடியுரிமை சட்டம் – இலங்கை

நூல்களை எரிக்கின்ற திருவிளையாடல்களையும், நாசிக்கள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதியன்று ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பேர்லின் நூல் நிலையத்திற்குச் சென்ற நாசிக்கள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம்தான்! சிங்களக் காடையர்கள் செய்தது போல, அவர்கள் (நாசிக்கள்) பேர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை.

யூத மக்கள் மீது ஜேர்மன் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட தாக்குதல்களையும், கொலைகளையும் கோயபல்ஸ் இவ்வாறுதான் நியாயப்படுத்தி வந்தார். ஏதொவொரு திடீர் உணர்ச்சி வேகத்தில் சிந்திக்காமல், திட்டமிடாமல், இவ்வாறான செயல்களைப் போர்வீரர்கள் புரிந்து விட்டார்கள். நாசிக்களின் இதே காரணத்தைத்தான் சகல சிங்கள அரசுகளும் இதுவரை சொல்லி வருகின்றன.

ஆப்கானிஸ்தானின் அன்றைய தாலிபான் அரசு மிகப்பழைமை வாய்ந்த புத்த சிலைகளை அழிக்க முனைந்தபோது, பண்பாட்டு மேன்மை குறித்து புத்த பிக்குகள் கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள். பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா பாகிஸ்தானுக்குப் பறந்தோடிச் சென்று புத்த சிலை அழிப்பை தவிர்ப்பதற்கு பாகிஸ்தானின் உதவியை நாடினார். கொழும்பு ஊடகங்கள் இதனை முன்னிலைப்படுத்தின.

ஆனால் விலை மதிப்பற்ற யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்ட போது மௌனம் தான் மொழியாகிற்று!

சுதந்திரம் பெற்ற நாடுகள் தமக்கு, தமது நாட்டுக்கு, தமது பண்பாட்டுக்கு ஏற்பட்ட அழிவுகளை வரலாற்று ரீதியாக நினைவு கூருவதற்காக மிக முக்கியமான அழிவுகளை ஞாபகப்படுத்தும் சின்னங்களைப் பாதுகாத்து வருவதை நாம் உலகளாவிய ரீதியில் காணக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட நினைவுச் சின்னமும் இப்போது எமக்கு இல்லை.

ஆயினும் வரலாறு மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை, ஒரே ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியே வந்திருக்கின்றது. சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகளிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதியான, நேர்மையான, நிரந்தரமான, நியாயமான, கௌரவமான சமாதானத் தீர்வு ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.

அன்புக்குரிய நேயர்களே! இக்கட்டுரைக்கு Tamil Nation, சங்கம் போன்ற இணையத் தளங்களில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள் பெரிதும் உதவின. குறிப்பாக திரு நடேசன் சத்தியேந்திரா, விலானி பீரிஸ், நேசையா போன்றோருக்கு எனது நன்றிகள். திரு சிவநாயகம் அவர்களின் Sri Lanka Witness to History என்ற நூலும் பல அரிய தகவல்களைத் தந்தது.

யாழ் நூலகம் : அழிக்கப்பட்ட அறிவுச் சுரங்கம்


தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகளை அழிப்பது தமிழர்களை அழிப்பதைக் காட்டிலும் முக்கியமானது – சிங்கள இனவெறியர்களுக்குச் சொல்லித் தரப்பட்ட சித்தாந்தங்களுள் இதுவும் ஒன்று. அத்தகைய கலாச்சாரக் குறியீடுகளுள் ஒன்று யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம். ஆசியாவின் மிகச்சிறந்த நூலகமாகக் கருதப்பட்ட நூலகம். ஈழத் தமிழர்களின் பெருமை, பெருமிதம், கௌரவம் என்று யாழ் நூலகத்தைச் சொல்லலாம்.

இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழர்களின் கல்வியறிவுக்கான ஆதாரப்புள்ளியாக அந்த நூலகத்தைத்தான் சுட்டிக்காட்டுவார்கள். அதுதான் சிங்கள இனவெறியர்களை உறுத்திக்கொண்டே இருந்தது. தமிழர்களின் முன்னேற்றத்துக்கு உத்வேகம் கொடுக்கின்ற அந்த நூலகத்தை என்றாவது ஒருநாள் தடம் தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள் வன்மம் வளர்த்துக் கொண்டிருந்தனர். தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்தனர்.

1981 ஆம் ஆண்டின் மே மாதம் யாழ்ப்பாணத்தில் மாவட்ட சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. பிரசாரம் உச்சத்தில் இருந்தது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிங்களக் காவலர்கள் வந்திருந்தனர்.31 மே 1981 அன்று தமிழர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சிங்கள காவலர் ஒருவர் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாது. எப்படி வந்தார்கள் என்று தெரியாது. கொத்துக் கொத்தாக வந்த சிங்களர்கள் தமிழர்கள் மீது ஆவேசத் தாக்குதலில் ஈடுபட்டனர். இங்கே சிங்களர்கள் என்றால் சிங்களக் காவலர்கள், ராணுவத்தினர், இனவெறியர்கள், வன்முறையாளர்கள் என்று அத்தனை பேரும் அடக்கம்.

முதலில் புத்தகக் கடைகளைக் குறிவைத்தனர். அடுத்தது, பத்திரிகை அலுவலகம். இலங்கையில் முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமைக்குரிய ஈழநாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையானது. யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலுக்குத் தீவைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது. அவருடைய வாகனமும் எரிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தின் தென்பட்ட தமிழர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் அனைத்தையும் நெருப்பு கொண்டு எரித்தனர்.

அதன்பிறகும் வெறி அடங்கவில்லை அவர்களுக்கு. அடுத்து எதை அழிப்பது என்று அலைந்த இனவெறியர்களின் கழுகுக் கண்களில் யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம் சிக்கியது. உற்சாகமடைந்த இனவெறியர்கள் யாழ் நூலகத்துக்குள் நுழைந்தனர். தடுத்து நிறுத்திய காவலாளியை நெட்டித் தள்ளினர். கைவசம் கொண்டுவந்த பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துப் பார்த்துத் தீவைத்தனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் சில சாட்சியங்கள் இருக்கின்றன.

நூலகத்தின் மேற்கு மூலை பகுதிதான் முதலில் எரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நூலகத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் எரியத் தொடங்கின. நூலகம் எரிகிறது என்றால் புத்தகங்கள் எரிகின்றன என்று அர்த்தம். புத்தகங்கள் எரிகின்றன என்றால் தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகள் எரிகின்றன என்று அர்த்தம். செய்தி கேள்விப்பட்ட தமிழர்கள் பதைபதைத்தனர்.

நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள், ஆவணங்களைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தினர் சிங்கள காவலர்கள். மேலிடத்து உத்தரவு அவர்களை அப்படிச் செய்யவைத்திருந்தது.




நூலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் அழிந்துகொண்டிருந்தது. நூலகத்துக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97000 நூல்கள் கருகிச் சிதைந்தன. மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சாம்பலாகின. கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன பொக்கிஷங்களில் அதிமுக்கியமானவை.

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பன்மொழிப் புலவர் தாவீது அடிகளார் அதிர்ச்சியில் மரணம் அடையும் அளவுக்கு இருந்தது யாழ் நூலக எரிப்பின் தாக்கம். நூலக எரிப்பை நேரடியாகப் பார்த்த பற்குணம் என்பவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. யாழ் நூலக எரிப்பு தமிழர்களின் மனத்தில் ஆற்றமுடியாத வடுக்களை ஏற்படுத்திவிட்டன. அந்த நூலகம் உருவான வரலாறு அப்படிப்பட்டது.

மனிதனுக்கு சுவாசிப்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியமானது வாசிப்பது என்பதில் ஈழத்தமிழர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்கள். அதன் காரணமாகவே 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முதல் நூலகம் உருவாக்கப்பட்டது. அந்த நூலகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையாவிட்டாலும்கூட புத்தகங்கள் வாசிப்பதில் தமிழர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடவில்லை. அதன் காரணமாகவே பெரிய நூலகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் உருவாக்க விரும்பினர்.

ஆர்வம் கொண்ட இளைஞர்களும் பொதுநல ஆர்வலர்களும் நூலகம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிய அளவில் கட்டப்பட்ட அந்த நூலகம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தது. பொதுமக்களிடம் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டே நூலகக் கட்டடம் வளரத் தொடங்கியது. நூலகத்தை நிர்மாணிக்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் நரசிம்மன் ஈடுபட்டார். அமைதியான வாசிப்புக்குத் தேவையான அத்தனை வசதிகளுடனும் கூடிய யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகம் 11 அக்டோபர் 1959 அன்று வாசிப்புக்குத் திறந்துவிடப்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூல்கள் வந்துசேர்ந்தன. புத்தக ஆர்வலர்கள் சேமித்துவைத்திருந்த புத்தகங்களும் பத்திரிகைப் பிரதிகளும் யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன. அரிய நூல்களும் ஆவணங்களும் அங்கு பாதுகாக்கப்பட்டன. தமிழ் இளைஞர்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கு யாழ் நூலகம் பேருதவி செய்தது.

ஏராளமான இளைஞர்கள் நூலகத்துக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வாசிப்பது தமிழர்களின் தினசரி நடவடிக்கைகளுள் ஒன்றாக மாறிப்போனது யாழ் நூலகத்தின் வருகைக்குப் பிறகுதான். யாழ் நூலகத்தைப் பார்த்து பரவசம் அடைந்த தமிழ் இளைஞர்கள், அதேபோன்று இல்லாவிட்டாலும் சிறிய அளவிலான நூலகங்களையும் வாசக சாலைகளையும் தத்தமது பகுதிகளில் உருவாக்க ஆர்வம் செலுத்தினர்.

தமிழர்களின் வாசிப்பு ஆர்வமும் கல்வியறிவும் சிங்கள அரசாங்கத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்தன. தமிழர்கள் படிப்பதால்தான் சிந்திக்கிறார்கள். சிந்திப்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள். போராட்டத்தில் இறங்குகிறார்கள். உரிமைக்குரல் எழுப்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவர்களுடைய கல்வியறிவு. அதற்கு உந்துசக்தியாக இருப்பது அந்த யாழ் நூலகம். அதை அழித்துவிட்டால் தமிழர்களின் எதிர்காலத்தையே சீர்குலைத்துவிடமுடியும் என்று கணித்தனர்.

நூலகத்தை எரிக்கும் பொறுப்பு இரண்டு அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிறில் மேத்யூ மற்றும் காமினி திசநாயகா என்ற இரண்டு அமைச்சர்கள் களத்தில் இறங்கினார்கள். (பின்னாளில் அதிபரான ரணசிங்கே பிரேமதாசா கொடுத்த வாக்குமூலம் இது) கொழும்புவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள வன்முறையாளர்களை யாழ்ப்பாணம் நகரத்துக்கு அழைத்துவந்து தங்கவைத்தனர். என்ன செய்வீர்கள் என்று தெரியாது.. யாழ் நூலகம் எரிக்கப்படவேண்டும். இதுதான் அந்த வன்முறையாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த உத்தரவு.

தகுந்த தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தனர் வன்முறையாளர்கள். அந்த நேரம் பார்த்து போலீஸாருக்கும் தமிழர்களுக்கும் மோதல் மூண்டது. இதுதான் சமயம் என்று மின்னல் வேகத்தில் களமிறங்கினர் வன்முறையாளர்கள். அமைச்சர் இட்ட உத்தரவை அப்படியே நிறைவேற்றி முடித்தனர்.

நூலகத்தை எரித்த நெருப்பு தமிழர்களின் நெஞ்சுக்குள் பரவியது. தங்களுடைய உரிமைக்குரலை உரத்து எழுப்பியது நூலக எரிப்புப் பிறகு என்றே சொல்லலாம். பாவத்துக்குப் பரிகாரம் தேடும் முயற்சியாக யாழ் நூலகத்தை மீண்டும் கட்டியிருக்கிறது சிங்கள அரசு. செங்கல். சிமெண்ட். மேசை. நாற்காலி. எல்லாம் புதிதாக வந்துவிட்டன, அழிந்துபோன அரிய ஆவணங்களைத் தவிர!

ஆர். முத்துக்குமார்

Thursday, May 30, 2013

இரவுப்பறையாக பறந்து இயக்கத்தை காத்து, போராட்டத்தை வளர்க்கப் பாடுபட்டவர் மேஜர் சுருளி


இராணுவ வாகனங்கள் யாழ்.நகர வீதிகளில் அரக்கத்தனமாக வலம்வரும் காலம், ஒளிந்தும், மறைந்தும் புலிகள் இயங்கிய நாட்கள், இரவு வருவதற்காக போராளிகள் காத்திருப்பர்கள். இரவுக்காக காத்திருக்கும் புலிகளில் ஒருவன் சுருளியும் ஒருவன்.

அவனது போராட்ட வாழ்வு பெரும்பாலும் இரகசியம் நிறைந்ததும், மறைவானதுமாகவே இருந்தது.

அன்றைய இரவுகள் மிகப்பயங்கரமானவை, எந்த வீதியிலும், எங்கும் இராணவ ஓநாய்கள் வாய்பிழந்து நிற்கும், சில நேரங்களில் இரவின் அமைதியை துப்பாக்கிகளின் வேட்டுக்கள் கலைக்கும். ஒரு போராளியோ, அல்லது ஏதாவதுதொரு வேலைக்குப் போன தமிழ் மகனோ வீதியை முத்தமிட்டுக் கிடப்பான்.

சுருளி இயக்கத்திற்குள் தன்னை இணைத்துக் கொண்டதுமே அவனுக்கு கிடைத்த வேலை, எமது இயக்கத்தின் பெறுமதிமிக்கவையான இராணுத் தளபாடங்கள், ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பாகும். அந்த நேரங்களில், எம்மிடமிருந்தவையே சில ஆயுதங்கள் தான். அவற்றை இழந்துவிட நாம் ஒருபோதும் தயாராக இல்லை ஏன் என்றால், எங்கள் விடுதலைப் போராட்டத்தை வளர்த்தெடுக்கும் உன்னதமான கருவிகள் அவை. அவற்றைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு போராளியும் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். அப்படிப்பட்டதொரு பொறுப்பான வேலைதான் சுருளிக்கும் கிடைத்தது.

