Wednesday, May 29, 2013

நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்? - மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 10



ஈழப் பிரச்னை தொடர்பான விவாதங்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு ஓர் அறிக்கையைத் தயாரித்து, அந்தக் கட்சியின் உறுப்பினர்களுக்குக் கடந்த ஆண்டு அனுப்பியது. கட்சியின் முழுமையான நிலைப்பாட்டை உள்வாங்கிக்கொள்ள இது பயன்படும். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை தொடர்பான அறிக்கையை, சர்ரியலிஸ பாணியில் எழுதியிருக்கிறார்கள். வரலாற்றை வரிசையாகவும் விமர்சன ரீதியாகவும் சொல்லாமல் புரிய வேண்டிய இடங்களில் மறைத்தும், தெளிய வேண்டிய இடங்களில் திரித்தும் இருக்கிறது அந்த அறிக்கை.

'வர்க்கக் கண்ணோட்டத்துடன் ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலுடன் கூடிய அரசியல் நிலைப்பாட்டைக் கட்சி எடுப்பதால், அதிகம் விமர்சனத்துக்குள்ளாகிறது. கட்சியைத் தனிமைப்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன’ என்கிறது அந்த அறிக்கை.

அதாவது, 'தனித் தமிழீழத்தை நாம் ஏற்பது இல்லை, விடுதலைப் புலிகளை நாம் ஆதரிப்பது இல்லை, எனவேதான் நாம் விமர்சிக்கப்படுகிறோம்’ - என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்குத்தானே காரணம் கற்பித்துக்கொள்கிறது. 'செம்மலர்’ பேட்டியிலும் இதை ஜி.ராமகிருஷ்ணன் சொல்கிறார்.

மார்க்சிஸ்ட்கள் மீதான விமர்சனம் இந்த இரண்டு காரணங்களுக்காகவும் இல்லை. அவர்கள் விமர்சிக்கப்படுவதற்குக் காரணம், ஈழப் பிரச்னையின் உண்மையான நிறத்தைச் சொல்ல மறுப்பதுதான். நோய் என்ன என்று சொல்வதிலேயே முரண்பாடுகொண்டவர்களால், தீர்வை மட்டும் சரியாக எப்படிச் சொல்ல முடியும்?

தமிழ் ஈழத்தை அங்கீகரிக்காத விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்கின்ற அமைப்புகள்கூட, இந்தத் தளத்தில் இயங்குகிறார்கள். தமிழர்களை ஒடுக்கிய சிங்களப் பேரினவாதக் கூட்டத்தை மிகத் தெளிவாக அம்பலப்படுத்திவருகிறார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னமும் மையமாகவே பேசி வருகிறது. 'இறுதிக் கட்டத்தில் நடந்த கடுமையான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பாளிகள் அடையாளம் காணப்பட்டு, உரிய தண்டனை தரப்பட்ட வேண்டும். இதற்கு நம்பகத்தன்மையுடன் கூடிய சுயேச்சையான உயர்மட்ட விசாரணை நடத்த இலங்கை அரசு முன்வர வேண்டும்’ என்று சொல்கிறார் உ.வாசுகி.

மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றம் செய்த பொறுப்பாளிகள் என்றால், யார்? இத்தனை லட்சம் பேரை இலங்கையில் கொன்று விட்டு யாராவது தப்பிப் போய்விட்டார்களா என்ன? இலங்கை அரசாங்கம் இதை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால், கொலை செய்ததற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லையா? இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதீத அக்கறைதான் அந்தக் கட்சியைத் தனிமைப்படுத்திக் காட்டுகிறது. தமிழர் படுகொலைகள் பற்றிப் பேசினால், 'சிங்களவர்களும்தானே அங்கு பாதிக்கப்படுகிறார்கள்’ என்று சொல்லும் அந்தக் கட்சி, தமிழகத்தில் இரண்டு புத்த பிட்சுகள் தாக்கப்பட்டதை, 'இனவெறி தலைதூக்கிவிட்டது’ என்று கண்டிக்கிறது. இந்த இரட்டை நிலைப்பாடுதான் கண்டிக்கப்படுவதற்குக் காரணமே.

1. இலங்கையில் சிங்களர், தமிழர் ஆகிய இரண்டு தேசிய இனங்கள் உண்டு.

2. இலங்கையில் நடந்தது மிகக் கொடூரமான இனப்படுகொலை.

-இவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதுதான் இங்கு மிக முக்கியமான முரண்பாடு. தமிழீழத்தை அவர்கள் ஆதரிப்பது அல்லது மறுப்பது, விடுதலைப் புலிகளை ஆராதிப்பது அல்லது நிராகரிப்பது அல்ல பிரச்னை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள ஆவணத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகமே இல்லை. உ.வாசுகியும் கவனமாக அதைத் தவிர்க்கிறார்.

இலங்கையில் நடந்த படுகொலைகளை, வெறுமனே 'தேசியப் பிரச்னை’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்ல முடியுமா? தேசியப் பிரச்னை என்றால், அது தேசிய இனப் பிரச்னையா, தேசிய வர்க்கப் பிரச்னையா, தேசிய மதப் பிரச்னையா, தேசிய வர்ணப் பிரச்னையா... என்ன பிரச்னை?

மருத்துவரிடம் போனால் 'வலிக்குது டாக்டர்’ என்றா சொல்வோம். தலை வலியா, கழுத்து வலியா, வயிற்று வலியா, கால் வலியா... என்ன வலி என்று அடையாளப்படுத்துவது இல்லையா? ஓர் உயிருக்கான உடல் நோவையே குறிப்பிட்டு விளக்கும்போது, லட்சக்கணக்கானவர் கொல்லப்பட்ட பிரச்னையை தேசியப் பிரச்னை என்று சொல்வதன் உள் அர்த்தம், அது புரிந்துவிடக் கூடாது என்பதுதானே?

இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், என்ன ஆகும்? இன ரீதியான தீர்வைச் சொல்ல வேண்டும். அதனால் மனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்று சொல்கிறார்கள். போர் நியாயமானது என்று ஒப்புக்கொண்டால்தான், அதில் நடந்த தவறுகள் குற்றங்கள் ஆகும். போரை நியாயமானது என்று ஒப்புக்கொள்கிறார்களா?

மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் போன்ற வார்த்தைகள் இலங்கைக் கொடூரத்துக்குக் கொஞ்சம்கூட பொருந்தாதவை. 1980 முதல் 2008 வரை 80 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இறுதி யுத்தத்தில் மட்டும் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் கொலைசெய்யப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 56 ஆயிரம் பேர் வடக்கு மாகாணத்தில் அநாதைகள். வடக்கு, கிழக்கு இரண்டிலும் 60 ஆயிரம் பெண்கள் விதவைகளாகினர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பெற்றோர் இல்லை. கொல்லப்பட்டும், கொல்லப்படாமலும், விதவை ஆக்கப்பட்டும், அநாதை ஆக்கப்பட்டும்கிடக்கும் மொத்தப் பேருமே தமிழர்கள். கடந்த 30 ஆண்டு காலத்தில் முடிந்த வரை கருவறுத்து முடித்துவிட்டனர். இதை இனப்படுகொலை என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?

'முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசு முகவர் அலுவலகக் குறிப்பின்படி, 2008 அக்டோபர் மாதம் வன்னியின் மக்கள் தொகை 4,29,059. போர் முடிந்த பிறகு இலங்கையின் முகாமுக்குள் வந்தவர்களின் கணக்கு 2,82,380. அப்படியானால் 1,46,679 பேரின் கதி என்ன?’ என்று மன்னார் மாவட்ட கத்தோலிக்க பாதிரியார் ராயப்பா ஜோசப், இலங்கை அரசாங்கம் அமைத்த விசாரணைக் குழுவில் கேட்டார். அந்த 1,46,679 பேர்தான் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள்.

விழுப்புரம் காவல் நிலையத்தில் ஒரு கைதி அடித்துத் துன்புறுத்தப்படுவதை மனித உரிமை மீறல் என்று குற்றம் சாட்டுவோம். 1,46,679 பேர் கொலையையும் மனித உரிமை மீறல்கள் என்று சொன்னால், அதைவிட மனச்சாட்சிக்கு விரோதமான செயல் வேறு இருக்க முடியுமா?

சர்வதேச இனப்படுகொலை தடுப்புத் தண்டனைச் சட்டம், எது இனப்படுகொலை என்பதை வரையறுக்கிறது.

