Friday, May 31, 2013

யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள நாசிக்களும் (Nazi)



சிங்களப் பயங்கர வாதிகளால் எம் அறிவுச் சொத்து அழிக்கப்பட்டு முப்பதிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது.

1981ம் ஆண்டு மே மாதம் 31 நள்ளிரவு முதல் யூன் மாதம் முதலாம் திகதிவரை தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப் பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது.

97,000க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். யார் பயங்கரவாதிகள் உலகமே?

தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளையும், வரலாற்று உண்மைகளையும் நாம் இங்கே ஆராய்ந்து பார்ப்பதோடு மட்டுமல்லாது, தேசிய இனங்களை ஒடுக்க முயன்ற பேரினவாத சர்வதேச அரசுகளின் செயல்களில் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதும் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இப்பேரழிவுச் செயல் நிகழ்த்தப் பட்ட யூன் மாதம் முதலாம் திகதிக்கு (1981) முதல் நாள் நடைபெற்ற விடயங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவையிரண்டையும் தர்க்க்pத்த பின்னர் இவற்றிற்கு முன்னோடியாக-ஏன் வழிகாட்டியாக இருந்த ஹிட்லரின் நாசி (Nazi) நடைமுறைகளையும், அதன் சட்டங்களையும், செயற்பாடுகளையும் சிறிலங்காவின் அரசுகளோடு ஒப்பிட்டுத் தர்க்கிக்க நாம் விழைகின்றோம்.

எல்லாவற்றிற்கும் முன்பாக தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் எவ்வாறு தோன்றியது, வளர்ந்தது என்பதைக் குறித்து எமக்கு கிடைத்த தகவல்களைத் தர விரும்புகின்றோம்.
1981ல் தீக்கிரையாக்கப் பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம்

1933ம் ஆண்டு மு.ஆ செல்லப்பா என்ற அன்புள்ளம் கொண்ட தமிழன் தன்னுடைய இல்லத்தில் இலவச நூல் நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் யாம் பெற்ற புலமைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் நல்லெண்ணத்தைத் தெரிவித்தார். செல்லப்பாவின் சிந்தனையை ஏற்றுக் கொண்ட பல அறிவு ஜீவித் தமிழர்கள், 1934ம் ஆண்டு யூன் மாதம் 9ம் திகதி ஒரு நூல் நிலையத்தை ஆரம்பித்தார்கள். அன்றைய நாட்களில் உயர் நீதிமன்ற நீதவானாக இருந்த திரு ஐசாக் அவர்கள் தலைவராகவும,; திரு செல்லப்பா அவர்கள் செயலாளராகவும் இந்த நூல் நிலையக் குழுவினராகத் தெரிவு செய்யப் பட்டார்கள்.

இந்த நூல் நிலைய நிர்வாகக் குழுவினரின் அயராத உழைப்பின் காரணமாக 1934ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியன்று, யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓர் வாடகை அறையில் 844 புத்தகங்களுடனும் 30 செய்திப் பத்திரிகைகள், மற்றும் சஞ்சிகைகளுடனும் ஒரு நூல் நிலையம் உருவானது. மிகவும் வயது குறைந்த இளைஞர்களினதும், வயது முதிர்ந்த முதியவர்களினதும் ஆர்வம் காரணமாகவும், ஆதரவு காரணமாகவும் இந்த நூல் நிலையத்தின் நூல்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. 1935ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணப் பிரதான வீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்திற்கு இந்த நூல் நிலையம் இடம் பெயர்ந்தது. 1936ம் ஆண்டு யாழ் மகாநகராட்சி மண்டபம் நிர்மாணிக்கப் பட்டது. இந்த நூல் நிலையம் இதற்கு அருகாமையில் உள்ள கட்டிடத்திற்கு மீண்டும் இடம் பெயர்ந்தது.