பண்டிதர் அவர்கள் தான் அந்த நாட்களில் இயக்கத்தின் பல்வேறு வேலைகளுக்கு பொறுப்பாக நின்று செயல்பட்டுக்கொண்டிருந்தார். அந்த நெருக்கடிமிகுந்த நேரமிகுந்த நேரங்களில் பண்டிதர் அவர்களுக்கு உறுதுணையாக நின்று செயற்பட்டவர்களில் சுருளியும் ஒருவன். பண்டிதருக்கு சுருளி ஒரு செல்லப்பிள்ளை, பண்டிதர் அவனில் மிகுந்த அன்பை வைத்திருந்தார். அதேநேரம் பெரும் நம்பிக்கையும் வைத்திருந்தார். அவரின் கைகளிற்குள் நின்று சுற்றிச் சுழன்று வேலை செய்தவன் சுருளி. அவரின் கைகளிற்குள்ளேயே வளர்ந்தவன், அவனைப் போன்ற இரவுப்பறைகளின் பறப்புகள் தான் இயக்கத்தை காத்தது, போராட்டத்தையும் வளர்த்தது.

இயக்கத் தளபாடங்களை பாதுகாத்தல் எனபது இலகுவானது தொன்றல்ல, மிகவும் கடினமான பணி, இரவு முழுவதும் ஆந்தை மாதிரி கண்விழித்து வேலை செய்ய வேண்டும். மழையிற்கும், வெயிலுக்கும் பாதுகாக்க வேண்டும். அதே நேரம் எதிரியின் கழுகுக் கண்களிற்கும் மறைக்கவேண்டும். இதில் ஏற்படும் சின்னத்தவறு கூட இயக்கம் ஒர் ஆயதத்தை இழக்க வேண்டய நிலையை ஏற்படுத்தலாம்.


சுருளி எவருடனுமே இலகுவாகப் பழகுவான், அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிடுவான். அவனது அந்த இயல்பே அவனுக்கு வழங்கப்பட்ட வேலைக்கு பெரும் உதவியாக இருந்தது. அவனுடைய தோழர்கள் அவனைக் கேலி செய்வதுண்டு, எப்போதுமே சிரித்தபடி திரிகிறாயடா என்று, கள்ளங் கபடமற்ற இந்தப் பிறவி ஒர் உயர்ந்த போராளியாக வாழ்ந்தான்.

அந்த நேரத்தில் தான் ஒரு கடுமையான சுற்றிவளைப்பிற்கு உட்பட்டு பண்டிதர் அவர்களையும், எங்களின் சில தோழர்களும் வீரமரணத்தை சந்தித்தார்கள். பண்டிதர் அவர்களின் வீரமரணம் சுருளியை நன்றாகவே பாதித்திருந்தது. இயக்கத்திற்கு வந்தநாள் தொடக்கம் பண்டிதருக்கு பக்கத்திலேயே திருந்த அவனால் அவரின் இழப்பை தாங்க முடியாமல் இருந்தது. அன்று தொடக்கம் எத்தனையோ இரவுகளில், பண்டிதரின் நினைவுகள் இவனது விழிகளை நனைத்திருக்கிறது.

பண்டிதரின் வேலைகளை மேஜர் அல்பேட் பொறுப்பேடுத்த பொழுது, அல்பேட்டுடன் இணைந்து சுருளியும் வேலைகளில் ஈடுபட்டான். யாழ். பொலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடாத்திய பொழுது அல்பேட்டின் தலைமையில் சுருளியும் கலந்துகொண்டான் அந்த நேரங்கள் தான், இராணுவ முகாம்களை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தகாலம். அச்சந்தர்ப்பங்களில் பல தாக்குதல் நடவடிக்கைகளில் சுருளியும் ஒருவனாக பங்குபற்றினான்.

சுருளி ஒரு சாதாரண சுருட்டுத் தொழிலாளியின் மகன். யாழ் மாவட்டத்தில் உள்ள சுதுமலை கிராமம் தான் அவனின் பிறப்பிடமாகும். அங்குள்ள அம்மன் கோயிலடி வீதியிலும், மழை வெள்ளக் காலங்களில் வயல் வெளிகளிலும் விளையாடித்திருந்த இவனின் நெஞ்சத்தில் விடுதலை உணர்வும் துளிர்க்கத் தொடங்கியது.

அது ஆயதப்போராட்டத்தின் ஆரம்ப காலம், விடுதலை இயக்கம் எது, சமூக விரோதக் கும்பல்கள் எதுவென பிரித்தறிய முடியாத நிலை, நரிகளெல்லாம் புலி வேசம் போட்டு நின்றன. உண்மையான விடுதலை இயக்கமொன்றுடன் தன்னை இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற தாகம் சுருளியில் படிந்து கொண்டது, அவனுடன் அவனது கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களுகளும் இணைந்து கொண்டார்கள்.

அவர்கள் அறிந்துகொண்டதெல்லாம் தலைவர் பிரபாகரனைப் பற்றி, அவரின் வீரத்தனைப் பற்றி, அவரால் வகுக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் பற்றித்தான், புலிப்படைத் தேடி அவர்கள் அலைய வெளிக்கிட்டார்கள். புலிகள் மட்டும் கண்ணுக்குத் தெரியவே இல்லை, மற்றும் படி எல்லா இயக்கத்தவர்களும் கால்களிற்குள் நின்றனர். "இயக்கத்தில் சும்மா ஆள்ப்பொலிவுக்கு சேரக்கூடாது. செயல்படவேண்டும், ஒழுங்கும், கட்டுப்பாடும் வேண்டும், அத்தோடு விடுதலைப் போராட்டத்தை கொண்டு செல்லுகிற உறுதியும் தீவிரத்தன்மையும் வேண்டும் இதை எல்லாம் பார்த்துத் தான் நாங்கள் இயக்கத்தில் சேரவேண்டும்" என்று கூறித் தன் நண்பர்களை தவறான வழிகளிற்கு சென்று விடாமல் பார்த்துக்கொண்டான் சுருளி.

இறுதியில் அவன் தான் எங்கோ அலைந்து திரிந்து புலிகளில் ஒருவரை சந்தித்துக் கொண்டான். அந்த நேரங்களில் தான், ஒருநாள் மானிப்பாய் கிராமங்களை துப்பாக்கி வேட்டோசைகள் கண்விழிக்கச் செய்தன. காலை 6 மணிக்கு பிரயாணிகள் பேரூந்தொன்றை மறித்த பச்சைப் பேய்கள் அதிலிருந்தவர்களை இறக்கி, வரிசையில் நிற்க வைத்துச் சுட்டுக்கொன்றனர்.

காலையில் படிப்பதற்காக வந்தமாணவர்கள், பேரூந்துச்சாரதி இன்னும் பொது மக்கள்கள் சிலர்- உடல் சிதறி உயிரற்றுக் கிடந்தார்கள். அந்த இராணுவ மிருங்கள் இந்தச் செய்தியைத் தெரியாமல் வந்த மினி பஸ் ஒன்றையும் மறித்து அதில் ஏறினர். அந்த மினி பஸ் மானிப்பாயிலிருந்து மாதகல் இராணுவ முகாமை நோக்கி ஒட வெளிக்கிட்டது அங்கே ஒர் துயரம் நிறைந்த சம்பவம், அந்த பஸ்ஸிற்குள் இருந்த ஒவ்வொரு தமிழனும் கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு சுடப்பட்டு வீதிவீதியாக வீசப்பட்டார்கள். அந்தப் பச்சை மிருங்களின் கோரப்பற்கள் எங்கள் தேசத்தின் வீதிகளைச் சிதைத்துச் சென்றன.

அந்தச் சம்பவத்தின் பின்பு, வெளியில் வாழ்வதற்கு சுருளியின் மனம் இடந்தரவில்லை, அவன் ஒரு முழுமையான போராளியாக மாறிவிட்டான். பண்டிதருடன் இணைந்து வேலைசெய்யத் தொடங்கினான். காலங்கள் ஓடின, விடுதலைப் போராட்டம் தொடர்ந்தது. சுருளியின் தம்பிகளில் ஒருவனான ரதிதரனும் புலிகளுடன் இணைந்து கொண்டான்.

இந்தியப் படை தமிழீழத் தேசத்தின் மீது ஆக்கிரமிப்பை நடாத்தி, ஒர் போரைத் தொடங்கிய நேரம் எம் தேசமெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், தமிழ்ப் பெண்களில் பலர் படுமோசமாக பாலியல் வன்முறைக்காளானார்கள். இந்த மண்ணை நேசித்தவர்கள் பிடித்துச் செல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டார்கள், தமிழீழ தேசத்தில் விலக இடமின்றி இந்தியர்கள் நிறைந்து போய் நின்றார்கள்.

அந்த நிலைகளில் ஆயுத தளபாடங்களையும், ஆவணங்களையும் பாதுகாக்க சுருளியும் அவனது தோழர்களும் கடுமையாக போராடினார்கள், அந்த நாட்களில் அவர்கள் விடுதலைப் போராட்டத்தை பாதுகாத்தார்கள், அதற்காக ஆயுதங்களைப் பாதுகாத்தார்கள். சில நாட்கள் சென்றன, இந்தியப் படைகள் சுருளியைத் தேடத் தொடங்கினார்கள். சுருளியின் வீடு அடிக்கடி சுற்றிவளைக்கப்பட்டது. போராட்டத்திற்காக இருவரைத் தந்த அவனின் குடும்பம் கொடுமையான சித்திரவதைக்காளானது. பல வருடங்களாக இருந்த பகையுணர்வை சமூகவிரோதி ஒருவன் இந்தியர்களுடன் சேர்ந்து நின்று தீர்க்கத் தொடங்கினான்.


அப்போது தான் ஒரு நாள் சுருளியின் தம்பி ரதிதரனும், அவனது தோழர்களும் இந்தியப்படைகளாலும், தேசவிரோதிகளாலும் சுற்றி வளைக்கப்பட்டார்கள், சின்னதொரு சண்டை அதில் ரதிதரனின் உடலிலும் சில ரவைகள் பட்டன, அவனது தோழர்கள் தப்பிச் சென்றார்கள், ரதிதரனின் உயிரற்ற உடலை இந்திய படையினர் வீதியால் இழுத்துச் சென்றார்கள். இந்த மண்ணை நேசித்த போராளி ஒருவன் தேசவிரோதிகளாலும், இந்தியர்களாலும் இந்த தேசத்தின் தெருக்களின் வழியே இழுத்துச் செல்லப்பட்டான்.

இந்திய இராணுவத்தினர் இங்கு நின்ற போது, சில காலம் வன்னியில் நின்ற சுருளி, மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்து செயல்படத் தொடங்கினான். ஆபத்து நிறைந்த அந்த நேரத்தில் சுருளியும், அவனது தோழர்களும், மிக அவதானமாகச் செயல்பட வேண்டி இருந்தது. தேசவிரோதிகளும் இந்தியர்களும், வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி முகாமிட்டு நின்றார்கள், தமிழீழ மக்கள் இந்தியத் துப்பாக்கிகளின் முனைகளில் நின்று வாழ்ந்தனர்.

அந்த நேரம் தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களை மறைவில் இருந்து எடுக்க வேண்டியிருந்தது. ஏனையவற்றைப் பாதுகாக்கவேண்டியிருந்தது. இதற்காக சுருளியும் அவனது நண்பர்களும் நம்பிக்கையானவர்களைத் தேடி அலைய வேண்டியிருந்தது.

இந்தியப் படைகள் ஈழமண்ணை விட்டு வெளியேறிய பின்பு, புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இணைந்து சுருளி செயற்பட்டான். சுருளிக்கு கொடுக்கப்படும் வேலைகளைப் பொறுப்புணர்ச்சியுடன், சிறப்பாகச் செய்து முடிப்பவன். பண்டிதரிடமிருந்து இவனிடம் தாவிக்கொண்டத்தில் ஒன்று எளிமை.

தன்னைக் கவனியாது, ஒரு சைக்கிளில் கிராமத்து வீதிகளில் ஏதோ ஒரு வேலைக்காக ஓடித்திரியும் சுருளி... ஒரு வெடி விபத்தில் சிக்கினான். மூன்று நாட்கள், அவன் சாவுடன் போராடினான், ஆனாலும் 30.05.1991 அன்று மேஜர் சுருளி வீரமரணத்தைச் சந்தித்துக் கொண்டான்.

Wednesday, May 29, 2013

நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்? - மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 10



ஈழப் பிரச்னை தொடர்பான விவாதங்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு ஓர் அறிக்கையைத் தயாரித்து, அந்தக் கட்சியின் உறுப்பினர்களுக்குக் கடந்த ஆண்டு அனுப்பியது. கட்சியின் முழுமையான நிலைப்பாட்டை உள்வாங்கிக்கொள்ள இது பயன்படும். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை தொடர்பான அறிக்கையை, சர்ரியலிஸ பாணியில் எழுதியிருக்கிறார்கள். வரலாற்றை வரிசையாகவும் விமர்சன ரீதியாகவும் சொல்லாமல் புரிய வேண்டிய இடங்களில் மறைத்தும், தெளிய வேண்டிய இடங்களில் திரித்தும் இருக்கிறது அந்த அறிக்கை.

'வர்க்கக் கண்ணோட்டத்துடன் ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலுடன் கூடிய அரசியல் நிலைப்பாட்டைக் கட்சி எடுப்பதால், அதிகம் விமர்சனத்துக்குள்ளாகிறது. கட்சியைத் தனிமைப்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன’ என்கிறது அந்த அறிக்கை.

அதாவது, 'தனித் தமிழீழத்தை நாம் ஏற்பது இல்லை, விடுதலைப் புலிகளை நாம் ஆதரிப்பது இல்லை, எனவேதான் நாம் விமர்சிக்கப்படுகிறோம்’ - என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்குத்தானே காரணம் கற்பித்துக்கொள்கிறது. 'செம்மலர்’ பேட்டியிலும் இதை ஜி.ராமகிருஷ்ணன் சொல்கிறார்.

மார்க்சிஸ்ட்கள் மீதான விமர்சனம் இந்த இரண்டு காரணங்களுக்காகவும் இல்லை. அவர்கள் விமர்சிக்கப்படுவதற்குக் காரணம், ஈழப் பிரச்னையின் உண்மையான நிறத்தைச் சொல்ல மறுப்பதுதான். நோய் என்ன என்று சொல்வதிலேயே முரண்பாடுகொண்டவர்களால், தீர்வை மட்டும் சரியாக எப்படிச் சொல்ல முடியும்?

தமிழ் ஈழத்தை அங்கீகரிக்காத விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்கின்ற அமைப்புகள்கூட, இந்தத் தளத்தில் இயங்குகிறார்கள். தமிழர்களை ஒடுக்கிய சிங்களப் பேரினவாதக் கூட்டத்தை மிகத் தெளிவாக அம்பலப்படுத்திவருகிறார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னமும் மையமாகவே பேசி வருகிறது. 'இறுதிக் கட்டத்தில் நடந்த கடுமையான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பாளிகள் அடையாளம் காணப்பட்டு, உரிய தண்டனை தரப்பட்ட வேண்டும். இதற்கு நம்பகத்தன்மையுடன் கூடிய சுயேச்சையான உயர்மட்ட விசாரணை நடத்த இலங்கை அரசு முன்வர வேண்டும்’ என்று சொல்கிறார் உ.வாசுகி.

மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றம் செய்த பொறுப்பாளிகள் என்றால், யார்? இத்தனை லட்சம் பேரை இலங்கையில் கொன்று விட்டு யாராவது தப்பிப் போய்விட்டார்களா என்ன? இலங்கை அரசாங்கம் இதை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால், கொலை செய்ததற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லையா? இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதீத அக்கறைதான் அந்தக் கட்சியைத் தனிமைப்படுத்திக் காட்டுகிறது. தமிழர் படுகொலைகள் பற்றிப் பேசினால், 'சிங்களவர்களும்தானே அங்கு பாதிக்கப்படுகிறார்கள்’ என்று சொல்லும் அந்தக் கட்சி, தமிழகத்தில் இரண்டு புத்த பிட்சுகள் தாக்கப்பட்டதை, 'இனவெறி தலைதூக்கிவிட்டது’ என்று கண்டிக்கிறது. இந்த இரட்டை நிலைப்பாடுதான் கண்டிக்கப்படுவதற்குக் காரணமே.

1. இலங்கையில் சிங்களர், தமிழர் ஆகிய இரண்டு தேசிய இனங்கள் உண்டு.

2. இலங்கையில் நடந்தது மிகக் கொடூரமான இனப்படுகொலை.

-இவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதுதான் இங்கு மிக முக்கியமான முரண்பாடு. தமிழீழத்தை அவர்கள் ஆதரிப்பது அல்லது மறுப்பது, விடுதலைப் புலிகளை ஆராதிப்பது அல்லது நிராகரிப்பது அல்ல பிரச்னை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள ஆவணத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகமே இல்லை. உ.வாசுகியும் கவனமாக அதைத் தவிர்க்கிறார்.

இலங்கையில் நடந்த படுகொலைகளை, வெறுமனே 'தேசியப் பிரச்னை’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்ல முடியுமா? தேசியப் பிரச்னை என்றால், அது தேசிய இனப் பிரச்னையா, தேசிய வர்க்கப் பிரச்னையா, தேசிய மதப் பிரச்னையா, தேசிய வர்ணப் பிரச்னையா... என்ன பிரச்னை?

மருத்துவரிடம் போனால் 'வலிக்குது டாக்டர்’ என்றா சொல்வோம். தலை வலியா, கழுத்து வலியா, வயிற்று வலியா, கால் வலியா... என்ன வலி என்று அடையாளப்படுத்துவது இல்லையா? ஓர் உயிருக்கான உடல் நோவையே குறிப்பிட்டு விளக்கும்போது, லட்சக்கணக்கானவர் கொல்லப்பட்ட பிரச்னையை தேசியப் பிரச்னை என்று சொல்வதன் உள் அர்த்தம், அது புரிந்துவிடக் கூடாது என்பதுதானே?

இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், என்ன ஆகும்? இன ரீதியான தீர்வைச் சொல்ல வேண்டும். அதனால் மனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்று சொல்கிறார்கள். போர் நியாயமானது என்று ஒப்புக்கொண்டால்தான், அதில் நடந்த தவறுகள் குற்றங்கள் ஆகும். போரை நியாயமானது என்று ஒப்புக்கொள்கிறார்களா?

மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் போன்ற வார்த்தைகள் இலங்கைக் கொடூரத்துக்குக் கொஞ்சம்கூட பொருந்தாதவை. 1980 முதல் 2008 வரை 80 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இறுதி யுத்தத்தில் மட்டும் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் கொலைசெய்யப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 56 ஆயிரம் பேர் வடக்கு மாகாணத்தில் அநாதைகள். வடக்கு, கிழக்கு இரண்டிலும் 60 ஆயிரம் பெண்கள் விதவைகளாகினர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பெற்றோர் இல்லை. கொல்லப்பட்டும், கொல்லப்படாமலும், விதவை ஆக்கப்பட்டும், அநாதை ஆக்கப்பட்டும்கிடக்கும் மொத்தப் பேருமே தமிழர்கள். கடந்த 30 ஆண்டு காலத்தில் முடிந்த வரை கருவறுத்து முடித்துவிட்டனர். இதை இனப்படுகொலை என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?

'முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசு முகவர் அலுவலகக் குறிப்பின்படி, 2008 அக்டோபர் மாதம் வன்னியின் மக்கள் தொகை 4,29,059. போர் முடிந்த பிறகு இலங்கையின் முகாமுக்குள் வந்தவர்களின் கணக்கு 2,82,380. அப்படியானால் 1,46,679 பேரின் கதி என்ன?’ என்று மன்னார் மாவட்ட கத்தோலிக்க பாதிரியார் ராயப்பா ஜோசப், இலங்கை அரசாங்கம் அமைத்த விசாரணைக் குழுவில் கேட்டார். அந்த 1,46,679 பேர்தான் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள்.

விழுப்புரம் காவல் நிலையத்தில் ஒரு கைதி அடித்துத் துன்புறுத்தப்படுவதை மனித உரிமை மீறல் என்று குற்றம் சாட்டுவோம். 1,46,679 பேர் கொலையையும் மனித உரிமை மீறல்கள் என்று சொன்னால், அதைவிட மனச்சாட்சிக்கு விரோதமான செயல் வேறு இருக்க முடியுமா?

சர்வதேச இனப்படுகொலை தடுப்புத் தண்டனைச் சட்டம், எது இனப்படுகொலை என்பதை வரையறுக்கிறது.

'ஒரு தேசிய இனம் அல்லது மதக் குழுவின் ஒரு பகுதியை அல்லது முழுவதும் அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகின்ற செயல்கள் இனப்படுகொலை ஆகும். அந்த இனக் குழுவின் உறுப்பினர்களைக் கொலை செய்தல், உடல், உளரீதியாக அந்த இனக் குழுவின் உறுப்பினர்களுக்குத் தீங்குசெய்வது, வேண்டுமென்றே அந்தக் குழுவின் வாழ்க்கை நிலையில் தாக்குதல் தொடுத்து, பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ திட்டமிட்ட உடல்ரீதியான அழிவை ஏற்படுத்துதல், அந்தக் குழுவுக்குள் பிறப்புகளைத் தடுக்கும் நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்தல், அந்தக் குழுவிலுள்ள குழந்தைகளை வேறு குழுக்களுக்குக் கட்டாயமாக மாற்றுதல் - ஆகிய எந்த ஒரு செயலும் இனப்படுகொலை வரையறைக்கு உட்பட்டது’ என்று சொல்கிறது. இதன் ஒவ்வொரு சொல்லும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றே சொல்லுமே. இதைப் புரிந்துகொள்ளும் சக்தி மார்க்சிஸ்டுகளுக்கு இல்லாமல் போனது ஏன்? வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் என்ற அமைப்பு, 1956 முதல் 2008 வரை நடந்த அனைத்து இனப்படுகொலைச் சம்பவங்களையும், தேதிவாரியாகக் கொல்லப்பட்ட தமிழர்களின் பெயர்களுடன் வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்தால் மனச்சாட்சி உள்ளவர்கள் கலங்கிப்போவார்கள். மார்க்சிஸ்டுகள் அதைப் பார்க்கட்டும்.

இனப்படுகொலை என்று இதைப் பார்க்க மறுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய அறிக்கையில், விடுதலைப் புலிகளை அடக்குவதற்காகத்தான் இந்த போர் நடத்தும் சூழ்நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டது என்றும் காரணம் சொல்கிறது. ' புலிகளின் வன்முறையை எதிர்கொள்ள இலங்கை அரசு ராணுவரீதியில் தன்னைத் தயார்செய்துகொண்டது’ என்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தையே, 'இலங்கை அரசுக்கும் எல்.டி.டி.இ. அமைப்புக்குமான உள்நாட்டு யுத்தம்’ என்று அடையாளப்படுத்துவதைப் போல வரலாற்று அசிங்கம் வேறு இருக்க முடியாது. புலிகள் அமைப்பு 1972-ல் மெள்ள உருவாகி, 1980-களின் தொடக்கத்தில் நிர்வாகக் கட்டமைப்புகொண்டதாக மாறி, 80-களின் இறுதியில் ஆயுத பலம்கொண்டதாக மாறுகிறது. அப்படியானால் அதற்கு முன் செத்தவர்கள் எல்லாம் தங்களைத் தாங்களே கொலை செய்துகொண்டார்களா? 1950 முதல் 1975 வரை அகிம்சைப் போராட்டம் நடந்தது. 1980 முதல் 2009 வரை ஆயுதப் போராட்டம் நடந்தது. அகிம்சைப் போராட்டம் ஆரம்பித்தபோது, பிரபாகரன் பிறக்கவே இல்லை. தமிழீழத்தை ஈழத் தந்தை பிரகடனம் செய்தபோது, போராளி அமைப்புகள் எதுவும் பலமாகவே இல்லை. நிராயுதபாணியாக நின்ற தமிழர்களை நித்தமும் அடித்து அடித்து ஆயுதம் தூக்கவைத்தார்கள். இதைத்தான், 'நான் என்ன ஆயுதம் தூக்க வேண்டும் என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான்’ என்றார் மாவோ. இதைத்தான் லெனின், நீதியான போர், அநீதியான போர் என்று பிரித்துச் சொல்வார்.

இந்தப் பின்புலம் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளாமல், புலிகள் ஆயுதம் தூக்கியதால் இலங்கை ராணுவம் குண்டு போட்டது என்று தாக்குதலையும் எதிர்தாக்குதலையும் இடம் மாற்றிப் போடும் தந்திரம் மார்க்சிஸ்ட்களுக்கு அவசியம் இல்லாதது. தன்னுடைய வரலாற்றுக் கடமையை மறைக்க மட்டுமே இது உதவும்.

இன்னொன்றையும் அந்த அறிக்கை சொல்கிறது, 'இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னை. எனவே, சர்வதேசப் பிரச்னை என்ற முறையில் இங்கிருந்து தலையிடுவதற்கு ஓர் எல்லை உண்டு’ என்று.

அப்படியானால், இலங்கைக்கு இந்திய அமைதிப் படை அனுப்பிவைக்கப்பட்டதை அந்தக் கட்சி அப்போது வரவேற்றது ஏன்? உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியாவுக்கு என்ன வேலை என அன்று ஏன் கேட்கவில்லை? இதைவிடக் கொடுமை....

'இலங்கைக்கு ஆயுதங்களை இந்தியா விற்பனை செய்யலாம்’ என்ற அரிய ஆலோசனையை வழங்கியவரும் ஒரு மார்க்சிஸ்ட் தலைவர்தான். 2000, ஜூன் மாதத்தில் விடுதலைப்புலிகளின் ராணுவரீதியான தாக்குதலில் தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை ராணுவம் ஆனையிறவு முகாமை இழந்தபோது உள்ளம் பதறிப்போய் இப்படிக் கோரிக்கை வைத்தவர், மரியாதைக்குரிய மார்க்சிஸ்ட் தலைவர் உமாநாத். அவரது மகள் உ.வாசுகி இப்போது சொல்கிறார், 'அந்த மக்களுக்கு எது தேவையோ, அதை அவர்கள் தீர்மானித்துக்கொள்வார்கள்’ என்று.

தமிழன் படுகொலை செய்யப்படும்போது 'அது அவர்களது உள்நாட்டுப் பிரச்னை’ என்பதும், இலங்கை ராணுவம் தோல்வியைத் தழுவும்போது, 'இந்தியா ஆயுதம் விற்கலாம்’ என்றும் ஆலோசனை சொல்வதும் யாருடைய நலனைப் பிரதிபலிக்கிறது? நமக்கு எதற்கு ஆயுதத் தரகு வேலை? ஆயுதம் விற்கலாம் என்று சொன்னால், இலங்கை அரசாங்கம் செய்வது அனைத்தும் சரியானது என்று அந்தக் கட்சி நம்பியதா? 'உமாநாத் அன்று சொன்னதைத்தான் நாங்கள் இன்று செய்தோம்’ என்று மன்மோகன்சிங் சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? ஜூன் மாதம் இந்த ஆலோசனையை உமாநாத் சொன்னார். டிசம்பர் மாதம் மிருசுவில் என்ற இடத்தில் ஒரு புதைகுழி தோண்டப்பட்டு, எட்டுப் பிணங்கள் எடுக்கப்பட்டன. ஒரு கை எலும்பு கிடைத்து, அந்த இடத்தைத் தோண்டியபோது எட்டுப் பேரின் எலும்புகள் கிடைத்தன. இந்தக் காட்டுமிராண்டித் தனத்துக்கா ஆயுதம் கொடுக்கச் சொன்னீர்கள்? அது என்ன சோஷலிஸ அரசா? தமிழர்கள், சோஷலிஸ அரசைக் கவிழ்க்கச் சதிசெய்தார்களா? ஏகாதிபத்தியம் அந்த ஆட்சிக்கு எதிராகத் தமிழர்களைத் தூண்டியதா?

இலங்கைக்கு ஆயுதம் விற்பனைசெய்ய மாட்டோம் என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி முடிவை எடுத்தவர் 'மதவாத’ப் பிரதமர் வாஜ்பாய். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 'இடதுசாரி’ சுர்ஜித் அதை ஆதரித்தார். ஆனால், தமிழ்நாட்டு 'இடதுசாரி’ உமாநாத் அதற்கு விரோதமாகக் கருத்துச் சொன்னார் என்றால், கோளாறு எங்கிருந்து தொடங்குகிறது? 'அரசியலின் நீட்டிப்பே யுத்தம்’ என்றார் மாவோ. அது புரிந்திருந்தால், ஆயுத வர்த்தகம் பற்றி ஒரு கம்யூனிஸ்ட் பேச முடியுமா?

ஈழத்து விடுதலைப் போராட்டம் தோற்றுப்போனதற்கு மிக முக்கியமான மூன்று காரணங்கள்...

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அரசாங்கம் தவிர யாரிடமும் ஆயுதம் இருக்கக் கூடாது என்பது, அமெரிக்கா உருவாக்கிய உலக ஒழுங்கு. விடுதலைப் போராட்டம், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என எந்த வித்தியாசமும் பார்க்காதே, அனைவரிடமும் இருக்கும் ஆயுதங்களையும் பறிமுதல் செய் என்பதே அமெரிக்காவின் தீர்ப்பு. இதற்குப் பதிலடி கொடுக்கக்கூடிய சோஷலிஸ, ஜனநாயக மாற்று (முன்பு சோவியத் இருந்தது போல!) அரசியலமைப்புகள் இல்லை. இருந்தால் அவர்கள் விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாத இயக்கங்களையும் பிரித்துப் பார்ப்பார்கள். இலங்கையை நிலைக்களனாகப் பயன்படுத்த சீனா துடித்தது. இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியது. இத்தகைய வெளிப்புறச் சக்திகளின் நலன்கள் சேர்ந்து 'பயங்கரவாத இயக்கத்தை அழிக்கிறோம்’ என்ற போர்வையில், லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்க பின்னணியில் இருந்தனர். இவை எதையும் உள்வாங்கிக்கொள்ளாமல் வறட்டுத்தனமாக அனைத்துப் பழிகளையும் புலிகள் மீது போட்டுத் தப்பிக்கப் பார்ப்பது மரணித்த மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்.