'ஒரு தேசிய இனம் அல்லது மதக் குழுவின் ஒரு பகுதியை அல்லது முழுவதும் அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகின்ற செயல்கள் இனப்படுகொலை ஆகும். அந்த இனக் குழுவின் உறுப்பினர்களைக் கொலை செய்தல், உடல், உளரீதியாக அந்த இனக் குழுவின் உறுப்பினர்களுக்குத் தீங்குசெய்வது, வேண்டுமென்றே அந்தக் குழுவின் வாழ்க்கை நிலையில் தாக்குதல் தொடுத்து, பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ திட்டமிட்ட உடல்ரீதியான அழிவை ஏற்படுத்துதல், அந்தக் குழுவுக்குள் பிறப்புகளைத் தடுக்கும் நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்தல், அந்தக் குழுவிலுள்ள குழந்தைகளை வேறு குழுக்களுக்குக் கட்டாயமாக மாற்றுதல் - ஆகிய எந்த ஒரு செயலும் இனப்படுகொலை வரையறைக்கு உட்பட்டது’ என்று சொல்கிறது. இதன் ஒவ்வொரு சொல்லும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றே சொல்லுமே. இதைப் புரிந்துகொள்ளும் சக்தி மார்க்சிஸ்டுகளுக்கு இல்லாமல் போனது ஏன்? வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் என்ற அமைப்பு, 1956 முதல் 2008 வரை நடந்த அனைத்து இனப்படுகொலைச் சம்பவங்களையும், தேதிவாரியாகக் கொல்லப்பட்ட தமிழர்களின் பெயர்களுடன் வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்தால் மனச்சாட்சி உள்ளவர்கள் கலங்கிப்போவார்கள். மார்க்சிஸ்டுகள் அதைப் பார்க்கட்டும்.

இனப்படுகொலை என்று இதைப் பார்க்க மறுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய அறிக்கையில், விடுதலைப் புலிகளை அடக்குவதற்காகத்தான் இந்த போர் நடத்தும் சூழ்நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டது என்றும் காரணம் சொல்கிறது. ' புலிகளின் வன்முறையை எதிர்கொள்ள இலங்கை அரசு ராணுவரீதியில் தன்னைத் தயார்செய்துகொண்டது’ என்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தையே, 'இலங்கை அரசுக்கும் எல்.டி.டி.இ. அமைப்புக்குமான உள்நாட்டு யுத்தம்’ என்று அடையாளப்படுத்துவதைப் போல வரலாற்று அசிங்கம் வேறு இருக்க முடியாது. புலிகள் அமைப்பு 1972-ல் மெள்ள உருவாகி, 1980-களின் தொடக்கத்தில் நிர்வாகக் கட்டமைப்புகொண்டதாக மாறி, 80-களின் இறுதியில் ஆயுத பலம்கொண்டதாக மாறுகிறது. அப்படியானால் அதற்கு முன் செத்தவர்கள் எல்லாம் தங்களைத் தாங்களே கொலை செய்துகொண்டார்களா? 1950 முதல் 1975 வரை அகிம்சைப் போராட்டம் நடந்தது. 1980 முதல் 2009 வரை ஆயுதப் போராட்டம் நடந்தது. அகிம்சைப் போராட்டம் ஆரம்பித்தபோது, பிரபாகரன் பிறக்கவே இல்லை. தமிழீழத்தை ஈழத் தந்தை பிரகடனம் செய்தபோது, போராளி அமைப்புகள் எதுவும் பலமாகவே இல்லை. நிராயுதபாணியாக நின்ற தமிழர்களை நித்தமும் அடித்து அடித்து ஆயுதம் தூக்கவைத்தார்கள். இதைத்தான், 'நான் என்ன ஆயுதம் தூக்க வேண்டும் என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான்’ என்றார் மாவோ. இதைத்தான் லெனின், நீதியான போர், அநீதியான போர் என்று பிரித்துச் சொல்வார்.

இந்தப் பின்புலம் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளாமல், புலிகள் ஆயுதம் தூக்கியதால் இலங்கை ராணுவம் குண்டு போட்டது என்று தாக்குதலையும் எதிர்தாக்குதலையும் இடம் மாற்றிப் போடும் தந்திரம் மார்க்சிஸ்ட்களுக்கு அவசியம் இல்லாதது. தன்னுடைய வரலாற்றுக் கடமையை மறைக்க மட்டுமே இது உதவும்.

இன்னொன்றையும் அந்த அறிக்கை சொல்கிறது, 'இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னை. எனவே, சர்வதேசப் பிரச்னை என்ற முறையில் இங்கிருந்து தலையிடுவதற்கு ஓர் எல்லை உண்டு’ என்று.

அப்படியானால், இலங்கைக்கு இந்திய அமைதிப் படை அனுப்பிவைக்கப்பட்டதை அந்தக் கட்சி அப்போது வரவேற்றது ஏன்? உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியாவுக்கு என்ன வேலை என அன்று ஏன் கேட்கவில்லை? இதைவிடக் கொடுமை....

'இலங்கைக்கு ஆயுதங்களை இந்தியா விற்பனை செய்யலாம்’ என்ற அரிய ஆலோசனையை வழங்கியவரும் ஒரு மார்க்சிஸ்ட் தலைவர்தான். 2000, ஜூன் மாதத்தில் விடுதலைப்புலிகளின் ராணுவரீதியான தாக்குதலில் தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை ராணுவம் ஆனையிறவு முகாமை இழந்தபோது உள்ளம் பதறிப்போய் இப்படிக் கோரிக்கை வைத்தவர், மரியாதைக்குரிய மார்க்சிஸ்ட் தலைவர் உமாநாத். அவரது மகள் உ.வாசுகி இப்போது சொல்கிறார், 'அந்த மக்களுக்கு எது தேவையோ, அதை அவர்கள் தீர்மானித்துக்கொள்வார்கள்’ என்று.

தமிழன் படுகொலை செய்யப்படும்போது 'அது அவர்களது உள்நாட்டுப் பிரச்னை’ என்பதும், இலங்கை ராணுவம் தோல்வியைத் தழுவும்போது, 'இந்தியா ஆயுதம் விற்கலாம்’ என்றும் ஆலோசனை சொல்வதும் யாருடைய நலனைப் பிரதிபலிக்கிறது? நமக்கு எதற்கு ஆயுதத் தரகு வேலை? ஆயுதம் விற்கலாம் என்று சொன்னால், இலங்கை அரசாங்கம் செய்வது அனைத்தும் சரியானது என்று அந்தக் கட்சி நம்பியதா? 'உமாநாத் அன்று சொன்னதைத்தான் நாங்கள் இன்று செய்தோம்’ என்று மன்மோகன்சிங் சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? ஜூன் மாதம் இந்த ஆலோசனையை உமாநாத் சொன்னார். டிசம்பர் மாதம் மிருசுவில் என்ற இடத்தில் ஒரு புதைகுழி தோண்டப்பட்டு, எட்டுப் பிணங்கள் எடுக்கப்பட்டன. ஒரு கை எலும்பு கிடைத்து, அந்த இடத்தைத் தோண்டியபோது எட்டுப் பேரின் எலும்புகள் கிடைத்தன. இந்தக் காட்டுமிராண்டித் தனத்துக்கா ஆயுதம் கொடுக்கச் சொன்னீர்கள்? அது என்ன சோஷலிஸ அரசா? தமிழர்கள், சோஷலிஸ அரசைக் கவிழ்க்கச் சதிசெய்தார்களா? ஏகாதிபத்தியம் அந்த ஆட்சிக்கு எதிராகத் தமிழர்களைத் தூண்டியதா?

இலங்கைக்கு ஆயுதம் விற்பனைசெய்ய மாட்டோம் என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி முடிவை எடுத்தவர் 'மதவாத’ப் பிரதமர் வாஜ்பாய். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 'இடதுசாரி’ சுர்ஜித் அதை ஆதரித்தார். ஆனால், தமிழ்நாட்டு 'இடதுசாரி’ உமாநாத் அதற்கு விரோதமாகக் கருத்துச் சொன்னார் என்றால், கோளாறு எங்கிருந்து தொடங்குகிறது? 'அரசியலின் நீட்டிப்பே யுத்தம்’ என்றார் மாவோ. அது புரிந்திருந்தால், ஆயுத வர்த்தகம் பற்றி ஒரு கம்யூனிஸ்ட் பேச முடியுமா?