எரியும் நினைவுகள்

அந்தக் காலத்திலேயே, இந்த நூல் நிலையத்துக்குரிய சந்தா மூன்று ரூபாய்கள் ஆகும். ஆனால் அறிவுத் தாகம் கொண்ட தமிழர்கள்pன் ஆர்வத்துக்கு ஈடு செய்ய முடியாத அளவில் இந்த நூல் நிலையம் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நூல் நிலையம் விரிவாக்கப்பட வேண்டிய அவசியத்துடன் ஒரு நிரந்தரமான பாரிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எமது (அன்றைய) தமிழ் மக்கள் உணர்ந்தார்கள்.

அப்போது யாழ் மாநகரசபை முதல்வராக இருந்த திரு சாம் சபாபதி அவர்களின் தலைமையில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தத் திட்டமிடப் பட்டன. குதூகல விழா, இந்திய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி விழாக்கள், நல்வாய்ப்புச் சீட்டுக்கள் போன்றவற்றின் மூலமாக நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. எதிர்பார்த்ததையும் விட ஏராளமான தொகை திரட்டப்பட்டது. என்ற விடயத்தை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

1953ம் ஆண்டு, நூல் நிலையத்திற்கான நிர்வாகக்குழு ஒன்று தெரிவு செய்யப் பட்டது. வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்கள் இந்த நிர்வாகக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அன்னாரின் சிலை ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூல் நிலையத்தில் நிர்மாணிக்கப் பட்டது. 1981ம் ஆண்டு யூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட போது வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்களுடைய சிலையும் அக்காடையர்களால் சிரச்சேதம் செய்யப்பட்டது.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதியன்று இந்த நூல் நிலையத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது. திராவிடக் கட்டடக் கலை நிபுணரான மு.ளு நரசிம்மன் அவர்களைச் சென்னையிலிருந்தும், பேராசிரியர் இரங்கநாதன் அவர்களை டெல்லியிலிருந்தும், நூல் நிலைய நிர்வாகக்குழு அழைத்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றது. முதல் கட்டப் பணிகள் 1959ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நிறைவு பெற்றன. சிறுவர்களுக்கான பகுதி ஒன்று 1967ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப் பட்டது. 1971ம் ஆண்டில், நூல் நிலையத்தின் முதல் மாடியில் கூட்டங்கள் நடாத்துவதற்காக மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப் பட்டது.

இப்படிப்பட்ட கட்டிடமும் 97,000ற்கும் மேற்பட்ட அரிய நூல்களும், பழைய முக்கியமான சஞ்சிகைகளும் 1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதியன்று சிங்களப் பேரினவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. (மேற்கோள்: கட்டிடக் கலைஞர் ஏ.ளு.துரைராஜாவின் 1996ம் ஆண்டுக் கடிதம், மற்றும் சங்கம் இணையத் தளங்கள்)



மே மாதம் 31ம் திகதி நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற, தமிழர் விடுதலைக் கூட்டணித் தேர்தல் கூட்டத்தின் போது நடாத்தப் பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது ஒரு சிங்களப் பொலிஸ் கொல்லப் பட்டார். இதனை அடுத்து துரையப்பா ஸ்டேடியத்தில் நிலை கொண்டிருந்த சிங்களப் பொலிசார் யு சுப்பையா ரூ சன்ஸ் கடை உட்படப் பல கடைகளை உடைத்தும் எரித்தும், கொள்ளையிட்டும் அடாவடித்தனங்களில் இறங்கினர். நாச்சிமார் கோவில் தேருக்கு தீ மூட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பல பொதுமக்களின் வீடுகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தமிழர் கூட்டணியின் கட்சிச் செயலகம் தீயிடப்பட்டது. யாழ்;ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடும் வாகனமும் தீக்கிரையாக்கப் பட்டன.

இதற்கு அடுத்த நாள் இரவு யூன் 1ம் திகதி யாழ் நூல் நிலையத்தின் மூன்றாவது மாடி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த மூன்றாவது மாடியில் தான் கிடைத்தற்கு அரிய சுவடிகளும், மிக அரிய நூல்களும் இருந்தன. மிகவிரைவில் நூல்நிலையத்தின் சகல பகுதிகளுக்கும் தீ பரவியது.