கட்டுரையை முடிக்கும்போது மாக்சிம் கார்க்கி நினைவுக்கு வருகிறார்..

'அடிமைகளின் துன்பத்துக்கும் அடிமைப்படுத்துவோரின் கொடுமையான ஏமாற்றுவித்தைக்கும் நடுவே சமரசத்தை உண்டுபண்ண வேண்டும் என்று நயவஞ்சமாகக் கூறுகிறார்கள். எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான நோக்கத்தை மனதில்வைத்துக்கொண்டு இவ்வாறு கூறுகிறார்கள். இது, பொய்களைக் கற்களாகக்கொண்டு மனிதனுடைய சுதந்திர உள்ளத்துக்குச் சமாதி கட்டிவைப்பதற்காகச் செய்யப்படும் கேவலமான சூழ்ச்சியைத் தவிர வேறொன்றும் இல்லை’.


இத்தொடர் முற்றுப்பெற்றது


மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 9

Tuesday, May 28, 2013

நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – 6



உடனே எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டேன். பற்றைக்காடுதானே அவதானித்து நகருவமென்று. நகர்ந்து கொண்டு இருந்தேன். அப்போது நேற்று சம்பவம் நடந்த பக்கம் சத்தம் கேட்டது. நான் நிற்கிற பக்கமும் கேட்டது. ஆமி ‘கிளியறிங்’ செய்து கொண்டு போற சத்தம் அது.

நான் காட்டுக்குள்ளால் வந்து கொண்டிருந்தேன். பெரிய அருவியின் கிளைகள் நிறைய இருந்தது. முதல் அருவியிலும் மரம் ஒன்று விழுந்து கிடந்தது. அது மெல்லியமரம் கொடியொன்று தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு தடியை எடுத்து ஆழம் பார்த்தேன். இதுவும் ஆழமாகத்தான் இருந்தது. தடியை ஊன்றிக் கொண்டு மெதுவாக மரத்தில் காலை வைத்துப் போனேன். கொடிக்குக் கிட்டப் போக மாறி மாறி உருளப் பார்த்தது. நான் உடனே இடது கைக் கமக்கட்டுக்குள் தடியை வைத்துவிட்டு மற்றக் கையால் கொடியைப் பிடித்துவிட்டேன். மரம் அங்கே இங்கேயென்று ஆடியது.

ஒரு மாதிரி கொடியைப் பிடித்துப் பிடித்து கரைக்குக் கிட்டப் போக மரம் தூக்கிவிட்டது. உடனே தடியை ஊன்றி ஒரு காலை கீழே வைத்துப்பார்த்தேன். தாழம் இல்லை. உடனே இறங்கி நடந்து மேலே ஏறி நடந்தேன். பிறகுமொரு அருவி அதில் இடுப்பளவிற்கு தண்ணீர். கரையில் ஏறி பள்ளமான பக்கத்தில் காலை வைத்துவிட்டு முன்னுக்குப் பார்த்தேன் ஆமியுடைய ‘சூ’ (சப்பாத்து) அடையாளம் இருந்தது. நிலம் ஒரே சுரியாக இருந்தது. அப்பதான் அவ்விடத்தால் ஆமி போயிருக்கிறான். நான் அந்தக் காலடிக்கு மேலேதான் காலை வைத்திருக்கிறேன். உடனே அதை அழித்துவிட்டு எல்லா இடமும் சுற்றிப் பார்த்துவிட்டு வேகமாய்ப் போய் ஒரு பற்றைக்குள் இருந்துவிட்டேன். அருவிக்கரையோரம் ஆமியின் சத்தம் கேட்டது.

ஆமி அருவிக்கு அங்கால சத்தம் போட்டு ‘கிளியறிங்’ செய்து கொண்டு போனான். எல்லா ‘பங்கர்’களுக்கும் குண்டடித்தான். திடீரென்று மளமளவெண்டு ‘ரவுண்ஸ்’ சத்தம் கேட்டது. மாறிமாறிச் சத்தம் போட்டுக் கத்தினான். எங்களுடைய ஆட்களைக் கண்டு சுட்டிருக்கிறான். அதைத்தொடர்ந்து மாறிமாறி இருபகுதியினரின் ரவுண்ஸ் அடியும், குண்டெறிந்து, வெடித்த சத்தங்களுமாக அவ்விடம் அதிர்ந்து ஓய்ந்தது. பிறகு நெருப்பு எரிந்து புகைவது தெரிந்தது. எனக்கு இன்னும் கவலை கூடியது. எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்; கோபமும் கூடியது. கறள் படிந்த நாட்களும் சம்பவங்களும் என்று யாராவது பழைய கதைகள் சொன்னாலே நான் அழுதிடுவேன். இப்ப நேரே பார்த்து அழவேண்டிய நிலை. மனது சரியாக நோகிறது, பாரமாக இருந்தது. யாரிடமாவது சொல்லிப் பெரிதாக அழவேண்டும் போல இருந்தது. என்ன செய்வது. எதுவுமே செய்யமுடியாத பரிதாப நிலையில் நான். என்னுடன் இருந்து பலகாலமாகப் பழகி, ஒன்றாக உண்டு, பயிற்சி எடுத்து, படுத்து, விளையாடியவர்கள் எனக்கு முன்னாலேயே எரிந்து சாம்பலாகிவிட்டார்களே என்ற ஒரு வெறி. இப்ப போய் அவனைக் குத்திகிழிக்க வேண்டும் போல இருந்தது.

அந்தப் பற்றைக்குள்ளிருந்தே எடுத்துக் கொண்டுவந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு இருந்தேன். இந்தச் சம்பவம் 4ஆம் மாதம் 6ம் திகதி நடந்தது. இரவு ஆனதும் அருவியால் இறங்கி திரும்பவும் அந்தப்பக்கம் வந்தேன். முழு வெட்டை. தூரத்தில் வாகனச் சத்தம் கேட்டது. பற்றை ஓரமாக நடந்தால் தூரத்தில் இருந்து பார்த்தால் அசைவு தெரியாது. நிலவாகவும் இருந்தது. கொஞ்சத் தூரம் நகர்ந்தேன். மிகவும் வெளிச்சமாக இருந்தது. அதனால் வெட்டையப் பாக்கக்கூடிய மாதிரி ஒரு பற்றைக்குள் இருந்து நித்திரை கொண்டேன். விழித்துப் பார்த்தபோது வெட்டையில் ஒரு 200 அடி தூரத்தில் வெளிச்சம் (‘டோச்’) தெரிந்தது.

திடீரென்று ஆமி கத்திச் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்துடன் துப்பாக்கிச் சத்தமும் கேட்டது. நேரத்தைப் பார்த்தேன் இரவு 2.20. பின்னர் ஆமிக்காரர் யாரோ ஒருவரை தரதரவென இழுப்பது போல தெரிந்தது. நிலவாக இருந்தபோதும் தெளிவாகத் தெரியவில்லை. நான் பற்றைக்குள் நன்றாக உட்புகுந்து ஒளித்தவாறே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன். அது எங்கட ஆட்களில் யாரோ தன்னைத்தானே சுட்டு வீரச்சாவடைந்திருக்கவேண்டும் அவருடைய உடலைத்தான் ஏதோ சொல்லி கத்திக் கத்தி இழுத்துக் கொண்டு வந்தார்கள். அடுத்து, எனது நிலையை எண்ணி, தயாராக குண்டை எடுத்து கிளிப்பைக் வாயால் கழற்றக் கூடியவாறாக வைத்தபடியே குப்பியையும் எடுத்து கடிக்கக் கூடியநிலையில் தயாராக வைத்தபடியே இருந்தேன்.

விடுபட்ட ஆக்கள் இரவுக்கு நகருவார்கள் என்று ‘கட்டவுட்’ போட்டிருந்தான். எனக்குப் பக்கத்தில் ஒரு 100 அடியில் இன்னொரு ஆமியின் ரீம் நின்றது. நாய் குரைத்துச் சத்தம் கேட்டது. நான் இனி இங்கே இருக்கக்கூடாது என்று நினைத்து அருவியைக்கடந்து அங்காலே போவமென்று எழும்பினேன். ஆமி அந்த உடலை இழுத்துக் கொண்டு போய் வெட்டையான பகுதியில் போட்டுவிட்டு தனது தொலைபேசியால் போட்டோ எடுத்தான்;. அதிலேயே வைத்து அந்த உடலை எரித்துவிட்டு, தான் வந்த திசைக்கு றவுண்ஸ் அடித்துப் பார்த்தான். நிலவுதானே எல்லாம் தெரிந்தது.

நான் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அருவிக்குள் இறங்கி நடந்து போனேன். பெரிய ஆழமில்லை. அங்கால் கரையில் எருமைமாடுகள் மேய்ந்து கொண்டு நின்றன. நான் வருவதைக் கண்டுவிட்டு, நான் கரையில் ஏற அதுவும் எனக்குக் கிட்ட வந்தது. எனக்கு உடனே என்ன செய்வது என்ற தெரியவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் இது வேறு துன்பமா? இவ்வளவு றவுண்ஸ் அடிக்கும்போதும் ஒரு மாதிரி தப்பிவிட்டேன். இனி இந்த மாட்டைக் கலைக்கப் போய் அவனிட்டை அல்லது மாட்டிடம் அகப்படத்தான் போகிறேன் என்று நினைத்தவாறு ‘சூய்’ என்று கலைத்துப் பார்த்தேன். எல்லா மாடுகளும் கொஞ்சத் தூரம் ஓடின. நான் அதற்கிடையில் பக்கத்தில் உள்ள பற்றைக்குள் புகுந்துவிட்டேன்;. எருமைமாடு வந்து பார்த்தது. நான் ஆடிஅசையாமல் அப்படியே இருக்க தன்பாட்டிலே போய்விட்டது. நிலவு மறையவில்லை நகர்ந்தால் தெரியும். அதனால் பற்றைக்குள்ளேயே இருந்தேன்.

நான் பகலில் நல்ல பற்றையாகப் பார்த்து புகுந்திருந்து நித்திரை கொள்வேன். அவதானிக்க வேண்டிய பிரதேசமென்றால் விழிப்பாக இருப்பேன். முழு நகர்வும் இரவில்தான். நாய்களால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நிலவு மறைய எழும்பி அருவிக்கரை ஓரமாக நடந்து போனேன்.

புதுக்குடியிருப்புக்கும் கிளிநொச்சிக்கும் போய்வருகிற பிரதான தெரு அது. அதிலிருந்து ஒரு 100 அடி தூரத்தில் நின்று, எப்படியாவது றோட்டைக் கடக்கவேண்டுமென்று பார்த்தேன். நடமாட்டம் கூடவாக இருந்தது. உடனே தண்ணீருக்காலே இறங்கி நடந்தேன். மணியைப் பார்க்க மறந்திட்டேன். தடியொன்றையும் எடுத்துக்கொண்டு போனேன். விடிய வெளிக்கிட்டுவிட்டு என்ன செய்வது. பாலத்தால் போனால் ஆமி பாத்திடுவான் என்று நினைத்துவிட்டு திரும்பவந்து ஒரு பற்றையைப் பார்த்து இருந்துவிட்டேன்;.

அன்று மதியம் ஆமி வரும் சத்தம் கிட்டக் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன் எனக்கு நேரே ஒரு ‘பொசிசன்’ போட ஒருவன் கிடங்கு கிண்டுகிறான்;. ஒருவன் தடி வெட்டுகிறான்.

தொடரும்.

நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – 5

முகவரி அல்ல முகம் - பாகம் 6

விரிந்த உங்கள்
வெள்ளைச் சிறகுகள்
ஒப்பந்தச் சாத்துகளால்
கறைப்பட்டதில்லை

தொடரும் இரும்பு நாய்களின்
குரைப்பில்
அவர்களின் பெருமூச்சைக்
கேட்க முடிந்ததோ?
சரசரக்கும் சருகுகளில்
சன்னமாய் ஒலித்த
குரல்களில் இருந்த செய்திகள் என்ன?

பதவி நாற்காலிப்
பந்தய ஒட்டத்தில்
மிதிபட்டு நசுங்கிய
ஈழப் பிரச்சனையோ?

அமைதித் திரையின் பின்பு
குருதியில் குளிக்கும்
அசோகச் சிங்கங்களை
அம்பலப்படுத்த
இனியும் தமிழகம்
எழும் என்ற நம்பிக்கையா?

வடக்கில் எந்த
வளர்ந்த மரங்களில்
அடைவீர் என்பதை
அறியேன்……. ஆயினும்
அமரும் போது கூறுக…….

அந்தக்
கானகச் சருகுகளில்
புதைந்து கிடப்பவை
விடுதலைக்கான விதைகள் என்று…
முளைவிடும்……. வானத்தை
முட்டி வளரும் என்று…
கடந்து வந்த கடல்களின்மீதும்…
வழியனுப்பி வைத்த குன்றுகள் மீதும்…
ஆணையிட்டுக்
கொக்குகளே:
கூறுக!

- மக்கள் கவிஞர் இன்குலாப்.