ஈழத்து விடுதலைப் போராட்டம் தோற்றுப்போனதற்கு மிக முக்கியமான மூன்று காரணங்கள்...

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அரசாங்கம் தவிர யாரிடமும் ஆயுதம் இருக்கக் கூடாது என்பது, அமெரிக்கா உருவாக்கிய உலக ஒழுங்கு. விடுதலைப் போராட்டம், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என எந்த வித்தியாசமும் பார்க்காதே, அனைவரிடமும் இருக்கும் ஆயுதங்களையும் பறிமுதல் செய் என்பதே அமெரிக்காவின் தீர்ப்பு. இதற்குப் பதிலடி கொடுக்கக்கூடிய சோஷலிஸ, ஜனநாயக மாற்று (முன்பு சோவியத் இருந்தது போல!) அரசியலமைப்புகள் இல்லை. இருந்தால் அவர்கள் விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாத இயக்கங்களையும் பிரித்துப் பார்ப்பார்கள். இலங்கையை நிலைக்களனாகப் பயன்படுத்த சீனா துடித்தது. இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியது. இத்தகைய வெளிப்புறச் சக்திகளின் நலன்கள் சேர்ந்து 'பயங்கரவாத இயக்கத்தை அழிக்கிறோம்’ என்ற போர்வையில், லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்க பின்னணியில் இருந்தனர். இவை எதையும் உள்வாங்கிக்கொள்ளாமல் வறட்டுத்தனமாக அனைத்துப் பழிகளையும் புலிகள் மீது போட்டுத் தப்பிக்கப் பார்ப்பது மரணித்த மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்.

கட்டுரையை முடிக்கும்போது மாக்சிம் கார்க்கி நினைவுக்கு வருகிறார்..

'அடிமைகளின் துன்பத்துக்கும் அடிமைப்படுத்துவோரின் கொடுமையான ஏமாற்றுவித்தைக்கும் நடுவே சமரசத்தை உண்டுபண்ண வேண்டும் என்று நயவஞ்சமாகக் கூறுகிறார்கள். எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான நோக்கத்தை மனதில்வைத்துக்கொண்டு இவ்வாறு கூறுகிறார்கள். இது, பொய்களைக் கற்களாகக்கொண்டு மனிதனுடைய சுதந்திர உள்ளத்துக்குச் சமாதி கட்டிவைப்பதற்காகச் செய்யப்படும் கேவலமான சூழ்ச்சியைத் தவிர வேறொன்றும் இல்லை’.


இத்தொடர் முற்றுப்பெற்றது


மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 9

Tuesday, May 28, 2013

தலைவர் பிரபாகரன் தொடர் - 6


சரியான இருட்டுக் காடு. யாரும் அத்தனை சுலபத்தில் பொடிநடை யாக உள்ளே வந்துவிட முடியாத அளவுக்கு அடர்த்தியும் அபாயங்களும் நிறைந்த காடு. அபாயத்தில் பெரிய அபாயம், கால் வைக்கும் இடங்கள். அடடே காய்ந்து கிடக்கிறதே என்று அடியெடுத்து வைத்தால் அப்படியே உள்ளே போய்விட வேண்டியதுதான். புரையோடிய சதுப்பு நிலம். மேலே தரை போலவும், கீழே பல அடி ஆழத்துக்குச் சேறுமாகப் பல இடங்களில் இருக்கும். சுற்றிலும் கனத்த மரங்கள். முட்புதர்கள். என்னவென்று பெயர் தெரியாத காட்டுச் செடிகள். பகலில் கூடப் பல இடங்களில் இருட்டாகவே இருக்குமளவுக்கு அப்படியொரு அடர்த்தி.

கஷ்டப்பட்டு அந்தப் பிரதேசத்தைக் கடந்துவிட்டால் சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவில் நல்ல தரை உண்டு. அருமையான விவசாய நிலம். பயிர் செய்யலாம். குடிசை போட்டு சுகமாக வாழலாம். மனித வாசனையே கிடையாது. யானை வாசனை மட்டும்தான்.

பிரமாதம், இங்கேயே நாம் கூடாரம் அமைக்கலாம்’ என்று பிரபாகரன் சொன்னார். அது புகழ்பெற்ற வவுனியா கானகத்தின் ஒரு பகுதி. எந்தப் பக்கத்து மெயின் ரோடிலிருந்து வந்தாலும் ஏழு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தாக வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் உயிருடன் அந்த ஐம்பது ஏக்கர் நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்துவிடலாம். `பூந்தோட்டம்’ என்று பெயர். பிரபாகரன் தான் வைத்தார்.

தோழர்கள் பரபரவென்று நிலத்தைச் சீராக்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். தக்காளி விதைக்கலாமா? வெண்டைக்காய்? கத்திரி கூட நன்றாக விளையும். ஆளுக்கொன்று ஆசைப்பட்டார்கள். கொஞ்சம் அரிசி கூட முயற்சி செய்து பார்க்கலாமே?

சத்தியமாகத் தங்களைத் தேடிக்கொண்டு காவல் துறையினர் வந்துவிட முடியாத இடம் என்பது உறுதியான சந்தோஷத்தில் அவர்கள் உற்சாகமாக விவசாயம் செய்தார்கள். உத்வேகத்துடன் துப்பாக்கி சுடப் பழகினார்கள். மணிக்கணக்கில் ஓடவும் எகிறிக் குதிக்கவும் சரேலென்று பதுங்கவும் பாயவும் ஓடியபடி சுடவும் சுட்டுவிட்டுத் தப்பிக்கவும் அக்கறையுடன் பயிற்சியெடுத்தார்கள்.

யானைகள் நிறைந்த அந்தக் கானகத்தின் நடுவே சுமார் இருபது புலிகள் பிறந்து வளர்கின்றன என்று சொன்னால்கூட அப்போது யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். யாழ்ப்பாணம் முழுதும் இளைஞர்கள் பல்வேறு குழுக்களாகவும் உதிரிகளாகவும் ஆயுதப் புரட்சி குறித்து கனவு கண்டுகொண்டிருந்த சமயத்தில் முறையான பயிற்சி, அதன்பிறகு செயல் என்று தீர்மானமாகக் களமிறங்கிய முதல் நபர் பிரபாகரன்.

நண்பர்களே, ஒரு விஷயம். ஓர் இயக்கம் ஒழுங்காக வளர்வதும் வாழ்வதும் சாதிப்பதும் அத்தனை எளிதான செயலல்ல. நம்மிடையே மிகச் சிறந்த கட்டுப்பாடுகள் இருந்தாலொழிய நமது போராட்டம் வெல்லாது. உங்களில் எத்தனை பேர் வீடு, குடும்பம், காதல், திருமணம் போன்ற சிந்தனைகளை முற்றுமுழுதாகத் துறக்கத் தயாராக இருக்கிறீர்கள்?’

பிரபாகரன் கேட்டார். அத்தனை பேரும் கைதூக்கினார்கள்.

சரி. நம்மில் யாரும் புகை பிடிக்கக்கூடாது. மது அருந்தக்கூடாது. எந்த விதமான லாகிரி வஸ்துக்களுக்கும் இயக்கத்தில் இடமில்லை. இது கட்டாயம். யாராவது விதி மீறினால் உடனே வெளியேற்றப்படுவீர்கள். முற்று முழுதான விழிப்புணர்வுடன் அத்தனை பேரும் இருந்தாகவேண்டும். சம்மதமா?’

சரி என்றார்கள்.

இயக்கத்தில் யாரும் வீட்டுக்குப் போகக்கூடாது. வீட்டாருடன் ரகசியமாகக் கூடத் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா எல்லோரும் முக்கியம்தான். லட்சியம் அனைத்தைக் காட்டிலும் முக்கியம். நாம் அவர்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்கும் அது பிரச்னையாகிப் போகும். புரிகிறதா?’

முன்பொரு நாள் அதிகாலை ஐந்து மணி சுமாருக்கு வல்வெட்டித்துறையில் பிரபாகரன் வீட்டுக்கு போலீஸ் வந்து கதவு தட்டியதே? அப்போது எழுந்து வெளியே போனதுடன் சரி. இன்றுவரை அவர் தன் வீட்டுப்பக்கம் சென்று பார்த்ததில்லை. அந்த மன உறுதியைத்தான் அவர் தமது தோழர்களிடம் அன்றைக்கு வாக்குறுதியாகக் கேட்டார்.