யாழ் நூல் நிலையக் கட்டடத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டு அதனை முழுமையாக நாசமாக்கும் விதத்தில் நன்கு திட்டமிடப்பட்டே இப் பேரழிவு நடாத்தப்பட்டது. அன்றைய தினம் நடாத்தப்பட்ட கோர தாண்டவத்தில் ஈழநாடு பத்திரிகைக் கட்டிடம் உட்பட முக்கியமான புத்தகக் கடைகளும் எரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாணம் பெரிய கடை வீதியில் அமைந்திருந்த தமிழ்ப் புலவர்களின் சிலைகளும் சேதமாக்கப்பட்டன.

தமிழரின் பண்பாட்டு அடையாளங்கள் என்று கருதப்பட்ட விடயங்கள் மீதே சிங்களப் பேரினவாதிகள் தமது அழிவுத் தாக்குதல்களை நடாத்தினார்கள் என்பதில் ஐயமில்லை.

“தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர்கள் படிக்கின்ற நூல்கள் அன்று தீக்கிரையாக்கப்பட்டன.”

அன்றைய சிங்கள அரசினால் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட இந்த நாசகாரச் செயலை முன்னெடுக்கவும், கண்டு களிக்கவும் இரண்டு சிங்கள அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தமையாகச் சொல்லப்பட்டது. ஒருவர் சிறில் மத்தியூ. மற்றவர் காமினி திசநாயக்கா.

குடித்து வெறித்திருந்த சில பொலிஸ்காரர்கள் தாமாகவே திருட்டுச் செயல்களைப் புரிந்தார்கள் என்று அரசு தரப்பில் வியாக்கியானம் வேறு கொடுக்கப்பட்டது. திருடுகின்றவர்கள் தமக்கு ஆதாயம் தரக்கூடிய பொருட்களைத் திருடுவார்கள். நூல்களையா எரிப்பார்கள்.?

இந்த பண்பாட்டு அழிப்பினைத் தொடர்ந்து நடந்த அல்லது நடக்காத விடயங்கள் சில படிப்பினைகளைத் தந்தன. நூல் நிலைய அழிப்பு குறித்து உத்தியோக பூர்வ விசாரணைகள் எதையும் சிங்கள அரசு நடாத்த வில்லை. அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அந்த இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை பின்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் கொண்டுவர முயன்ற போது சிங்கள அரசு அவருக்கு எதிராகவே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தது.


சிங்களப் பாரளுமன்றத்தின் ஊடாக தமிழர்களுக்கு எந்தவிதமான நீதியோ நியாயமோ கிடைக்கப் போவதில்லை என்ற உண்மை மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியது.

இதன் பின்னனியில்தான் சிங்கள பேரினவாத அரசியல் சட்டங்களுக்கும் ஹிட்லரின் நாசிச் சட்டங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைத் தர்க்கிக்க விழைகின்றோம். சட்டங்கள் மட்டுமல்ல, அவையினூடாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1935ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம் திகதி நியூரம்பெக், ஜேர்மனியில் நடைபெற்ற நாசி மகாநாட்டில் சட்டமாக்கப்பட்ட சில விடயங்கள் பின்னாளில் அதாவது 1948, 1949களில் சிறிலங்கா அரசால் சட்டமாக்கப்பட்டன. உதாரணம் குடியுரிமை சட்டம் – இலங்கை

நூல்களை எரிக்கின்ற திருவிளையாடல்களையும், நாசிக்கள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதியன்று ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பேர்லின் நூல் நிலையத்திற்குச் சென்ற நாசிக்கள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம்தான்! சிங்களக் காடையர்கள் செய்தது போல, அவர்கள் (நாசிக்கள்) பேர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை.