அடிமைத் தனத்தின் வலி, உணர்ச்சி உள்ளவர்க்கு மட்டுமே புரியும். ஆமையைப்போல் அடங்கி ஓடுங்கி வாழ எந்த ஒரு தன்மானம் கொண்ட இனமும் விரும்பாது. உரிமையை இழப்பது உயிரை இழப்பதைவிட கொடுமையானது. உரிமை இழந்து வாழ்வது நம்மை பிணங்களாக அடையாளப்படுத்தும். நமது உரிமையைக் குறித்த சிந்தனை நமது கடந்தகால நிகழ்வுகளின் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது. நான் யார் என்று என்னை புரிந்து கொள்ளாதவரை எப்படி நானாக இருக்க முடியும். நான் என்பது ஒரு புள்ளி அல்ல. கடந்த காலத்தின் தொடக்கம். ஒரு புள்ளி தொடக்கத்தை விட்டுச் செல்லும் ஆவணம். என்னிலிருந்து தான் என் சந்ததியினர் என்னைக் கற்றுக் கொள்வார்கள். எனக்கான அடையாளங்கள் என்னுள் ஏராளமாய் புதைந்திருக்கிறது. எனக்கான ஒரு மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல் வடிவமைப்பு எனது பழக்க, வழக்கம், உணவு முறை, உறவு பின்னல்கள், இவைகள் என்னை மற்றவர்கள் தெரிந்துகொள்ள காரணியாக இருக்கிறது. என்னை அவர்கள் தெரிந்து கொள்வதைப் போலவே என் மூதாதையர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நான் என்பது என் மூதாதையர்களின் நிகழ்கால இருப்பு. என் மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்பதை தெரிந்து கொள்வதன் மூலமே என்னை நான் அடையாளப் படுத்த முடியும். இதைதான் வரலாறு என்கிறோம். இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளாதவரை நமக்குள் கோபம் வராது. போராடும் உணர்ச்சி துளிர்விடாது. ஆகவே எந்த ஒரு நிகழ்வையும் அதன் வரலாற்றுப் பதிவுகளோடு அல்லது அந்த வரலாற்றின் பார்வையின் துணை கொன்டு நம்மை நாம் இருத்திக் கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று விட்டு வீரனாய் வேடம்போடும் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக உலகநாடுகள் சபையில் அன்று கொண்டுவரப்பட்ட முதல் தீர்மானம் தோல்வியடைந்தது. பல நேரங்களில் வரலாற்றில் பல பிழைகள் இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கியூபாவும் உடன் சேர்ந்திருப்பதை எண்ணி அதிர்ச்சியும், வியப்பும் அடைந்திருக்கிறது. அடிமைச் சிந்தனையை உடைத்தெரியும் தன்மை வாய்ந்த ஒப்பற்ற நாடாக நாம் பலமுறை கியூபாவை அடையாளப்படுத்தி இருக்கிறோம்.

ஆனால் கியூபா எப்படி இந்த அநியாயத்திற்கு துணைபோனது என்பது விளங்கவில்லை. ஆனால் நமது சிந்தனையில் கியூபா மட்டுமல்ல, எதிராய் வாக்களித்த எந்த நாடுகளிலும் தமிழர் விடுதலைக்கான தலைவர்கள் தாம் சரியாக பணியாற்றவில்லை என்பதை இந்தியா, பாகிஸ்தான், சீனாவைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்கு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தை சரியாக எடுத்துரைக்க தவறியதால், அல்லது அந்த நாடுகளுக்கு தமிழீழ விடுதலைப் போராளிகளின் தியாகத்தையும் அவர்களின் போராட்ட தர்மத்தையும் சரியாக விளக்கிச் சொன்ன காரணத்தினால் தமிழர்களுக்கு எதிரான முதலாவது உலகத் தீர்மானம் வெற்றிப் பெற்றிருக்கும் என தோன்றுகிறது. எந்த ஒரு போராட்டத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு அமைந்திருப்பதை, நாம் கூர்ந்து பார்க்கும் போது தெரிந்து கொள்ள முடியும். அந்த வரலாற்றில் உள்ள நியாயம் அந்த உரிமையை வென்றெடுக்கவேண்டிய தேவை இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டிய கட்டாயம் ஆகியவைகள் அந்த மக்களின் இதய வலியை வைத்தே அளவீடு செய்ய முடியும்.

சில செய்திகளை திரும்பத் திரும்பச் சொல்வது சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அழுத்தமாய் பதிவு செய்வதற்காகவே நாம் அடிக்கடி சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழர்களின் வாழ்க்கையை வாசித்து வாசித்துப் பழக்கப்பட்ட இலங்கைத்தீவிற்கு விஜயனின் வருகை ஒரு வீழ்ச்சியைத் தந்தது. அதைவிட மேலாக பௌத்தர்கள் தமது சமயத்தைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்ய தயாராக இருந்த காரணத்தினால் சதியாய் ஒரு கதை எழுதி அதை சரி என நம்ப வைத்து கழுத்தறுத்தார்கள். இதிகாசங்களை வைத்து இந்தியாவின் வரலாற்றை எப்படி தீர்மானிக்க முடியாதோ அப்படியே மகாவம்சத்தை வைத்தும் தமிழீழ வரலாற்றை தீர்மானிக்க முடியாது. வயதான தமிழ் மன்னன் எல்லாளனை சதியால் கொன்றொழித்த சிங்கள, பௌத்த இனவெறியர்கள் இன்று தமிழர்களை கருவறுக்கும் கொடுமையை கேவலமாய் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

கோட்டையை தலைநகராகக் கொண்ட கோட்டைச் சிங்கள அரசு போர்த்துக்கேசியரின் அதிரடி நடவடிக்கையால் அடங்கி ஒடுங்கியது. கி.பி. 1605 ல் இந்த நிகழ்வு முடிந்து 14 ஆண்டுகள் கழித்து நிலம் பறிக்கும் கூட்டமாய் காலணி ஆதிக்க அடங்கா பிடாரிகளாய் வலம் வந்து கொண்டிருந்த அதே போர்த்துக்கேசியர்களால் கி.பி. 1619 ஆம் ஆண்டு தமிழீழ அரசு ஒடுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குள் அதாவது கி.பி.1815 ல் கண்டியைத் தலை நகராகக் கொண்ட கண்டி உடறந்த அரசு ஆங்கிலேயர்களால் வெற்றி கொள்ளப்பட்டது. கிரேக்க புவியியல் வல்லுனர்கள் தாலமி முதல் சமீபகாலங்கள் வரை இலங்கைத் தீவிற்குச் சென்ற ஆங்கிலேயர்கள் வரை தமது குறிப்புகளில் தமிழர் நிலப்பகுதியையும், சிங்களர் நிலப்பகுதியையும் தனித்தனியே தான் குறிப்பிட்டு வந்துள்ளார்கள் என்பது வரலாற்று ஆவணங்களில் இருந்து நமக்கு விளங்குகிறது. சிங்கள பேரினவாதிகள் இப்போது பேசும் ஒன்றுபட்ட இலங்கை என்பது இருந்ததில்லை. அது விஜயனின் வருகைக்கு முன்னர் தொல் தமிழர்களால் மட்டுமே அவ்வாறு அறிவித்துக் கொள்ளமுடியும்.

இந்தியாவை ஆளும் சில அரசியல் வாதிகள் அயல் நாட்டின் இறையாண்மைக்குள் தாம் நுழைய முடியாது என்று கூறுகிறார்கள். தேசிய ஒருமைப்பாடு குறித்து மூச்சுவாங்க பேசுகிறார்கள். தமிழ்தேசியத்தின் மீது சிங்கள, பௌத்த பேரினவாத தேசியம் அடக்குமுறையை ஏவிய வரலாற்றை இவர்கள் அறியாதவர்களா, அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் நடிக்கிறார்களா என்பது எமக்கு விளங்கவில்லை.

சிங்களர்கள் தமது ஆட்சிப்பிரிவுகளை இரட்டை என்று அழைத்தார்கள். தமிழர்கள் தமது ஆட்சிப்பிரிவுகளை வன்னிமை என்று அழைத்தார்கள். சிங்களரின் ஆட்சிப்பகுதியாக ராஜரட்டை, மாயரட்டை, உடறட்டை, உரோகனரட்டை என்பவைகளும் தமிழர் தம் ஆட்சிபிரிவுகளாக யாழ்ப்பாணம், வன்னி, கொட்டியாறு, பழுக்கானம், பானம்மை, முத்துச் சலாபம் என்று பகுக்கப்பட்டிருந்தது இவை பெரும்பிரிவுகளாக இருந்தாலும் இவற்றுள் பல்வேறு உட்பிரிவுகள் இருந்தன. இந்த ஆட்சியின் அளவுகளாக பல ஊர்கள் அமைந்திருந்தது.

கி.பி.1796 ல் ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயர்கள். கி.பி.1815 ல் கண்டி அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கைத் தீவுகள் முழுவதையும் ஒரே கொடையின் கீழ் கொண்டுவந்தார்கள். இரண்டாக, மூன்றாக பிரிந்து இருந்த கட்சி ஒன்றாகி ஒற்றை ஆட்சியாக இருந்தது, ஆங்கிலேய ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்தின் கீழ்தான்.

தொடரும்…

கண்மணி

முகவரி அல்ல முகம் - பாகம் 5

Saturday, May 25, 2013

இனப் பிரச்னையைத் தீர்க்காமல் ஒன்றுபட்ட புரட்சி சாத்தியம் இல்லை! - மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 9


செருப்புக்குத் தகுந்த மாதிரி காலை வெட்டிக்கொள்ள முடியுமா? தேசிய இனங்கள் குறித்த கொள்கையில் அப்படித்தான் நடந்துகொள்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

'மார்க்சியமும் இந்தியாவில் தேசிய இனப்பிரச்னையும்’ என்ற சிறு நூலை அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இருந்த தோழர் பி.டி.ரணதிவே எழுதி வெளியிட்டார். தேசிய இனம், தேசிய இனப்பிரச்னை என்பதற்கு லெனின், ஸ்டாலின் கொடுத்த விளக்கங்கள் அனைத்தையும் நிராகரித்து, தங்களுக்குத் தகுந்த மாதிரி ஒரு வடிவத்தை பி.டி.ரணதிவே கொடுத்துக்கொண்டார்.

'இந்தியாவின் நிலைமைகளில் சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கையோ, பிரிந்து செல்லும் உரிமை என்ற கோரிக்கையோ எழுப்பப்படவில்லை. இதற்கான காரணங்கள் மதுரைக் கட்சி காங்கிரஸில் பூரணமாக விவாதிக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை, அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம், மாநிலங்களுக்குச் சமமான பங்கு, மாநில சுயாட்சி, மீதம் உள்ள அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு என்று மேலே கூறப்பட்ட இதர திருத்தங்களைக்கொண்ட கோரிக்கை மூலம் மாற்றியமைக்கப்பட்டது’ என்று பிடி.ரணதிவே கூறுகிறார். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையையே மாநில சுயாட்சி என்ற சொல்லுக்குள் குறுக்கப் பார்ப்பது மார்க்சியத்துக்கே இழுக்கு.

ஓர் இனத்தின் உரிமைப் பிரச்னையை இடப் பிரச்னையாக, ஒரு மாநில அரசாங்கத்தின் நிர்வாகப் பிரச்னையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுருக்கிவிடுகிறது.

சுயநிர்ணய உரிமை வேறு, மாநில சுயாட்சி என்பது வேறு. மார்க்ஸியமும், தேசிய இனப் பிரச்னையும் தொடர்பாக ஸ்டாலின் எழுதிய எந்த வரையறைக்குள்ளும் மார்க்சிஸ்ட் கட்சியின் வியாக்கியானத்தைப் பொருத்திப் பார்க்கவே முடியாது.

'ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய, நிலையான மக்கள் சமூகமாகும். மேற்சொல்லப்பட்ட இந்த எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கும்போதுதான் நாம் ஒரு தேசத்தைக் காண முடியும்’ என்று வரையறை செய்த ஸ்டாலின்,

'எல்லா நாடுகளிலும் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சமூக ஜனநாயகம் பிரகடனம் செய்கிறது. சுயநிர்ணய உரிமை என்பது தங்கள் விதியை நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை அந்தந்த தேசிய இனங்களுக்குத்தான் உண்டு என்பதாகும். ஒரு தேசிய இனத்தின் வாழ்க்கையில் வலுக்கட்டாயமாகக் குறுக்கிடுவதற்கோ, அதன் பள்ளிகளையும், மற்ற நிறுவனங்களையும் அழிப்பதற்கோ, அதன் பழக்கவழக்கம் மற்றும் மரபுகளை மீறுவதற்கோ, அதன் மொழியை நசுக்குவதற்கோ, அவர்களின் உரிமைகளை ஒடுக்குவதற்கோ ஒருவருக்கும் உரிமையில்லை’ என்றும் எழுதினார்.

பொது மொழி, தொடர்ச்சியான ஆட்சி எல்லை, பொதுவான பொருளியல் வாழ்வு, பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் உளவியல் உருவாக்கம் - ஆகிய நான்கையும் தேசிய இனத்தின் சிறப்புக் கூறுகளாக ஸ்டாலின் வரையறை செய்து சுயநிர்ணய உரிமையைக் கொடுக்கிறார். பிச்சைப் பாத்திரம் ஏந்தி ஒரு மத்திய அரசாங்கத்திடம் சலுகை பெறும் மாநில சுயாட்சியாக அதைத் திரிபுவாதம் செய்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஒரு தேசிய இனத்தின் அரசியல் பிரதேசத்தை, மாநிலமாகவும் பிராந்தியமாகவும் குறுக்குகிறது.

தேசிய இனம் எனப் பிரித்துப் பேசுவது, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிக்கு எதிரானதாக நினைத்து அந்தக் கட்சி அப்படிச் செய்திருக்கலாம் என்று சிலர் நினைக்கக்கூடும்.

மேலோட்டமாகப் பார்த்தால், உண்மைதான். பாட்டாளி வர்க்கம் என்பது தேசங்களை அழித்து, சர்வ தேசியங்களை உருவாக்க விரும்புகிறது. ஆனால், அதை எப்படிச் செய்வது? இன உணர்வைப் பற்றிப் பேசாமல் இருப்பதன் மூலமாக அல்ல. இன ஒடுக்குமுறைக்கான அடிப்படைகளை ஒடுக்குவதன் மூலமாக இனப் பிரச்னைகளைத் தீர்த்தாக வேண்டும். அதனால்தான், பாட்டாளி வர்க்கக் கட்சியானது எப்போதும் சிறுபான்மை இனங்களின் உரிமைக்காகவும் வளர்ச்சி குன்றிய தேசங்களின் வளர்ச்சிக்காகவும் நின்று அவற்றை வளர்க்க வேண்டும் என்று லெனினும் ஸ்டாலினும் விரும்பினர்.