எந்தக் காரணத்தாலாவது இயக்கத்திலிருந்து யாராவது வெளியேற நேர்ந்தால் அவர்கள் வேறொரு இயக்கத்தில் போய்ச் சேரவோ, புதிய இயக்கம் தொடங்கவோ கூடாது. புலிகள் அமைப்புக்குள் நிகழும் எந்த ஒரு விஷயமும் வெளியே குறிப்பாக எதிரிகளுக்குத் தெரியக்கூடாது. நாம் நட்புணர்வுடன் இருப்போம். ஆனால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக முக்கியம். எந்த விதியையும் யாரும் மீறுவதற்கில்லை. மீறுவது என்று யார் முடிவு செய்தாலும் அது இயக்கத்துக்கு துரோகம் செய்வதாகும். சம்மதமா?’

அவர் கவலைப்பட்டதில் நியாயம் இல்லாமல் இல்லை. யாழ்ப்பாணத்தில் அன்றைக்கு இம்மாதிரி புரட்சிகரக் கனவுடன் களமிறங்கிய பல இளைஞர் குழுக்கள் வெகு சீக்கிரத்தில் காணாமல் போய்க்கொண்டிருந்தன. மாணவர் பேரவை இருந்தது, சிதைந்து விட்டது. பிறகு இளைஞர் பேரவை வந்தது. அதுவும் சிதறிவிட்டது. டி.எல்.ஓ. என்று ஒரு குழு தொடங்கப்பட்டது. ஒரே ஒரு வங்கிக்கொள்ளையுடன் காணாமல் போய்விட்டது. பெயர் வெளியே தெரியும் முன்பே இயக்கம் சிதைந்த கதைகள் அநேகம்.

அம்மாதிரியான அனர்த்தங்கள் ஏதும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் அறவே கூடாது என்று அவர் நினைத்தார். அதனால்தான் யாரும் எண்ணிப் பார்க்கமுடியாத கடும் நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டன.

இயக்கத்தின் உறுப்பினர்களுக்குப் பிரபாகரன் அளித்த போர்ப்பயிற்சி களுக்குக் கூட முன்மாதிரிகள் கிடையாது. கெரில்லாப் போர் முறைதான். திடீரென்று தோன்றித் தாக்கிவிட்டுக் காணாமல் போய்விடும் முறை. உலகின் பல பாகங்களில் பல இயக்கங்கள் கடைப்பிடிக்கும் வழக்கம்தான். ஆனாலும் யார் எப்படிச் செய்கிறார்கள், எப்படித் தாக்குகிறார்கள், எப்படித் தப்புகிறார்கள் என்றெல்லாம் பிரபாகரன் ஆராயவில்லை. விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவும் இல்லை.

இதோ பாருங்கள். இது நம் மண். நமது பிரச்னை. நமது எதிரிக்கு எது சரி என்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்னொரு இடத்தில் கையாளப்படும் போர்க்கலை உத்திகள் இங்கே எடுபடும் என்று சொல்வதற்கில்லை. தெற்கே ஜனதா விமுக்தி பெரமுனா ஒரு புரட்சி செய்தார்களே, என்ன ஆயிற்று பார்த்தீர்கள் அல்லவா? அதுவும் ஆயுதப் புரட்சிதான். அரசுக்கு எதிரான புரட்சிதான். சீனப் புரட்சி, ரஷ்யப் புரட்சி முன் மாதிரிகளை வைத்துக்கொண்டு வியூகம் வகுத்தார்கள். என்ன ஆனது? பதினைந்தாயிரம் பேரை பலி கொண்டது தவிர வேறென்ன லாபம்?

வேண்டாம். யாரையும் பார்க்காதீர்கள். நமக்கு முன்மாதிரிகளைத் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். நமக்கு நாம்தான் ஆசிரியர்கள். நமது பாதையை நாம் தீர்மானிப்போம். இந்தக் காட்டுக்குள் இப்படியொரு வசதியான பயிற்சியிடத்தை நமக்கு நாமே கண்டெடுக்கவில்லை? அதே மாதிரி, நமக்கேற்ற போர்ப்பயிற்சிகளை நாமே உருவாக்கிக்கொள்வோம்.

அப்படித்தான் அவர் ஆரம்பித்தார்.

தமிழர்களை புழு பூச்சி அளவுக்குக் கூட மதிக்காத இலங்கை அரசின் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் 1978 செப்டம்பர் 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயவர்த்தனே அரசுக்கு எந்த வகையில் சவால் விடுக்கலாம் என்று அரசியல் கட்சியினர், போராளி இளைஞர்கள் எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிரபாகரன் அதற்குள் காரியத்தைச் செய்தே முடித்துவிட்டார். ஏர் லங்காவுக்குச் சொந்தமான ஒரு ஆவ்ரோ விமானம். பயணிகள் இறங்கும் வரை பொறுத்திருந்துவிட்டு வெடிக்கும் விதத்தில் ஏற்பாடு செய்து தேசத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தார்.

இது பேசும் இயக்கமல்ல; செய்யும் இயக்கம் என்று அத்தனை பேருக்கும் புரிந்தது அப்போதுதான். எல்லாம் சரியாக இருந்தது. எல்லோரும் சரியாகவே இருந்தார்கள். சற்றும் எதிர்பாராத விதத்தில்தான் அந்தப் பிரச்னை வந்தது.

பிரச்னை என்பது பூத மாகத்தான் வரவேண்டுமா என்ன? ஒரு காதலாக அது வந்தது.

தொடரும்

தலைவர் பிரபாகரன் தொடர் - 5

நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – 6



உடனே எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டேன். பற்றைக்காடுதானே அவதானித்து நகருவமென்று. நகர்ந்து கொண்டு இருந்தேன். அப்போது நேற்று சம்பவம் நடந்த பக்கம் சத்தம் கேட்டது. நான் நிற்கிற பக்கமும் கேட்டது. ஆமி ‘கிளியறிங்’ செய்து கொண்டு போற சத்தம் அது.

நான் காட்டுக்குள்ளால் வந்து கொண்டிருந்தேன். பெரிய அருவியின் கிளைகள் நிறைய இருந்தது. முதல் அருவியிலும் மரம் ஒன்று விழுந்து கிடந்தது. அது மெல்லியமரம் கொடியொன்று தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு தடியை எடுத்து ஆழம் பார்த்தேன். இதுவும் ஆழமாகத்தான் இருந்தது. தடியை ஊன்றிக் கொண்டு மெதுவாக மரத்தில் காலை வைத்துப் போனேன். கொடிக்குக் கிட்டப் போக மாறி மாறி உருளப் பார்த்தது. நான் உடனே இடது கைக் கமக்கட்டுக்குள் தடியை வைத்துவிட்டு மற்றக் கையால் கொடியைப் பிடித்துவிட்டேன். மரம் அங்கே இங்கேயென்று ஆடியது.

ஒரு மாதிரி கொடியைப் பிடித்துப் பிடித்து கரைக்குக் கிட்டப் போக மரம் தூக்கிவிட்டது. உடனே தடியை ஊன்றி ஒரு காலை கீழே வைத்துப்பார்த்தேன். தாழம் இல்லை. உடனே இறங்கி நடந்து மேலே ஏறி நடந்தேன். பிறகுமொரு அருவி அதில் இடுப்பளவிற்கு தண்ணீர். கரையில் ஏறி பள்ளமான பக்கத்தில் காலை வைத்துவிட்டு முன்னுக்குப் பார்த்தேன் ஆமியுடைய ‘சூ’ (சப்பாத்து) அடையாளம் இருந்தது. நிலம் ஒரே சுரியாக இருந்தது. அப்பதான் அவ்விடத்தால் ஆமி போயிருக்கிறான். நான் அந்தக் காலடிக்கு மேலேதான் காலை வைத்திருக்கிறேன். உடனே அதை அழித்துவிட்டு எல்லா இடமும் சுற்றிப் பார்த்துவிட்டு வேகமாய்ப் போய் ஒரு பற்றைக்குள் இருந்துவிட்டேன். அருவிக்கரையோரம் ஆமியின் சத்தம் கேட்டது.