யூத மக்கள் மீது ஜேர்மன் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட தாக்குதல்களையும், கொலைகளையும் கோயபல்ஸ் இவ்வாறுதான் நியாயப்படுத்தி வந்தார். ஏதொவொரு திடீர் உணர்ச்சி வேகத்தில் சிந்திக்காமல், திட்டமிடாமல், இவ்வாறான செயல்களைப் போர்வீரர்கள் புரிந்து விட்டார்கள். நாசிக்களின் இதே காரணத்தைத்தான் சகல சிங்கள அரசுகளும் இதுவரை சொல்லி வருகின்றன.

ஆப்கானிஸ்தானின் அன்றைய தாலிபான் அரசு மிகப்பழைமை வாய்ந்த புத்த சிலைகளை அழிக்க முனைந்தபோது, பண்பாட்டு மேன்மை குறித்து புத்த பிக்குகள் கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள். பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா பாகிஸ்தானுக்குப் பறந்தோடிச் சென்று புத்த சிலை அழிப்பை தவிர்ப்பதற்கு பாகிஸ்தானின் உதவியை நாடினார். கொழும்பு ஊடகங்கள் இதனை முன்னிலைப்படுத்தின.

ஆனால் விலை மதிப்பற்ற யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்ட போது மௌனம் தான் மொழியாகிற்று!

சுதந்திரம் பெற்ற நாடுகள் தமக்கு, தமது நாட்டுக்கு, தமது பண்பாட்டுக்கு ஏற்பட்ட அழிவுகளை வரலாற்று ரீதியாக நினைவு கூருவதற்காக மிக முக்கியமான அழிவுகளை ஞாபகப்படுத்தும் சின்னங்களைப் பாதுகாத்து வருவதை நாம் உலகளாவிய ரீதியில் காணக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட நினைவுச் சின்னமும் இப்போது எமக்கு இல்லை.

ஆயினும் வரலாறு மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை, ஒரே ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியே வந்திருக்கின்றது. சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகளிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதியான, நேர்மையான, நிரந்தரமான, நியாயமான, கௌரவமான சமாதானத் தீர்வு ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.

அன்புக்குரிய நேயர்களே! இக்கட்டுரைக்கு Tamil Nation, சங்கம் போன்ற இணையத் தளங்களில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள் பெரிதும் உதவின. குறிப்பாக திரு நடேசன் சத்தியேந்திரா, விலானி பீரிஸ், நேசையா போன்றோருக்கு எனது நன்றிகள். திரு சிவநாயகம் அவர்களின் Sri Lanka Witness to History என்ற நூலும் பல அரிய தகவல்களைத் தந்தது.

யாழ் நூலகம் : அழிக்கப்பட்ட அறிவுச் சுரங்கம்


தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகளை அழிப்பது தமிழர்களை அழிப்பதைக் காட்டிலும் முக்கியமானது – சிங்கள இனவெறியர்களுக்குச் சொல்லித் தரப்பட்ட சித்தாந்தங்களுள் இதுவும் ஒன்று. அத்தகைய கலாச்சாரக் குறியீடுகளுள் ஒன்று யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம். ஆசியாவின் மிகச்சிறந்த நூலகமாகக் கருதப்பட்ட நூலகம். ஈழத் தமிழர்களின் பெருமை, பெருமிதம், கௌரவம் என்று யாழ் நூலகத்தைச் சொல்லலாம்.

இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழர்களின் கல்வியறிவுக்கான ஆதாரப்புள்ளியாக அந்த நூலகத்தைத்தான் சுட்டிக்காட்டுவார்கள். அதுதான் சிங்கள இனவெறியர்களை உறுத்திக்கொண்டே இருந்தது. தமிழர்களின் முன்னேற்றத்துக்கு உத்வேகம் கொடுக்கின்ற அந்த நூலகத்தை என்றாவது ஒருநாள் தடம் தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள் வன்மம் வளர்த்துக் கொண்டிருந்தனர். தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்தனர்.