175 தேசிய இனங்களையும், மலை வாழ் இனங்களையும்கொண்ட நாடு ரஷ்யா. இந்தியாவைப் போல நான்கு மடங்கு பெரிய நாடு. 'அனைத்து இனங்களுக்கும் பிரிந்துபோகும் தன்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உண்டு’ என்ற பிரகடனம்தான் ஜார் ஆட்சிக்கு எதிராக அனைத்து இனங்களையும் ஒன்று திரட்டப் பயன்பட்டது. புரட்சியை மட்டுமல்ல, இரண்டாம் உலகப் போரையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் அனைத்து இனங்களும் சேர்ந்தே சோவியத் ஆட்சிக்கு வழங்கியது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் எழுந்த தேசிய இனப் பிரச்னையை தீர்க்காமல், ஒன்றுபட்ட சோவியத்துக்காக ஆட்சியாளர்கள் துடித்தபோது பால்டிக், எஸ்தேனியா, ஜார்ஜியா, உக்ரேன், மாலடோவியா, பைலோ ரஷ்யா என்று பல்வேறு இடங்களில் பிரச்னை தலைதூக்கியது. ரஷ்யப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வேகம் 50 சதவிகிதம் குறைந்ததற்குக் காரணம் அங்கு நடந்த தேசிய இனப் போராட்டங்கள்தான் என்று ஆய்வாளர்கள் எழுதினர். இதனால், 90-களின் தொடக்கத்தில் உடைந்து நின்றது ரஷ்யா. உலகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இரண்டு தேசங்களில் ஒன்றான ரஷ்யா உடைந்து நொறுங்குவதற்குக் காரணம், தேசிய இனப்பிரச்னையை ஸ்டாலினுக்குப் பிறகு வந்தவர்கள் சரியாக உள்வாங்காததும், மறைத்ததும். இனப் பிரச்னை அனைத்தையுமே யாரோ வெளியில் இருந்து தூண்டிவிடுகிறார்கள் என்ற பீதியைக் கிளப்பி மறைக்கப் பார்த்தனர். இரும்புத் திரையே கிழிக்கப்பட்டது என்பது வரலாறு!

இவை எல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரியாதது அல்ல.

இந்திய விடுதலைக்கு முன்னதாகவே 1945 நவம்பரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகவில்லை) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் பரிபூரண சுதந்திரம் பெற்ற அரசுரிமை அந்தஸ்துடைய அரசியல் நிர்ணயசபை ஏற்பட வேண்டும்’ என்று கூறப்பட்டது. 'நம்மிடையே தோன்றி வரும் வித்தியாசங்களைச் சுட்டிக் காட்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் நம்மைப் பிறர் தயவை நாடி நிற்பவர்களாக்கி, சுதந்திர அந்தஸ்தற்றவர்களாக்கி விடுகிறார்கள். ஒரு பகுதியினர், இன்னொரு பகுதியினரை எதிர்த்துக்கொண்டு நிற்கும் நிலைமையில் வைத்துவிடுகிறார்கள். இந்த விஷச் சக்கரத்திலிருந்து விடுவித்துக்கொள்வதற்கு ஒரேயரு வழிதான் உண்டு. நம்முடைய நாட்டு ஜனங்கள் அனைவருக்கும், வெவ்வேறு சுதந்திர அபிலாஷைகொண்ட வர்க்கங்கள் அனைவருக்கும் பரிபூரண சுதந்திர அரசுரிமை உடைய அந்தஸ்து உண்டு என்ற அடிப்படையில் நாம் இந்தச் சுதந்திரப் பாதையைப் பின்பற்றுவதே சரியான வழியாகும்’ என்று அதில் விளக்கம் கூறப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையோர் பாதிக்கப்படக் கூடாது என்ற உன்னதமான எண்ணத்தில் இந்த முடிவை அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் எடுத்தனர். சுயநிர்ணய உரிமை தரப்பட வேண்டும். அதைக் கேட்பதற்குத் தார்மீக உரிமை உண்டு. அந்த உரிமை நிராகரிக்கப்படும்போது, போராட வேண்டும் என்பதே அவர்களது அன்றைய நிலைப்பாடு.

1948ம் ஆண்டு பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை நடந்த கொல்கத்தா மாநாட்டிலும் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. 'கம்யூனிஸ்ட் கட்சி 1951 முதல் 1958 வரை கட்சியின் அடிப்படைத் திட்டத்தில் பிரிந்துபோகும் உரிமையுள்ள இந்திய தேசிய இனங்களின் அமைப்பாக இந்திய அரசியல் அமைப்பு இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்திய நிலைமையைக் கூர்ந்து கவனித்ததில் பிரிந்து போகும் உரிமையை வலியுறுத்துவது பொருந்தாது என்று முடிவுசெய்தது. பிரிந்து போகும் உரிமையின்றியே மொழி வழி மாநில அமைப்பை நன்கு பயன்படுத்தி அந்த ஒற்றுமையை வளர்க்கக்கூடிய வாய்ப்பையும் கம்யூனிஸ்ட் கட்சி கணக்கெடுத்து இவ்வாறு முடிவு செய்தது’ என்று, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர். வெங்கட்ராமன் எழுதியிருக்கிறார்.

பிரிந்து போகும் உரிமையை இந்தியாவுக்குக் கோருவது பொருந்துமா பொருந்தாதா என்பது நடைமுறை சம்பந்தப்பட்டது. பிரிந்து போகும் உரிமை உண்டா இல்லையா என்பது கொள்கை சம்பந்தப்பட்டது. அத்தகைய சுயநிர்ணய உரிமை ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் உண்டு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகரிக்கிறதா என்பதே முக்கியம்.

அந்த உரிமையைக் கொடுப்பதாலேயே அனைத்துத் தேசிய இனங்களும் தனித் தனி நாடுகளாகத்தான் இருக்க வேண்டும், இந்தியா பிரிந்துவிட வேண்டும், இலங்கை உடைந்துவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. இதைத்தான் லெனின் அனைவருக்கும் புரியும் மொழியில், 'விவாகரத்து உரிமை வழங்குவதாலேயே குடும்பங்கள் அனைத்தும் உடைந்துவிடவே வேண்டும் என்று சொல்பவனல்ல நான்’ என்று சொன்னார்.

கொள்கைக்கு ஏற்ப நடைமுறைகளை வகுக்காமல், நடைமுறைக்கு ஏற்ற கொள்கைகளை உருவாக்கிக்கொண்டதால்தான் சுயநிர்ணய உரிமைக்கும் மாநில சுயாட்சிக்குமான குழப்பங்கள் அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இது மார்க்சிய அணுகுமுறை அல்ல.

மார்க்சியம் என்பது ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தை மட்டும் தத்துவார்த்த நெருக்கடியில் இருந்து மீட்பதாக இல்லாமல் ஒடுக்கப்பட்ட அனைத்துத் தேசங்களுக்கும் மாற்றுத் திட்டத்தை வழங்கியது. பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பணிகளில் இருந்தாலும் காலனி ஆதிக்க நாடுகளில் நடந்த புரட்சிகளை மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோர் உன்னிப்பாகக் கவனித்தே வந்தனர். இப்படித்தான் இந்திய விடுதலையையும் பார்த்தனர்.

இந்தியாவில் நடந்தது வர்க்கப் போராட்டமோ, பாட்டாளி வர்க்கப் புரட்சியோ அல்ல. 'இந்தியாவில்கூட புரட்சிகர இயக்கங்கள் வளர்ந்துவருகிறது’ என்று லெனின் சொன்னது, போராட்டங்கள் வேறுவேறாக இருந்தாலும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதால்தான். அதனால்தான் வளர்ந்த நாடுகளில் நடக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சியையும் காலனி நாடுகளில் நடக்கும் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் இணைக்க லெனின் விரும்பினார்.

ஆனால் இந்திய மார்க்சிஸ்ட்டுகள், அனைத்துப் போராட்டங்களையும் பிரிவினைவாதம், ஏகாதிபத்தியங்களின் சதி என்ற இரண்டு வார்த்தைகளைப் போட்டு மூடுகிறார்கள். அதனால்தான், தமிழர் தாயகத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஈழம், இனப்படுகொலை என்ற வார்த்தைகளைக் கேட்டாலே, அவர்களுக்கு அலர்ஜியாக இருக்கிறது.

Friday, May 24, 2013

நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – 5



வந்த ஆமிக்காரர்கள் அங்கேயிருந்த ஒவ்வொரு ஓலை வீடுகளையும் எரித்துக் கொண்டு வந்தார்கள். ஓலை வீடுகள் எரிந்த வெளிச்சத்தில் எல்லா இடமும் வடிவாகத் தெரிந்தது.

அந்த தீச் சுவாலைகளைப் பார்த்த நான், வீரச்சாவடைந்த எங்கட நான்கு வீரர்களுக்கும் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு இருப்பது போல உணர்ந்தேன். அப்போது மனதில் உறுதியெடுத்துக் கொண்டேன். எப்படியாவது போய்ச் சேர்ந்து நடந்தவற்றை தலைமைக்குச் சொல்ல வேண்டுமென்று. அப்படியே படுத்துக்கிடந்தபடி பார்த்துக் கொண்டேயே இருந்தேன். அவன் சகல வீடுகளையும் எரித்துவிட்டு சற்று நேரத்தில் அவ்விடத்தை விட்டுப்போய்விட்டான். என்னை நுளம்புகள் தின்று கொண்டிருந்தன.

ஒருவாறாக எழும்பி திரும்பவும் எங்கட ஆட்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு போனேன். மனத்தினுள் ஆமி எங்கேயயாவது மறைந்து நின்று அவதானிக்கிறானா என்று சுற்றிலும் பார்த்தவாறே அவர்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.

நான் நிமலன் அண்ணாவிடம், இதற்கு முதல் நாட்தான் ‘அண்ணா! எப்போதுமே அடிகிடைச்சா எல்லோரும் என்னை விட்டுவிட்டு ஓடிவிடுவாங்க. நீங்களாவது என்னைக் கூட்டிக்கொண்டு போங்க’ எனச் சொன்னேன். அதேபோல இன்று தனிமையாகிப் போனேன். முதல்நாள் பகல் நாங்கள் தங்கியிருந்த வீட்டிலே மருந்துப் பொருட்கள் கொஞ்சம் கிடந்தது. அதோடு காயத்திற்குக் கட்டும் கோசும் (துணிகள்) கிடந்தது. ‘அண்ணா சிலவேளை இது நமக்குத் தேவைப்படும் என்று சொல்லிக் கொண்டு அதையும் எடுத்து எனது பைக்குள் வைத்தேன். அதுவும் இன்றைய நிலைக்கு சரியாகிவிட்டது.

என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டு, இனித் தொடர்ந்து இங்கிருந்து ஒன்றுமே செய்யமுடியாது. எனவே எங்களுடைய மற்ற ஆட்களையும் தேடுவதோடு, தரப்பட்ட வேலையையும் செய்ய வேண்டும். அதோட இங்கு நடந்த சம்பவங்களை மெயினுக்கும் தெரியப்படுத்த வேண்டும். எனவே அதற்குத் தேவையான ஒழுங்கைச் செய்து கொண்டு நகர்வதற்காக, சுற்றும் அவதானித்தபடி மீண்டும் நான் காயப்பட்ட வீட்டுக்குப் போய் இரண்டு தண்ணிப் போத்தலும் 5 நாளுக்கு ஏற்றமாதிரிச் சாப்பாடும் எடுத்துக் கொண்டு றோட்டடிக்கு வந்தேன். ஆமி ரோச்சடிச்சுப் பார்த்துக் கொண்டு நின்றான். நான் அதை விலத்திப் போவதற்காக பற்றை ஒன்றிற்குள் இருந்தவாறு அவதானித்துக் கொண்டிருந்தேன்.

திடீரென்று 200 மீற்றர் தூரத்தில் ஆமியின் சத்தமும், பெரும் வெடியோசை ஒன்றும் கேட்டது. அதைத்தொடர்ந்து பெரிதாகக் குழறிய சத்தங்களும் கேட்டது. பிறகு ஆமியின் ரவுண்ஸ் அடி எல்லாப்பக்கமும் இலக்கின்றி அடிக்கப்பட்டது. கொஞ்சநேரத்தில் மயான அமைதியொன்று நிலவிய பிரதேசமாக காட்சியளித்தது அப்பகுதி. அந்த வெடியோசை எங்கட ஆட்களில் யாரோ சார்ஜர் இழுத்ததால் ஏற்பட்டது தான் என்பது எனக்குத் தெளிவாக விளங்கியது. ஆமிக்கு ஏதோ இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஒரே ரவுண்ஸ்;மழையைப் பொழிந்ததோடு மட்டுமல்லாது, சற்று நேரத்தில் வாகனங்களும் கூடுதலான ஆட்களும் (ஆமி) கொண்டுவந்து குவிக்கப்பட்டதோடு, எல்லா இடங்களையும் கிளியறிங் செய்ததோடு, அப்பிரதேசம் முழுவதும் யாரும் நகரமுடியாதவாறு பொசிசன் போட்டபடியிருந்தான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படி வெளியேறுவது என்று எனக்குத் தெரியவில்லை.

நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தன. எனக்கு முன்னால் நிறைய நாய்கள் கூட்டமாக படுத்துக் கிடந்தன. நாய்கள்; என்னைக் கண்டு குரைத்தால் ஆமி அலேட்டாயிடுவான். என்ன செய்வது என்று யோசித்தேன். ஆமி எங்கே இருக்கிறான் என்று ஒன்றுமே தெரியாது. எனக்கு முன்னுக்குள்ள தெருவுக்கு மற்றப்பக்கம் ஆமி இருந்தாலும் இருப்பான் எதற்கும் ஆயத்தமாகப் போவோம் என்று சேப்ரியைத் தட்டி விட்டு, குண்டடிக்கிறதென்றால் கையேலாது. என்ன செய்வது முட்டுப்பட்டா யார் முந்திறமோ அவன் தான் பிழைப்பான். எனவே கட்டாயம் குண்டடிக்கத்தான் வேண்டும். எனவே கிளிப்பை வாயால் கழற்றிவிட்டு வீசுவமென்று எல்லாத் தயார் நிலையிலும் மெதுவாக நாய்க்குச் சத்தம் கேட்காதவாறு நடந்து, ஒருமாதிரி மறுபக்கம் போய்ச் சேர்ந்துவிட்டேன்.

பொழுது விடியப் போகிறது. சுற்றும் முற்றும் பார்த்துப் பார்த்து அருவியடிக்கு வந்துவிட்டேன். அருவியில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது. ஓர் இடத்தில் இறங்கிப் பார்த்தேன். அப்படியே உள்ளுக்குள்ளே போக டக்கென்று மரத்தை எட்டிப்பிடித்து ஏறிவிட்டேன். பிறகு எல்லாப் பக்கமும் போய்ப் பார்த்தேன். விடியவும் போகிறது அதற்குள்ளேயே இருட்டோடு இருட்டாக கடந்திட வேண்டும். நான் நின்ற இடத்துக்கு பக்கத்தில பெரிய மரமொன்று அப்பிடியே அருவிக்கு நடுவில் விழுந்து கிடந்தது. உடனே அதில் ஒருமாதிரி கஸ்ரப்பட்டு ஏறி, அங்கே பிடித்து, இங்கே பிடித்து மெதுமெதுவாக கரைக்குக் கிட்ட வந்துவிட்டேன். கரைக்கு ஒரு பத்து மீற்றர் இருந்தது. உடனே அருவிக்குள் இறங்கினேன். நெஞ்சு மட்டத்திற்கு தண்ணீர். காயப்பட்ட கையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு மெதுவாக காலால் துழாவியபடி நடந்தேன். பள்ளம் இருக்கிற இடங்கூடத் தெரியாது என்றுதான் அப்படிச் செய்தேன். ஒரு மாதிரி கரைக்கும் வந்துவிட்டேன்;.