ஆமி அருவிக்கு அங்கால சத்தம் போட்டு ‘கிளியறிங்’ செய்து கொண்டு போனான். எல்லா ‘பங்கர்’களுக்கும் குண்டடித்தான். திடீரென்று மளமளவெண்டு ‘ரவுண்ஸ்’ சத்தம் கேட்டது. மாறிமாறிச் சத்தம் போட்டுக் கத்தினான். எங்களுடைய ஆட்களைக் கண்டு சுட்டிருக்கிறான். அதைத்தொடர்ந்து மாறிமாறி இருபகுதியினரின் ரவுண்ஸ் அடியும், குண்டெறிந்து, வெடித்த சத்தங்களுமாக அவ்விடம் அதிர்ந்து ஓய்ந்தது. பிறகு நெருப்பு எரிந்து புகைவது தெரிந்தது. எனக்கு இன்னும் கவலை கூடியது. எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்; கோபமும் கூடியது. கறள் படிந்த நாட்களும் சம்பவங்களும் என்று யாராவது பழைய கதைகள் சொன்னாலே நான் அழுதிடுவேன். இப்ப நேரே பார்த்து அழவேண்டிய நிலை. மனது சரியாக நோகிறது, பாரமாக இருந்தது. யாரிடமாவது சொல்லிப் பெரிதாக அழவேண்டும் போல இருந்தது. என்ன செய்வது. எதுவுமே செய்யமுடியாத பரிதாப நிலையில் நான். என்னுடன் இருந்து பலகாலமாகப் பழகி, ஒன்றாக உண்டு, பயிற்சி எடுத்து, படுத்து, விளையாடியவர்கள் எனக்கு முன்னாலேயே எரிந்து சாம்பலாகிவிட்டார்களே என்ற ஒரு வெறி. இப்ப போய் அவனைக் குத்திகிழிக்க வேண்டும் போல இருந்தது.

அந்தப் பற்றைக்குள்ளிருந்தே எடுத்துக் கொண்டுவந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு இருந்தேன். இந்தச் சம்பவம் 4ஆம் மாதம் 6ம் திகதி நடந்தது. இரவு ஆனதும் அருவியால் இறங்கி திரும்பவும் அந்தப்பக்கம் வந்தேன். முழு வெட்டை. தூரத்தில் வாகனச் சத்தம் கேட்டது. பற்றை ஓரமாக நடந்தால் தூரத்தில் இருந்து பார்த்தால் அசைவு தெரியாது. நிலவாகவும் இருந்தது. கொஞ்சத் தூரம் நகர்ந்தேன். மிகவும் வெளிச்சமாக இருந்தது. அதனால் வெட்டையப் பாக்கக்கூடிய மாதிரி ஒரு பற்றைக்குள் இருந்து நித்திரை கொண்டேன். விழித்துப் பார்த்தபோது வெட்டையில் ஒரு 200 அடி தூரத்தில் வெளிச்சம் (‘டோச்’) தெரிந்தது.

திடீரென்று ஆமி கத்திச் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்துடன் துப்பாக்கிச் சத்தமும் கேட்டது. நேரத்தைப் பார்த்தேன் இரவு 2.20. பின்னர் ஆமிக்காரர் யாரோ ஒருவரை தரதரவென இழுப்பது போல தெரிந்தது. நிலவாக இருந்தபோதும் தெளிவாகத் தெரியவில்லை. நான் பற்றைக்குள் நன்றாக உட்புகுந்து ஒளித்தவாறே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன். அது எங்கட ஆட்களில் யாரோ தன்னைத்தானே சுட்டு வீரச்சாவடைந்திருக்கவேண்டும் அவருடைய உடலைத்தான் ஏதோ சொல்லி கத்திக் கத்தி இழுத்துக் கொண்டு வந்தார்கள். அடுத்து, எனது நிலையை எண்ணி, தயாராக குண்டை எடுத்து கிளிப்பைக் வாயால் கழற்றக் கூடியவாறாக வைத்தபடியே குப்பியையும் எடுத்து கடிக்கக் கூடியநிலையில் தயாராக வைத்தபடியே இருந்தேன்.

விடுபட்ட ஆக்கள் இரவுக்கு நகருவார்கள் என்று ‘கட்டவுட்’ போட்டிருந்தான். எனக்குப் பக்கத்தில் ஒரு 100 அடியில் இன்னொரு ஆமியின் ரீம் நின்றது. நாய் குரைத்துச் சத்தம் கேட்டது. நான் இனி இங்கே இருக்கக்கூடாது என்று நினைத்து அருவியைக்கடந்து அங்காலே போவமென்று எழும்பினேன். ஆமி அந்த உடலை இழுத்துக் கொண்டு போய் வெட்டையான பகுதியில் போட்டுவிட்டு தனது தொலைபேசியால் போட்டோ எடுத்தான்;. அதிலேயே வைத்து அந்த உடலை எரித்துவிட்டு, தான் வந்த திசைக்கு றவுண்ஸ் அடித்துப் பார்த்தான். நிலவுதானே எல்லாம் தெரிந்தது.

நான் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அருவிக்குள் இறங்கி நடந்து போனேன். பெரிய ஆழமில்லை. அங்கால் கரையில் எருமைமாடுகள் மேய்ந்து கொண்டு நின்றன. நான் வருவதைக் கண்டுவிட்டு, நான் கரையில் ஏற அதுவும் எனக்குக் கிட்ட வந்தது. எனக்கு உடனே என்ன செய்வது என்ற தெரியவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் இது வேறு துன்பமா? இவ்வளவு றவுண்ஸ் அடிக்கும்போதும் ஒரு மாதிரி தப்பிவிட்டேன். இனி இந்த மாட்டைக் கலைக்கப் போய் அவனிட்டை அல்லது மாட்டிடம் அகப்படத்தான் போகிறேன் என்று நினைத்தவாறு ‘சூய்’ என்று கலைத்துப் பார்த்தேன். எல்லா மாடுகளும் கொஞ்சத் தூரம் ஓடின. நான் அதற்கிடையில் பக்கத்தில் உள்ள பற்றைக்குள் புகுந்துவிட்டேன்;. எருமைமாடு வந்து பார்த்தது. நான் ஆடிஅசையாமல் அப்படியே இருக்க தன்பாட்டிலே போய்விட்டது. நிலவு மறையவில்லை நகர்ந்தால் தெரியும். அதனால் பற்றைக்குள்ளேயே இருந்தேன்.

நான் பகலில் நல்ல பற்றையாகப் பார்த்து புகுந்திருந்து நித்திரை கொள்வேன். அவதானிக்க வேண்டிய பிரதேசமென்றால் விழிப்பாக இருப்பேன். முழு நகர்வும் இரவில்தான். நாய்களால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நிலவு மறைய எழும்பி அருவிக்கரை ஓரமாக நடந்து போனேன்.

புதுக்குடியிருப்புக்கும் கிளிநொச்சிக்கும் போய்வருகிற பிரதான தெரு அது. அதிலிருந்து ஒரு 100 அடி தூரத்தில் நின்று, எப்படியாவது றோட்டைக் கடக்கவேண்டுமென்று பார்த்தேன். நடமாட்டம் கூடவாக இருந்தது. உடனே தண்ணீருக்காலே இறங்கி நடந்தேன். மணியைப் பார்க்க மறந்திட்டேன். தடியொன்றையும் எடுத்துக்கொண்டு போனேன். விடிய வெளிக்கிட்டுவிட்டு என்ன செய்வது. பாலத்தால் போனால் ஆமி பாத்திடுவான் என்று நினைத்துவிட்டு திரும்பவந்து ஒரு பற்றையைப் பார்த்து இருந்துவிட்டேன்;.

அன்று மதியம் ஆமி வரும் சத்தம் கிட்டக் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன் எனக்கு நேரே ஒரு ‘பொசிசன்’ போட ஒருவன் கிடங்கு கிண்டுகிறான்;. ஒருவன் தடி வெட்டுகிறான்.

தொடரும்.

நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – 5

முகவரி அல்ல முகம் - பாகம் 6

விரிந்த உங்கள்
வெள்ளைச் சிறகுகள்
ஒப்பந்தச் சாத்துகளால்
கறைப்பட்டதில்லை

தொடரும் இரும்பு நாய்களின்
குரைப்பில்
அவர்களின் பெருமூச்சைக்
கேட்க முடிந்ததோ?
சரசரக்கும் சருகுகளில்
சன்னமாய் ஒலித்த
குரல்களில் இருந்த செய்திகள் என்ன?