1981 ஆம் ஆண்டின் மே மாதம் யாழ்ப்பாணத்தில் மாவட்ட சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. பிரசாரம் உச்சத்தில் இருந்தது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிங்களக் காவலர்கள் வந்திருந்தனர்.31 மே 1981 அன்று தமிழர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சிங்கள காவலர் ஒருவர் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாது. எப்படி வந்தார்கள் என்று தெரியாது. கொத்துக் கொத்தாக வந்த சிங்களர்கள் தமிழர்கள் மீது ஆவேசத் தாக்குதலில் ஈடுபட்டனர். இங்கே சிங்களர்கள் என்றால் சிங்களக் காவலர்கள், ராணுவத்தினர், இனவெறியர்கள், வன்முறையாளர்கள் என்று அத்தனை பேரும் அடக்கம்.

முதலில் புத்தகக் கடைகளைக் குறிவைத்தனர். அடுத்தது, பத்திரிகை அலுவலகம். இலங்கையில் முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமைக்குரிய ஈழநாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையானது. யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலுக்குத் தீவைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது. அவருடைய வாகனமும் எரிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தின் தென்பட்ட தமிழர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் அனைத்தையும் நெருப்பு கொண்டு எரித்தனர்.

அதன்பிறகும் வெறி அடங்கவில்லை அவர்களுக்கு. அடுத்து எதை அழிப்பது என்று அலைந்த இனவெறியர்களின் கழுகுக் கண்களில் யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம் சிக்கியது. உற்சாகமடைந்த இனவெறியர்கள் யாழ் நூலகத்துக்குள் நுழைந்தனர். தடுத்து நிறுத்திய காவலாளியை நெட்டித் தள்ளினர். கைவசம் கொண்டுவந்த பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துப் பார்த்துத் தீவைத்தனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் சில சாட்சியங்கள் இருக்கின்றன.

நூலகத்தின் மேற்கு மூலை பகுதிதான் முதலில் எரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நூலகத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் எரியத் தொடங்கின. நூலகம் எரிகிறது என்றால் புத்தகங்கள் எரிகின்றன என்று அர்த்தம். புத்தகங்கள் எரிகின்றன என்றால் தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகள் எரிகின்றன என்று அர்த்தம். செய்தி கேள்விப்பட்ட தமிழர்கள் பதைபதைத்தனர்.

நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள், ஆவணங்களைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தினர் சிங்கள காவலர்கள். மேலிடத்து உத்தரவு அவர்களை அப்படிச் செய்யவைத்திருந்தது.




நூலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் அழிந்துகொண்டிருந்தது. நூலகத்துக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97000 நூல்கள் கருகிச் சிதைந்தன. மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சாம்பலாகின. கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன பொக்கிஷங்களில் அதிமுக்கியமானவை.

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பன்மொழிப் புலவர் தாவீது அடிகளார் அதிர்ச்சியில் மரணம் அடையும் அளவுக்கு இருந்தது யாழ் நூலக எரிப்பின் தாக்கம். நூலக எரிப்பை நேரடியாகப் பார்த்த பற்குணம் என்பவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. யாழ் நூலக எரிப்பு தமிழர்களின் மனத்தில் ஆற்றமுடியாத வடுக்களை ஏற்படுத்திவிட்டன. அந்த நூலகம் உருவான வரலாறு அப்படிப்பட்டது.

மனிதனுக்கு சுவாசிப்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியமானது வாசிப்பது என்பதில் ஈழத்தமிழர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்கள். அதன் காரணமாகவே 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முதல் நூலகம் உருவாக்கப்பட்டது. அந்த நூலகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையாவிட்டாலும்கூட புத்தகங்கள் வாசிப்பதில் தமிழர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடவில்லை. அதன் காரணமாகவே பெரிய நூலகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் உருவாக்க விரும்பினர்.