ஓரளவு விடிந்து கொண்டு வருகிறது. சரியான களைப்பாகவும், வேதனையாகவும் இருந்தது. இலந்தை முள்ளுப் பற்றையின் முள்ளுங் குத்துகிறது. நுளம்பும் கடிக்கிறது. அப்படியே ஒரு கூடலுக்குள் போய் அதிலிருந்த புத்து ஒன்றில் சாய்ந்து நித்திரை கொண்டேன். ஆனால் நித்திரையே வரவில்லை. நனைந்தது வேறு குளிர்கிறது, கை வேறு வலியில் குத்துகிறது, அத்துடன் சேர்ந்து நுளம்புங் கடிக்கிறது. இயலாமல் போய் தலையைச் சுற்றியது, அப்படியே மயங்கிவிட்டேன் போலவிருக்கிறது. கொஞ்ச நேரத்தால் திடுக்கிட்டு முழித்துப் பார்த்தபோது நன்றாக விடிந்து மணி ஏழாகியிருந்தது. அங்கிருந்து எழும்பிப் பார்த்த போது முன் பக்கம் பாதை மாதிரிப் போனது. அந்தப் பாதை வழியே போய்ப் பார்த்தேன். அங்காலப் பக்கக்கரை தெரிந்தது. ஆமியுடைய பழைய பொசிசன்களும் இருந்தது. பிறகு கொஞ்சம் தள்ளிப் போய்ப் பார்த்தேன். சனம் விட்டுட்டுப் போன பொருட்களும், உடுப்புக்களும் இருந்தன. அவ்விடத்தில் ஒருவித துர்நாற்றம் வீசியது. கிட்டப் போய்ப் பார்த்தேன். மனிச எலும்புக்கூடுகள் அவ்விடத்தில் நிறைய இருந்தன. இறந்தவர்களின் உடல்கள் புதைக்கவோ எரிக்கவோ படாமல் அப்படியே கிடந்து புழுக்களால் தின்னப்பட்டும், அழுகியும் போயிருந்தது. அது அவனால் கொல்லப்பட்ட எங்கட மக்களோடதாகத்தான் இருக்கும்.

மற்றப்பக்கம் போய்ப் பார்த்தேன்; அங்கிருந்த வீடொன்றில் ஒரு பை (பேக்கும்) கிடந்தது. அது யு.என்.சி.எச்.ஆர் கொடுத்த நீலப் புத்தகப்பை. அதையும் எடுத்துக் கொண்டு, அங்கிருந்த சாரங்கள் தண்ணியில் ஊறி சுருட்டி மடித்து வைத்தபடி காய்ந்து கிடந்தது. அதை எடுத்து பையுக்குள் வைத்தேன். பிறகுஅங்கிருந்த பொருட்களைக் கிண்டிப் பார்த்தேன். கத்தரிக்கோலும் ஒரு சேட்டும் கிடந்தது. அதையும் எடுத்தேன். கத்தரிக்கோல் இருந்தால் துணியை வெட்டச் சத்தம் கேட்காது. சாரத்தைக் கிழித்தால் சத்தம் கேட்கும் என்று நினைத்து அதையும் எடுத்தேன். திடீரென்று ஆமி வாற சத்தம் கேட்டது. எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு, நான் மறைந்திருந்த இடத்துக்குப் போனேன். நான் நின்ற பக்கம்தான் சத்தம் கேட்டது.

தொடரும்.

நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது - 4

முகவரி அல்ல முகம் - பாகம் 5




விழியினும் மேலான
தாயகம் மீட்க
விடுதலைப்புலிகளாய் எழுந்தோம்.
மீனுக்கு நீராய்
வேருக்கு மண்ணாய்
இருந்தீர்கள்; நாங்கள் நிமிர்ந்தோம்
இனியும் எமது போராட்டம் தொடரும்
விடுதலை எமது எல்லை!
துணைவந்த நீங்கள்
தோளை உயர்த்தினால்
விடுதலை வெகு தூரமில்லை.

மக்கள் திரள் என்ற
மாபெரும் சக்திதான்
எமது தாயகம் மீட்கும்.
மக்கள் யுத்தம் என்ற
மாபெரும் யுக்திதான்
நமது பணியை எளிதாக்கும்.
தோழமைப் புறாக்கள்
நம் துணையாகும்.
கொடிய வல்லூறை எதிர்க்கின்ற போது
தொடர்கின்ற போரில்
மக்கள் துணை கொண்டால்
விடுதலை இனியும் தப்பாது!

மக்கள் கவிஞர் இன்குலாப்

ஈழப்போர் முடிந்து விட்டதாக சிங்கள இனவெறியர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஒட்டுமொத்தமாய் தமிழினத்தை கொன்றொழிக்க திட்டமிட்டு கொலை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் கொத்து குண்டுகளால் செத்திருக்கலாம் என கதறி கொண்டிருக்கிறார்கள். தமிழ் பிஞ்சுகளுக்கு பால் கிடைக்கவில்லை ஆனால் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துவிட்டு அதன் தடயங்களை அழிக்கும் கொடுஞ்செயலுக்கு சிங்கள இனவெறி அரசு துணிந்து இருக்கிறது. துணைபோன இந்திய அரசு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்திய இளைஞர்கள் இனவெறியர்களால் தாக்கப்பட்டது குறித்து தாவி குதிக்கிறது.

தமிழினத்தை காப்பாற்று என்று தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள் எத்தனை? ஆர்ப்பாட்டங்கள் எத்தனை? மறியல்கள் எத்தனை? அத்தனை இன உணர்வுகளையும் மண்ணுக்கு சமமாய் பாவித்தது இந்திய அரசு, ஆனால் இந்திய இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றவுடன் துடிதுடித்துப் போகிறதே எப்படி? இனக்காயத்தின் வலி இப்போது தான் புரிகிறதா? இந்நிலையில் சிங்கள இனவெறி மக்களவை உறுப்பினர் ஈழம் என்ற வார்த்தையே இலங்கை வரலாற்றில் துடைத்தெறியப்பட வேண்டுமென்று அறை கூவல் விடுக்கிறார். நம்மவர் ஆண்ட தமிழ் மண்ணில் நின்று கொண்டு நமக்கான பெயரையே அழித்தொழிக்க முனையும் அக்கிரமத்தை என்னவென்று சொல்வது? இனி ஒரே நாடு, ஒரே இனம் என்பதை அங்கீகரிக்க எத்தனை தவறுகள் செய்ய வேண்டுமோ, அத்தனை தவறுகளையும் அடுக்கடுக்காய் செய்கிறார்கள். இந்தியா பல்வேறு தேசிய இனங்களை தம்முடைய ஆயுத பலத்தால் அடக்கி ஒடுக்கும் அதே கொள்கையை சிங்கள இனவெறி கூட்டமும் இலங்கையிலே செய்திட முயல்கிறது. சொந்த மண்ணில் அகதிகளாய் வாழும் அவலம் தமிழினத்திற்கு நிகழ்ந்துள்ளது. இடையூறுகளும், அடக்குமுறை சட்டங்களும், ஈயத்தோட்டாக்களும் வரலாற்று நாயகர்களை அசைத்து பார்த்ததில்லை என்பதற்கு அடுக்கடுக்காய் சான்றுகளை காலம் நமக்கு விட்டு சென்றுள்ளது. அடக்கமுறையாளர்கள் வெல்வதில்லை என்பது தான் வரலாறு. பிரெஞ்ச் காலனியாதிக்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நிகழ்த்திய நாடுகளானாலும் சரி, பிரிட்டிஷ் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக ஆர்த்தெழுந்த வீரர்களானாலும் சரி அவர்களின் போர் குணங்களையும், அவர்களின் தியாக முகங்களையும் காற்றும், கதிரும் பாதுகாத்து நம்முடைய காலங்களுக்கு அவற்றை காணிக்கையாக்குகிறது.

அவர்கள் விட்டு சென்ற காலடி சுவடுகளில் தான் கனத்த இதயமும், கனன்று கொண்டிருக்கும் உணர்வும் அடக்கமுடியாத ஆற்றலும் கொண்டு மீண்டும் மீண்டுமாய் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வியட்நாம் மக்களின் விடுதலை போராளி ஹோசிமினை அடக்க முடியாத அமெரிக்கா ‘எங்களிடம் அணுகுண்டுகள் இருக்கிறது’ என்று மிரட்டி பார்த்தது. அந்த மகத்தான போராளி, நீ சில அணுகுண்டுகளை வைத்திருக்கலாம் வியட்நாமிய மக்கள் ஒவ்வொருவரும் பெரும் ஆற்றல் வாய்ந்த அணுகுண்டுகளாக களத்திலே நிற்கிறார்கள் என கடுமையாக எச்சரித்தார். அதோடு இல்லாமல் மாபெரும் ராணுவ பலம் பொருந்தியதாக கருதப்பட்ட அமெரிக்காவை புறமுதுகிட்டு ஓடச் செய்தார். இந்த வரலாறு இனி ஈழத்தில் தொடரலாம். விழுந்த வித்துக்களில் இருந்து முளைத்தெழுந்த வீரர்கள் வீரியமிக்க அணுகுண்டுகளை வீழ்த்துவார்கள். சீறிப்பாயும் கொத்து குண்டுகள் அந்த மாவீரனின் மார்பிலே சமாதியாகும். தமிழ் இன உணர்வுக்கு எதிராக நிற்பவர்கள் அந்த போராட்டக்களத்திலே கல்லறையாக அடையாளப்படுத்தப்படுவார்கள். வரலாறு ஒரே திசையில் நகர்ந்ததாக இதுவரை நாம் வாசித்தறியவில்லை. விதைகள் மண்ணில் மடிவது முளைத்தெழத்தான். இப்போது மீண்டும் முளைக்கவே ஒரு விதைத்தல் நடந்திருக்கிறது.

தெற்கு நோக்கி ஓட்டம் பிடித்த சிங்களர்கள் அங்கே இருந்து கொண்டு இத்தனை காலமும் பாலி மொழியிலும், தமிழினம் எழுதி வந்த தமது எழுத்துக்களுக்கு மாற்றாக சிங்கள மொழிக்கு வரிவடிவம் கொடுக்க தொடங்கினார்கள். பௌத்தர்களாக, சிங்களர்கள் இலங்கையில் தென் பகுதியையும், மலைப்பகுதியையும் தமதாக்கிக் கொண்டு தமது வலிமையை நிலைப்படுத்திக் கொண்டிருக்க, சைவ சமயத்தை சார்ந்த தமிழர்கள் கிழக்கு, வடக்கு, வடமேற்கு பகுதிகளை தமிழரின் நிலங்களாக உருவாக்கி தம்மை தக்க வைத்துக்கொண்டார்கள். ‘மகா வம்சம்’ நூல் தந்த பொய்யுரைகளால் மீண்டும் மீண்டுமாய் சிங்கள அரசுகள் வலிமை பெற்ற போதும் தமிழர் நிலங்களை அவர்களால் தொட்டு பார்க்க முடியவில்லை. கி.பி 1815 -ல் பாண்டிய அரசு இலங்கை தீவு மீது படையெடுத்தது. சிங்களர்கள் பயந்து நடுங்கி மேலும் தெற்கு நோக்கி பின்வாங்கி நகர தொடங்கினார்கள். அவர்கள் கண்டியிலும், கோட்டையிலும் சிங்கள தலைநகரங்களை அமைத்துக் கொண்டார்கள். பெருஞ்சிறப்புடன் வாழ்ந்த தமிழர்களின் தலைநகர் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் புலநறுவையில் இருந்தது. பாண்டிய அரசு படையெடுப்பின் மூலம் இலங்கையின் வடபகுதியான யாழ்பாணத்திற்கு தமிழர் ஆட்சியின் தலைநகர் மாறியது.

வரலாறு தெரியாத பலர் ஏதோ தமிழர்கள் வந்தேறிகளாக இலங்கைக்கு சென்றது போலவும் அது தவறு எனவும் தொடர்ந்து கூறி வருகின்றார்கள். வரலாறு அறிந்த இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு தமிழர் பிரச்சனையை அக்காலத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். பின்னர் வந்த லால் பகதூர் சாஸ்திரி தமிழர்களை எதிலிகளாய் தாயகத்திற்கு அழைக்கத் துணை போனார்.

காங்கிரஸ் ஆட்சியில் இந்திராகாந்தி அம்மையாரை தவிர வேறு எவரும் இலங்கை தமிழர் நலன் குறித்து அக்கறை கொள்ளவுமில்லை. அரவணைக்கவுமில்லை. ஆனால் வரலாறு என்ன சொல்கிறது. இலங்கை தீவில் அப்போது மூன்று அரசுகள் ஆட்சி செய்து கொண்டிருந்தன. தென்மேற்கு கரையோரத்தையும், தெற்கு கரையோரத்தையும் ஆட்சி செய்தவர்களை சிங்கள கோட்டை அரசு என்றும், மத்திய மலைப்பகுதியை ஆட்சி செய்த சிங்கள அரசுக்கு கந்த உடரட்டை சிங்கள அரசு என்றும் பெயர். தமிழர்களோ கிழக்கு, வடக்கு, வடமேற்கு பகுதிகளை தமிழீழ அரசாய் ஆட்சி புரிந்து வந்தனர். சிங்கள இனவெறி மக்களவை உறுப்பினர் கூறுவதை போல, புலிகள் தான் ஏதோ தமிழீழம் என்ற வார்த்தையை கண்டு பிடித்து பரப்பினார்கள் என்ற கூற்று முற்றிலும் பொய்யானது.

இப்படி மூன்று அரசுகளாக நடந்து கொண்டிருந்த ஆட்சி முறை மேற்கத்தியர்கள் இலங்கைத் தீவின் மண்ணை மிதிக்கும் வரை மாறாமலிருந்தது. கி.பி 1505 அளவில் அவர்கள் இலங்கை மண்ணை மிதித்தவுடன் சூழ்நிலை மாறியது. முதன் முறையாக விஜயனின் வருகையால் வீழ்ந்த தமிழர்கள் இரண்டாவது முறையாக எல்லாளன் தோல்வியால் துவண்ட தமிழர்கள் மேற்கத்தியரின் வருகையால் முற்றிலுமாய் வீழ்ந்து விடுவார்கள் என்று அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் புலிகளின் போராட்டம் புவியெட்டும் சிறக்க வரலாறு முழுவதும் தமிழ் வாகை சூட இந்த கேடு அப்போது நிகழ்ந்தது.