பதவி நாற்காலிப்
பந்தய ஒட்டத்தில்
மிதிபட்டு நசுங்கிய
ஈழப் பிரச்சனையோ?

அமைதித் திரையின் பின்பு
குருதியில் குளிக்கும்
அசோகச் சிங்கங்களை
அம்பலப்படுத்த
இனியும் தமிழகம்
எழும் என்ற நம்பிக்கையா?

வடக்கில் எந்த
வளர்ந்த மரங்களில்
அடைவீர் என்பதை
அறியேன்……. ஆயினும்
அமரும் போது கூறுக…….

அந்தக்
கானகச் சருகுகளில்
புதைந்து கிடப்பவை
விடுதலைக்கான விதைகள் என்று…
முளைவிடும்……. வானத்தை
முட்டி வளரும் என்று…
கடந்து வந்த கடல்களின்மீதும்…
வழியனுப்பி வைத்த குன்றுகள் மீதும்…
ஆணையிட்டுக்
கொக்குகளே:
கூறுக!

- மக்கள் கவிஞர் இன்குலாப்.

அடிமைத் தனத்தின் வலி, உணர்ச்சி உள்ளவர்க்கு மட்டுமே புரியும். ஆமையைப்போல் அடங்கி ஓடுங்கி வாழ எந்த ஒரு தன்மானம் கொண்ட இனமும் விரும்பாது. உரிமையை இழப்பது உயிரை இழப்பதைவிட கொடுமையானது. உரிமை இழந்து வாழ்வது நம்மை பிணங்களாக அடையாளப்படுத்தும். நமது உரிமையைக் குறித்த சிந்தனை நமது கடந்தகால நிகழ்வுகளின் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது. நான் யார் என்று என்னை புரிந்து கொள்ளாதவரை எப்படி நானாக இருக்க முடியும். நான் என்பது ஒரு புள்ளி அல்ல. கடந்த காலத்தின் தொடக்கம். ஒரு புள்ளி தொடக்கத்தை விட்டுச் செல்லும் ஆவணம். என்னிலிருந்து தான் என் சந்ததியினர் என்னைக் கற்றுக் கொள்வார்கள். எனக்கான அடையாளங்கள் என்னுள் ஏராளமாய் புதைந்திருக்கிறது. எனக்கான ஒரு மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல் வடிவமைப்பு எனது பழக்க, வழக்கம், உணவு முறை, உறவு பின்னல்கள், இவைகள் என்னை மற்றவர்கள் தெரிந்துகொள்ள காரணியாக இருக்கிறது. என்னை அவர்கள் தெரிந்து கொள்வதைப் போலவே என் மூதாதையர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நான் என்பது என் மூதாதையர்களின் நிகழ்கால இருப்பு. என் மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்பதை தெரிந்து கொள்வதன் மூலமே என்னை நான் அடையாளப் படுத்த முடியும். இதைதான் வரலாறு என்கிறோம். இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளாதவரை நமக்குள் கோபம் வராது. போராடும் உணர்ச்சி துளிர்விடாது. ஆகவே எந்த ஒரு நிகழ்வையும் அதன் வரலாற்றுப் பதிவுகளோடு அல்லது அந்த வரலாற்றின் பார்வையின் துணை கொன்டு நம்மை நாம் இருத்திக் கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று விட்டு வீரனாய் வேடம்போடும் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக உலகநாடுகள் சபையில் அன்று கொண்டுவரப்பட்ட முதல் தீர்மானம் தோல்வியடைந்தது. பல நேரங்களில் வரலாற்றில் பல பிழைகள் இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கியூபாவும் உடன் சேர்ந்திருப்பதை எண்ணி அதிர்ச்சியும், வியப்பும் அடைந்திருக்கிறது. அடிமைச் சிந்தனையை உடைத்தெரியும் தன்மை வாய்ந்த ஒப்பற்ற நாடாக நாம் பலமுறை கியூபாவை அடையாளப்படுத்தி இருக்கிறோம்.

ஆனால் கியூபா எப்படி இந்த அநியாயத்திற்கு துணைபோனது என்பது விளங்கவில்லை. ஆனால் நமது சிந்தனையில் கியூபா மட்டுமல்ல, எதிராய் வாக்களித்த எந்த நாடுகளிலும் தமிழர் விடுதலைக்கான தலைவர்கள் தாம் சரியாக பணியாற்றவில்லை என்பதை இந்தியா, பாகிஸ்தான், சீனாவைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்கு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தை சரியாக எடுத்துரைக்க தவறியதால், அல்லது அந்த நாடுகளுக்கு தமிழீழ விடுதலைப் போராளிகளின் தியாகத்தையும் அவர்களின் போராட்ட தர்மத்தையும் சரியாக விளக்கிச் சொன்ன காரணத்தினால் தமிழர்களுக்கு எதிரான முதலாவது உலகத் தீர்மானம் வெற்றிப் பெற்றிருக்கும் என தோன்றுகிறது. எந்த ஒரு போராட்டத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு அமைந்திருப்பதை, நாம் கூர்ந்து பார்க்கும் போது தெரிந்து கொள்ள முடியும். அந்த வரலாற்றில் உள்ள நியாயம் அந்த உரிமையை வென்றெடுக்கவேண்டிய தேவை இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டிய கட்டாயம் ஆகியவைகள் அந்த மக்களின் இதய வலியை வைத்தே அளவீடு செய்ய முடியும்.

சில செய்திகளை திரும்பத் திரும்பச் சொல்வது சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அழுத்தமாய் பதிவு செய்வதற்காகவே நாம் அடிக்கடி சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழர்களின் வாழ்க்கையை வாசித்து வாசித்துப் பழக்கப்பட்ட இலங்கைத்தீவிற்கு விஜயனின் வருகை ஒரு வீழ்ச்சியைத் தந்தது. அதைவிட மேலாக பௌத்தர்கள் தமது சமயத்தைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்ய தயாராக இருந்த காரணத்தினால் சதியாய் ஒரு கதை எழுதி அதை சரி என நம்ப வைத்து கழுத்தறுத்தார்கள். இதிகாசங்களை வைத்து இந்தியாவின் வரலாற்றை எப்படி தீர்மானிக்க முடியாதோ அப்படியே மகாவம்சத்தை வைத்தும் தமிழீழ வரலாற்றை தீர்மானிக்க முடியாது. வயதான தமிழ் மன்னன் எல்லாளனை சதியால் கொன்றொழித்த சிங்கள, பௌத்த இனவெறியர்கள் இன்று தமிழர்களை கருவறுக்கும் கொடுமையை கேவலமாய் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

கோட்டையை தலைநகராகக் கொண்ட கோட்டைச் சிங்கள அரசு போர்த்துக்கேசியரின் அதிரடி நடவடிக்கையால் அடங்கி ஒடுங்கியது. கி.பி. 1605 ல் இந்த நிகழ்வு முடிந்து 14 ஆண்டுகள் கழித்து நிலம் பறிக்கும் கூட்டமாய் காலணி ஆதிக்க அடங்கா பிடாரிகளாய் வலம் வந்து கொண்டிருந்த அதே போர்த்துக்கேசியர்களால் கி.பி. 1619 ஆம் ஆண்டு தமிழீழ அரசு ஒடுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குள் அதாவது கி.பி.1815 ல் கண்டியைத் தலை நகராகக் கொண்ட கண்டி உடறந்த அரசு ஆங்கிலேயர்களால் வெற்றி கொள்ளப்பட்டது. கிரேக்க புவியியல் வல்லுனர்கள் தாலமி முதல் சமீபகாலங்கள் வரை இலங்கைத் தீவிற்குச் சென்ற ஆங்கிலேயர்கள் வரை தமது குறிப்புகளில் தமிழர் நிலப்பகுதியையும், சிங்களர் நிலப்பகுதியையும் தனித்தனியே தான் குறிப்பிட்டு வந்துள்ளார்கள் என்பது வரலாற்று ஆவணங்களில் இருந்து நமக்கு விளங்குகிறது. சிங்கள பேரினவாதிகள் இப்போது பேசும் ஒன்றுபட்ட இலங்கை என்பது இருந்ததில்லை. அது விஜயனின் வருகைக்கு முன்னர் தொல் தமிழர்களால் மட்டுமே அவ்வாறு அறிவித்துக் கொள்ளமுடியும்.