ஆர்வம் கொண்ட இளைஞர்களும் பொதுநல ஆர்வலர்களும் நூலகம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிய அளவில் கட்டப்பட்ட அந்த நூலகம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தது. பொதுமக்களிடம் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டே நூலகக் கட்டடம் வளரத் தொடங்கியது. நூலகத்தை நிர்மாணிக்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் நரசிம்மன் ஈடுபட்டார். அமைதியான வாசிப்புக்குத் தேவையான அத்தனை வசதிகளுடனும் கூடிய யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகம் 11 அக்டோபர் 1959 அன்று வாசிப்புக்குத் திறந்துவிடப்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூல்கள் வந்துசேர்ந்தன. புத்தக ஆர்வலர்கள் சேமித்துவைத்திருந்த புத்தகங்களும் பத்திரிகைப் பிரதிகளும் யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன. அரிய நூல்களும் ஆவணங்களும் அங்கு பாதுகாக்கப்பட்டன. தமிழ் இளைஞர்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கு யாழ் நூலகம் பேருதவி செய்தது.

ஏராளமான இளைஞர்கள் நூலகத்துக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வாசிப்பது தமிழர்களின் தினசரி நடவடிக்கைகளுள் ஒன்றாக மாறிப்போனது யாழ் நூலகத்தின் வருகைக்குப் பிறகுதான். யாழ் நூலகத்தைப் பார்த்து பரவசம் அடைந்த தமிழ் இளைஞர்கள், அதேபோன்று இல்லாவிட்டாலும் சிறிய அளவிலான நூலகங்களையும் வாசக சாலைகளையும் தத்தமது பகுதிகளில் உருவாக்க ஆர்வம் செலுத்தினர்.

தமிழர்களின் வாசிப்பு ஆர்வமும் கல்வியறிவும் சிங்கள அரசாங்கத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்தன. தமிழர்கள் படிப்பதால்தான் சிந்திக்கிறார்கள். சிந்திப்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள். போராட்டத்தில் இறங்குகிறார்கள். உரிமைக்குரல் எழுப்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவர்களுடைய கல்வியறிவு. அதற்கு உந்துசக்தியாக இருப்பது அந்த யாழ் நூலகம். அதை அழித்துவிட்டால் தமிழர்களின் எதிர்காலத்தையே சீர்குலைத்துவிடமுடியும் என்று கணித்தனர்.

நூலகத்தை எரிக்கும் பொறுப்பு இரண்டு அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிறில் மேத்யூ மற்றும் காமினி திசநாயகா என்ற இரண்டு அமைச்சர்கள் களத்தில் இறங்கினார்கள். (பின்னாளில் அதிபரான ரணசிங்கே பிரேமதாசா கொடுத்த வாக்குமூலம் இது) கொழும்புவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள வன்முறையாளர்களை யாழ்ப்பாணம் நகரத்துக்கு அழைத்துவந்து தங்கவைத்தனர். என்ன செய்வீர்கள் என்று தெரியாது.. யாழ் நூலகம் எரிக்கப்படவேண்டும். இதுதான் அந்த வன்முறையாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த உத்தரவு.

தகுந்த தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தனர் வன்முறையாளர்கள். அந்த நேரம் பார்த்து போலீஸாருக்கும் தமிழர்களுக்கும் மோதல் மூண்டது. இதுதான் சமயம் என்று மின்னல் வேகத்தில் களமிறங்கினர் வன்முறையாளர்கள். அமைச்சர் இட்ட உத்தரவை அப்படியே நிறைவேற்றி முடித்தனர்.

நூலகத்தை எரித்த நெருப்பு தமிழர்களின் நெஞ்சுக்குள் பரவியது. தங்களுடைய உரிமைக்குரலை உரத்து எழுப்பியது நூலக எரிப்புப் பிறகு என்றே சொல்லலாம். பாவத்துக்குப் பரிகாரம் தேடும் முயற்சியாக யாழ் நூலகத்தை மீண்டும் கட்டியிருக்கிறது சிங்கள அரசு. செங்கல். சிமெண்ட். மேசை. நாற்காலி. எல்லாம் புதிதாக வந்துவிட்டன, அழிந்துபோன அரிய ஆவணங்களைத் தவிர!

ஆர். முத்துக்குமார்