கண்மணி

முள்ளிவாய்க்கால் முடிவல்ல : தேசியத் தலைவரின் சிந்தனையும் மகிந்த சிந்தனையும்



முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை மகிந்தவுக்கும் சிங்களப் படைகளுக்கும் தெளிவாக எடுத்தியம்பியுள்ளனர்.

தமிழீழத் தேசியத் தலைவரையும் அவரது படைகளின் ஆற்றல் ஆளுமைகளையும் கண்டு அச்சமடைந்த மகிந்தவும் அவரது படைகளும் உலக நாடுகளில் போய் இரந்து பெற்று வந்த இரசாயன ஆயுதங்களையும் வல்லரசு நாடுகளில் உள்ள இராணுவப்படைத் தளபதிகளின் தொழில்நுட்ப வழிகாட்டல்களையும் பெற்றுவந்து வன்னியில் வைத்து எமது மக்களைக் கொன்று குவித்தனர்.

ஆனால், தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைகளையும் செயல்களையும் சிங்களத் தரப்பால் இன்றுவரை வெற்றிகொள்ள முடியவில்லையென்பதை தமிழ் மக்கள் தெளிவாகவே சிங்களத்திற்கு உணர்த்தியிருக்கின்றனர். முப்பது வருடங்களாக இலங்கைத்தீவை ஆட்சி செய்த எமது தலைவர் பிரபாகரன் அவர்களே இன்றும் இலங்கைத் தீவை ஆட்சி செய்கிறார் என்பது கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுடன் சிறீலங்காப் படைகளுக்கும் மகிந்த குடும்பத்திற்கும் நன்றாகவே புரிந்திருக்கும்.

ஈழத்தமிழர்கள் தனித்து விடப்பட்டவர்கள். இவர்களை நாங்கள் என்ன வேண்டுமாயினும் செய்யலாம். அடிக்கலாம். உதைக்கலாம். கொலைசெய்யலாம். கிடங்கு வெட்டி உயிருடன் புதைக்கலாம். நாங்கள் செய்வதைக் கேட்க யாருமில்லை என்ற மகிந்த குடும்பத்தின் கற்பனைகளுக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஆப்பு வைப்பதாக அமைந்துள்ளது.

ஈழத் தமிழர்கள் தனித்தவர்கள் அல்ல. அவர்களுக்கு அடித்தால் உலகம் ஆர்ப்பரித்து எழுந்து வரும் என்பதை உலகத்தின் மூலை முடுக்கெங்கும் உள்ள தமிழ் மக்கள் நிரூபித்துள்ளனர். தமிழர்களுக்கு அப்பால் உலகின் பல நாடுகளிலும் உள்ள ஏனைய சமூகத்தவர்களும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளின் கலந்துகொண்டுள்ளமை ஈழத் தமிழருக்கு பெரு வெற்றியாக அமைந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களைத் துன்ப துயரங்களுக்குள் தள்ளிய மகிந்த ராஜபக்சவும் அந்த அயோக்கியனின் படைகளும் ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவித்துவிட்டு பெற்றுக்கொண்ட வெற்றியை எதிரி நாட்டை வெற்றிகொண்டதைப் போன்று பறைசாற்றின.

சொந்த நாட்டு மக்களுடன் எதிர்நின்று சமர் புரிந்து வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாத மகிந்தவின் சிங்களப் படைகள் உலக நாடுகளில் பெற்றுவந்த எரி குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் தமிழர்களின் தலைமேலே கொட்டி அவர்களை எரித்தழித்த தினத்தை யுத்த வெற்றித் தினமாக பிரகடனப்படுத்தி வருடா வருடம் கொண்டாடி வருகின்றன.

பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகள் காலணித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற தினத்தைக் கொண்டாடும் போது தமது படைபலத்தையும் படைக்கலங்களின் பலத்தையும் காட்சிப்படுத்துவதே வழக்கமாக இருந்து வருகின்ற நிலையில், சிறீலங்கா அரசாங்கமானது தனது சொந்த நாட்டு மக்களில் ஒரு இலட்சம் வரையான மக்களைக் கொன்று குவித்த தினத்தை தனது தேசிய வெற்றித் தினமாகக் கொண்டாடி வருகின்றது.

உலகின் ஏனைய நடுகளுடன் ஒப்பிடுகின்ற போது மகிந்தவின் இந்தச் செயலானது உண்மையிலேயே வெட்கப்பட
வேண்டியது. சிறீலங்காவின் தென்பகுதியில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் தமிழர் தாயகம் எங்கணும் இந்த வருடமும் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. வன்னியில் சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்ட மக்களுக்கு தமிழர் தாயகமெங்கும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களாகின்ற நிலையில் நான்காவது வருடமாகிய இந்த வருடம் மிகவும் வித்தியாசமான முறையில், மிகவும் உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

உயிரிழந்த மக்களுக்கோ, விடுதலைப் புலிகளுக்கோ அஞ்சலி செலுத்துவோர் கைது செய்யப்படுவார்கள் என்று வன்னி மாவட்ட சிறீலங்காவின் படைக் கட்டளைத் தளபதி பொணிபஸ் அறிவித்திருந்த நிலையிலும், யாழ். மாவட்டம் உட்பட தமிழர் தாயகம் முழுவதும் படையினரின் சோதனைகளும் ரோந்துகளும் கெடுபிடிகளும் அதிகமாக்கப்பட்டிருந்த நிலையிலும், யாழ். பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் எதனையும் பொருட்படுத்தாத மக்களும் மாணவர்களும் தமிழர் தாயகம் எங்கும் எமது உறவுகளுக்குத் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

படையினர் முற்றத்தில் நிலைகொண்டிருந்த போதிலும் உள்வீட்டில் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய வீரம் இந்தத் தடவைதான் தாயகத்தில் ஏற்பட்டிருக்கிறது. உண்மையிலேயே இந்த வருடம் மக்கள் பெரும் எழுச்சியடைந்திருக்கிறார்கள். எதற்கும் அஞ்சாத துணிவோடு எழுச்சியடைந்திருக்கிறார்கள். இந்த எழுச்சியானது சாதாரணமானதன்று. மக்கள் மீண்டும் துணிவோடு புறப்பட்டுவிட்டார்கள் என்பதையே இந்த எழுச்சி புலப்படுத்துகிறது. தங்கள் தலைகளில் இனிமேல் யாரும் மிளகாய் அரைக்க முடியாது என்பதை தமிழ் மக்கள் இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மூலமாகத் தெரியப்படுத்தியிருக்கிறா£ர்கள்.

ஈழத் தமிழ் மக்கள் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களும் இந்தியாவிலுள்ள தமிழ் மக்களும் இந்த வருடம் என்றுமில்லாதவாறு எழுச்சியடைந்துள்ளார்கள். இதிலும் தமிழக அரசியல்வாதிகளும் தமிழ் உணர்வாளர்களும் இந்த முள்ளிவாய்க்கால் நினைவை மிக உணர்வுபூர்வமாகவே நினைவுகூர்ந்துள்ளனர். இந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழின விடுதலை மிக விரைவாகவே எட்டப்படும் என்ற நம்பிக்கை இந்த மக்களிடையே துளிர்த்திருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அது புதிய ஆரம்பம் என்பது ஒரு அர்த்தமற்ற வார்த்தையாகவே நோக்கப்பட்டது. ஆனால், இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மூலமாக அந்த வார்த்தையின் அர்த்தம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலுடன் எல்லாமே முடிந்துவிட்டது. ஈழத்தமிழர்களின் போராட்டம் கூட முள்ளிவாய்க்காலுக்குள் புதைக்கப்பட்டுவிட்டது என்றே சிங்களம் உட்பட அனைவரும் கருதினார்கள். இந்தப் பாடத்துடன் தமிழன் படுத்துவிடுவான். இனிமேல் அவன் நிமிர்ந்தெழ முடியாது என்று சிங்களம் கனவு கண்டது.

ஆனால், தமிழீழத் தேசியத் தலைவரும் போராளிகளும், ‘எமது கல்லறைகளில் புற்கள் முளைக்காது, புதிய போராளிகள் முகிழ்த்தெழுவார்கள்’ என்று கூறியதைப் போல இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவுடன் புதிய போராட்ட அத்தியாயம் ஒன்று முகிழ்த்துள்ளது. அதுதான் தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டம். மக்கள் புரட்சி வெடித்தாலே நாம் சுதந்திரத் தமிழீழத்தை அமைக்க முடியுமென்று தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்கள் கூறியிருந்தார்கள். அது போன்று இப்போது மக்கள் புரட்சி வெடித்திருக்கின்றது. ஈழத்தில் மட்டுமல்ல, உலகம் பூராக மக்கள் புரட்சி வெடித்திருக்கின்றது. இதன் மூலம் சுதந்திர தமிழீழத்திற்கான வாசல் திறக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரவேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற சுதந்திரப் போராட்டமும் சிறீலங்காவிற்கு எதிராக தமிழீழத்தில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டமும் உலகப் போராட்ட வரலாற்றில் சிறப்பாகப் பேசப்படுகின்றன. அதிலும் தமிழீழப் போராட்ட முறைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட யுக்திகள் குறித்தும் வியந்து பேசப்படுகின்றது. அதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த திறமை. அஞ்சாத துணிவு. இழப்புகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து போரிடும் ஆற்றல். இந்த ஆற்றல் எங்கிருந்து வந்தது? அது எங்கே தங்கியிருக்கிறது? போராட்ட மௌனிப்போடு அந்த ஆற்றல், ஆளுமைகளும் மௌனித்துவிட்டனவா? இல்லை இல்லை. தமிழருக்கு என்று சிறப்பாக இருக்கின்ற ஆற்றல், ஆளுமைகளும் வீரமும் உலகில் எந்த இனத்திற்கும் இல்லை. புலிகளிடமுள்ள போர்க்குணம் என்றுமே மாறப்போவதில்லை. தமக்கு இரை கிடைக்காவிட்டால் உரிய இரை, பெரிய இரை தன்னைத் தேடி வரும்வரை புலி பதுங்கியிருக்கும் என்பது வன ஆராய்ச்சியாளர்கள் புலியைப் பற்றி ஆராய்ந்து கூறிய முடிவு. அதேபோல்தான், தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும் சாதாரணமான காரியங்களுக்கு எல்லாம் அவர்கள் மண்டையைப் போட்டு உடைப்பதில்லை. உரிய காலம் வரும் வரை அவர்கள் அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள். இந்த அமைதியைப் பார்த்து சிங்களம் போரில் புலிகளை வென்றுவிட்டோம் என்று எக்காளத்தொனி எழுப்புகிறது. ஆனால், இது அவர்களுக்கோ அவர்களின் மக்களுக்கோ நல்லதல்ல.

போர் என்றால் வெற்றி தோல்வி வருவது சகஜம். தமிழ்த் திரைப்படங்களில் கூறுவதைப் போல ‘சண்டை என்றால் சட்டை கிழியும் தான்.’ அதற்காக கிழிந்த சட்டையைத் தொடர்ந்து அணிந்துகொண்டு திரிய முடியாதே. என்றோ ஒரு நாள் சட்டையைத் தைப்பதற்கு முயலத்தானே வேண்டும். சட்டையைத் தைப்பதற்கு முயன்று முடியாவிட்டால் புதிய சட்டையை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. தமிழர்களின் நிலையும் இன்று இது போலத்தான் இருக்கின்றது. சண்டை வந்தது. சட்டை கிழிந்துவிட்டது. தைப்பதற்கு முயன்றார்கள். முயல்கிறார்கள். முடியாவிட்டால் புதிய சட்டையைக் கொள்வனவு செய்ய வேண்டும். எமது போராட்டத்தை புதிய வழியில் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் துணிந்துவிட்டார்கள்.

தமிழர்களும் தமிழீழப் போராட்டமும் புதைக்கப்பட்டுவிட்டதாக மகிந்தவும் மகிந்தவின் படைகளும் நம்பிக்கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்கள் சென்று இந்த வருடம் அங்கு உறங்கிக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்திவிட்டு வந்திருக்கிறார்கள். சிங்களம் இதனைச் சற்றேனும் எதிர்பார்த்திருக்காது. தமிழன் மீண்டும் துணிந்து எழக்கூடாது என்று கருதிய சிங்களத்தின் மனங்களில் தமிழரின் மீளெழுச்சியானது இடியாக அமைந்துள்ளது. யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று வரை புலம்பெயர் தமிழ் மக்களின் எழுச்சியைக் கண்டு அஞ்சி நின்ற மகிந்த அரசாங்கம் இப்போது தாயகத்திலேயே தமிழ் மக்களின் எழுச்சியைக் கண்டு அச்சமடையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அச்சம் மகிந்த குடும்பத்தை அமைதியாக இருக்கவிடப்போவதில்லை.

இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் மக்களும் இந்திய வாழ் உறவுகளும் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். போராட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பெரும் அச்சத்துடன் வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கு உங்கள் எழுச்சியே மீள் பலத்தைக் கொடுத்தது. ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நீங்கள் அங்கே நடத்திய போராட்டங்களும் எழுச்சி நிகழ்வுகளுமே இங்கே இவர்களையும் எழுச்சியடையச் செய்தது. இனி நாங்களும் எழுச்சியடையாவிட்டால் நாங்கள் அடக்கப்படுவோம் என்ற உணர்வு ஈழத் தமிழ் மத்தியில் மேற்கிளம்புவதற்கு காரண கர்த்தாக்களாக இருந்தவர்கள் நீங்கள் தான் என்பதை நீங்கள் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

இனிவரும் காலங்களிலும் சிங்கள அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிந்து ஈழத் தமிழ் மக்கள் விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்கு உங்கள் உறுதியான பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதையே இன்று ஈழத் தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இவர்களின் உறுதியான எதிர்பார்ப்பை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

இந்ந வருடம் புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்காக நீங்கள் எழுச்சியடைந்தமையாலேயே ஈழத்தில் தமிழர் தாயகமான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய அனைத்து இடங்களிலும் வாழ்கின்ற மக்களும் இந்த நினைவு தினத்தைக் நினைவு கொள்ளத் துணிந்தனர். எனவே, எதிர்காலத்திலும் நீங்களே ஈழத் தமிழ் மக்களுக்கு வழிகாட்டிகளாகவும் காவலர்களாகவும் இருக்க வேண்டும் என்றே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். இந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்து ஈழத்தில் தமிழர் தாயகமான தமிழீழம் மலர்வதற்கு உங்கள் ஒத்துழைப்பு என்றைக்குமே இருக்க வேண்டும். உங்கள் ஒத்துழைப்புடன் நிச்சயம் தமிழீழம் மலரும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

தாயகத்தில் இருந்து வீரமணி

நன்றி: ஈழமுரசு