இந்தியாவை ஆளும் சில அரசியல் வாதிகள் அயல் நாட்டின் இறையாண்மைக்குள் தாம் நுழைய முடியாது என்று கூறுகிறார்கள். தேசிய ஒருமைப்பாடு குறித்து மூச்சுவாங்க பேசுகிறார்கள். தமிழ்தேசியத்தின் மீது சிங்கள, பௌத்த பேரினவாத தேசியம் அடக்குமுறையை ஏவிய வரலாற்றை இவர்கள் அறியாதவர்களா, அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் நடிக்கிறார்களா என்பது எமக்கு விளங்கவில்லை.

சிங்களர்கள் தமது ஆட்சிப்பிரிவுகளை இரட்டை என்று அழைத்தார்கள். தமிழர்கள் தமது ஆட்சிப்பிரிவுகளை வன்னிமை என்று அழைத்தார்கள். சிங்களரின் ஆட்சிப்பகுதியாக ராஜரட்டை, மாயரட்டை, உடறட்டை, உரோகனரட்டை என்பவைகளும் தமிழர் தம் ஆட்சிபிரிவுகளாக யாழ்ப்பாணம், வன்னி, கொட்டியாறு, பழுக்கானம், பானம்மை, முத்துச் சலாபம் என்று பகுக்கப்பட்டிருந்தது இவை பெரும்பிரிவுகளாக இருந்தாலும் இவற்றுள் பல்வேறு உட்பிரிவுகள் இருந்தன. இந்த ஆட்சியின் அளவுகளாக பல ஊர்கள் அமைந்திருந்தது.

கி.பி.1796 ல் ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயர்கள். கி.பி.1815 ல் கண்டி அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கைத் தீவுகள் முழுவதையும் ஒரே கொடையின் கீழ் கொண்டுவந்தார்கள். இரண்டாக, மூன்றாக பிரிந்து இருந்த கட்சி ஒன்றாகி ஒற்றை ஆட்சியாக இருந்தது, ஆங்கிலேய ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்தின் கீழ்தான்.

தொடரும்…

கண்மணி

முகவரி அல்ல முகம் - பாகம் 5

Saturday, May 25, 2013

இனப் பிரச்னையைத் தீர்க்காமல் ஒன்றுபட்ட புரட்சி சாத்தியம் இல்லை! - மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 9


செருப்புக்குத் தகுந்த மாதிரி காலை வெட்டிக்கொள்ள முடியுமா? தேசிய இனங்கள் குறித்த கொள்கையில் அப்படித்தான் நடந்துகொள்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

'மார்க்சியமும் இந்தியாவில் தேசிய இனப்பிரச்னையும்’ என்ற சிறு நூலை அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இருந்த தோழர் பி.டி.ரணதிவே எழுதி வெளியிட்டார். தேசிய இனம், தேசிய இனப்பிரச்னை என்பதற்கு லெனின், ஸ்டாலின் கொடுத்த விளக்கங்கள் அனைத்தையும் நிராகரித்து, தங்களுக்குத் தகுந்த மாதிரி ஒரு வடிவத்தை பி.டி.ரணதிவே கொடுத்துக்கொண்டார்.

'இந்தியாவின் நிலைமைகளில் சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கையோ, பிரிந்து செல்லும் உரிமை என்ற கோரிக்கையோ எழுப்பப்படவில்லை. இதற்கான காரணங்கள் மதுரைக் கட்சி காங்கிரஸில் பூரணமாக விவாதிக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை, அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம், மாநிலங்களுக்குச் சமமான பங்கு, மாநில சுயாட்சி, மீதம் உள்ள அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு என்று மேலே கூறப்பட்ட இதர திருத்தங்களைக்கொண்ட கோரிக்கை மூலம் மாற்றியமைக்கப்பட்டது’ என்று பிடி.ரணதிவே கூறுகிறார். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையையே மாநில சுயாட்சி என்ற சொல்லுக்குள் குறுக்கப் பார்ப்பது மார்க்சியத்துக்கே இழுக்கு.

ஓர் இனத்தின் உரிமைப் பிரச்னையை இடப் பிரச்னையாக, ஒரு மாநில அரசாங்கத்தின் நிர்வாகப் பிரச்னையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுருக்கிவிடுகிறது.

சுயநிர்ணய உரிமை வேறு, மாநில சுயாட்சி என்பது வேறு. மார்க்ஸியமும், தேசிய இனப் பிரச்னையும் தொடர்பாக ஸ்டாலின் எழுதிய எந்த வரையறைக்குள்ளும் மார்க்சிஸ்ட் கட்சியின் வியாக்கியானத்தைப் பொருத்திப் பார்க்கவே முடியாது.

'ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய, நிலையான மக்கள் சமூகமாகும். மேற்சொல்லப்பட்ட இந்த எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கும்போதுதான் நாம் ஒரு தேசத்தைக் காண முடியும்’ என்று வரையறை செய்த ஸ்டாலின்,

'எல்லா நாடுகளிலும் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சமூக ஜனநாயகம் பிரகடனம் செய்கிறது. சுயநிர்ணய உரிமை என்பது தங்கள் விதியை நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை அந்தந்த தேசிய இனங்களுக்குத்தான் உண்டு என்பதாகும். ஒரு தேசிய இனத்தின் வாழ்க்கையில் வலுக்கட்டாயமாகக் குறுக்கிடுவதற்கோ, அதன் பள்ளிகளையும், மற்ற நிறுவனங்களையும் அழிப்பதற்கோ, அதன் பழக்கவழக்கம் மற்றும் மரபுகளை மீறுவதற்கோ, அதன் மொழியை நசுக்குவதற்கோ, அவர்களின் உரிமைகளை ஒடுக்குவதற்கோ ஒருவருக்கும் உரிமையில்லை’ என்றும் எழுதினார்.

பொது மொழி, தொடர்ச்சியான ஆட்சி எல்லை, பொதுவான பொருளியல் வாழ்வு, பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் உளவியல் உருவாக்கம் - ஆகிய நான்கையும் தேசிய இனத்தின் சிறப்புக் கூறுகளாக ஸ்டாலின் வரையறை செய்து சுயநிர்ணய உரிமையைக் கொடுக்கிறார். பிச்சைப் பாத்திரம் ஏந்தி ஒரு மத்திய அரசாங்கத்திடம் சலுகை பெறும் மாநில சுயாட்சியாக அதைத் திரிபுவாதம் செய்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஒரு தேசிய இனத்தின் அரசியல் பிரதேசத்தை, மாநிலமாகவும் பிராந்தியமாகவும் குறுக்குகிறது.

தேசிய இனம் எனப் பிரித்துப் பேசுவது, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிக்கு எதிரானதாக நினைத்து அந்தக் கட்சி அப்படிச் செய்திருக்கலாம் என்று சிலர் நினைக்கக்கூடும்.

மேலோட்டமாகப் பார்த்தால், உண்மைதான். பாட்டாளி வர்க்கம் என்பது தேசங்களை அழித்து, சர்வ தேசியங்களை உருவாக்க விரும்புகிறது. ஆனால், அதை எப்படிச் செய்வது? இன உணர்வைப் பற்றிப் பேசாமல் இருப்பதன் மூலமாக அல்ல. இன ஒடுக்குமுறைக்கான அடிப்படைகளை ஒடுக்குவதன் மூலமாக இனப் பிரச்னைகளைத் தீர்த்தாக வேண்டும். அதனால்தான், பாட்டாளி வர்க்கக் கட்சியானது எப்போதும் சிறுபான்மை இனங்களின் உரிமைக்காகவும் வளர்ச்சி குன்றிய தேசங்களின் வளர்ச்சிக்காகவும் நின்று அவற்றை வளர்க்க வேண்டும் என்று லெனினும் ஸ்டாலினும் விரும்பினர்.

175 தேசிய இனங்களையும், மலை வாழ் இனங்களையும்கொண்ட நாடு ரஷ்யா. இந்தியாவைப் போல நான்கு மடங்கு பெரிய நாடு. 'அனைத்து இனங்களுக்கும் பிரிந்துபோகும் தன்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உண்டு’ என்ற பிரகடனம்தான் ஜார் ஆட்சிக்கு எதிராக அனைத்து இனங்களையும் ஒன்று திரட்டப் பயன்பட்டது. புரட்சியை மட்டுமல்ல, இரண்டாம் உலகப் போரையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் அனைத்து இனங்களும் சேர்ந்தே சோவியத் ஆட்சிக்கு வழங்கியது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் எழுந்த தேசிய இனப் பிரச்னையை தீர்க்காமல், ஒன்றுபட்ட சோவியத்துக்காக ஆட்சியாளர்கள் துடித்தபோது பால்டிக், எஸ்தேனியா, ஜார்ஜியா, உக்ரேன், மாலடோவியா, பைலோ ரஷ்யா என்று பல்வேறு இடங்களில் பிரச்னை தலைதூக்கியது. ரஷ்யப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வேகம் 50 சதவிகிதம் குறைந்ததற்குக் காரணம் அங்கு நடந்த தேசிய இனப் போராட்டங்கள்தான் என்று ஆய்வாளர்கள் எழுதினர். இதனால், 90-களின் தொடக்கத்தில் உடைந்து நின்றது ரஷ்யா. உலகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இரண்டு தேசங்களில் ஒன்றான ரஷ்யா உடைந்து நொறுங்குவதற்குக் காரணம், தேசிய இனப்பிரச்னையை ஸ்டாலினுக்குப் பிறகு வந்தவர்கள் சரியாக உள்வாங்காததும், மறைத்ததும். இனப் பிரச்னை அனைத்தையுமே யாரோ வெளியில் இருந்து தூண்டிவிடுகிறார்கள் என்ற பீதியைக் கிளப்பி மறைக்கப் பார்த்தனர். இரும்புத் திரையே கிழிக்கப்பட்டது என்பது வரலாறு!

இவை எல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரியாதது அல்ல.

இந்திய விடுதலைக்கு முன்னதாகவே 1945 நவம்பரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகவில்லை) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் பரிபூரண சுதந்திரம் பெற்ற அரசுரிமை அந்தஸ்துடைய அரசியல் நிர்ணயசபை ஏற்பட வேண்டும்’ என்று கூறப்பட்டது. 'நம்மிடையே தோன்றி வரும் வித்தியாசங்களைச் சுட்டிக் காட்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் நம்மைப் பிறர் தயவை நாடி நிற்பவர்களாக்கி, சுதந்திர அந்தஸ்தற்றவர்களாக்கி விடுகிறார்கள். ஒரு பகுதியினர், இன்னொரு பகுதியினரை எதிர்த்துக்கொண்டு நிற்கும் நிலைமையில் வைத்துவிடுகிறார்கள். இந்த விஷச் சக்கரத்திலிருந்து விடுவித்துக்கொள்வதற்கு ஒரேயரு வழிதான் உண்டு. நம்முடைய நாட்டு ஜனங்கள் அனைவருக்கும், வெவ்வேறு சுதந்திர அபிலாஷைகொண்ட வர்க்கங்கள் அனைவருக்கும் பரிபூரண சுதந்திர அரசுரிமை உடைய அந்தஸ்து உண்டு என்ற அடிப்படையில் நாம் இந்தச் சுதந்திரப் பாதையைப் பின்பற்றுவதே சரியான வழியாகும்’ என்று அதில் விளக்கம் கூறப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையோர் பாதிக்கப்படக் கூடாது என்ற உன்னதமான எண்ணத்தில் இந்த முடிவை அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் எடுத்தனர். சுயநிர்ணய உரிமை தரப்பட வேண்டும். அதைக் கேட்பதற்குத் தார்மீக உரிமை உண்டு. அந்த உரிமை நிராகரிக்கப்படும்போது, போராட வேண்டும் என்பதே அவர்களது அன்றைய நிலைப்பாடு.

1948ம் ஆண்டு பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை நடந்த கொல்கத்தா மாநாட்டிலும் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. 'கம்யூனிஸ்ட் கட்சி 1951 முதல் 1958 வரை கட்சியின் அடிப்படைத் திட்டத்தில் பிரிந்துபோகும் உரிமையுள்ள இந்திய தேசிய இனங்களின் அமைப்பாக இந்திய அரசியல் அமைப்பு இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்திய நிலைமையைக் கூர்ந்து கவனித்ததில் பிரிந்து போகும் உரிமையை வலியுறுத்துவது பொருந்தாது என்று முடிவுசெய்தது. பிரிந்து போகும் உரிமையின்றியே மொழி வழி மாநில அமைப்பை நன்கு பயன்படுத்தி அந்த ஒற்றுமையை வளர்க்கக்கூடிய வாய்ப்பையும் கம்யூனிஸ்ட் கட்சி கணக்கெடுத்து இவ்வாறு முடிவு செய்தது’ என்று, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர். வெங்கட்ராமன் எழுதியிருக்கிறார்.

பிரிந்து போகும் உரிமையை இந்தியாவுக்குக் கோருவது பொருந்துமா பொருந்தாதா என்பது நடைமுறை சம்பந்தப்பட்டது. பிரிந்து போகும் உரிமை உண்டா இல்லையா என்பது கொள்கை சம்பந்தப்பட்டது. அத்தகைய சுயநிர்ணய உரிமை ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் உண்டு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகரிக்கிறதா என்பதே முக்கியம்.

அந்த உரிமையைக் கொடுப்பதாலேயே அனைத்துத் தேசிய இனங்களும் தனித் தனி நாடுகளாகத்தான் இருக்க வேண்டும், இந்தியா பிரிந்துவிட வேண்டும், இலங்கை உடைந்துவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. இதைத்தான் லெனின் அனைவருக்கும் புரியும் மொழியில், 'விவாகரத்து உரிமை வழங்குவதாலேயே குடும்பங்கள் அனைத்தும் உடைந்துவிடவே வேண்டும் என்று சொல்பவனல்ல நான்’ என்று சொன்னார்.

கொள்கைக்கு ஏற்ப நடைமுறைகளை வகுக்காமல், நடைமுறைக்கு ஏற்ற கொள்கைகளை உருவாக்கிக்கொண்டதால்தான் சுயநிர்ணய உரிமைக்கும் மாநில சுயாட்சிக்குமான குழப்பங்கள் அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இது மார்க்சிய அணுகுமுறை அல்ல.

மார்க்சியம் என்பது ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தை மட்டும் தத்துவார்த்த நெருக்கடியில் இருந்து மீட்பதாக இல்லாமல் ஒடுக்கப்பட்ட அனைத்துத் தேசங்களுக்கும் மாற்றுத் திட்டத்தை வழங்கியது. பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பணிகளில் இருந்தாலும் காலனி ஆதிக்க நாடுகளில் நடந்த புரட்சிகளை மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோர் உன்னிப்பாகக் கவனித்தே வந்தனர். இப்படித்தான் இந்திய விடுதலையையும் பார்த்தனர்.

இந்தியாவில் நடந்தது வர்க்கப் போராட்டமோ, பாட்டாளி வர்க்கப் புரட்சியோ அல்ல. 'இந்தியாவில்கூட புரட்சிகர இயக்கங்கள் வளர்ந்துவருகிறது’ என்று லெனின் சொன்னது, போராட்டங்கள் வேறுவேறாக இருந்தாலும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதால்தான். அதனால்தான் வளர்ந்த நாடுகளில் நடக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சியையும் காலனி நாடுகளில் நடக்கும் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் இணைக்க லெனின் விரும்பினார்.

ஆனால் இந்திய மார்க்சிஸ்ட்டுகள், அனைத்துப் போராட்டங்களையும் பிரிவினைவாதம், ஏகாதிபத்தியங்களின் சதி என்ற இரண்டு வார்த்தைகளைப் போட்டு மூடுகிறார்கள். அதனால்தான், தமிழர் தாயகத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஈழம், இனப்படுகொலை என்ற வார்த்தைகளைக் கேட்டாலே, அவர்களுக்கு அலர்ஜியாக இருக்கிறது.

Friday, May 24, 2013

தலைவர் பிரபாகரன் தொடர் - 5


‘சேலத்துக்குப் போய்விடலாம்’ என்று குட்டிமணி சொன்னார். அவர் தயாராக இருந்தார். தங்கதுரைக்கும்கூட அதுதான் அப்போது விருப்பம். சேலத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை. நண்பர்கள் அங்கே இருந்திருக்கலாம். வேறு ஏதாவது பணிகள் இருந்திருக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இருந்திருக்கலாம்.

ஆனால் பிரபாகரனுக்கு விருப்பமில்லை. சேலம் சென்று என்ன செய்வது? வெறுமனே ஊர் சுற்றுவது தவிர வேறு எந்தப் பயனுமில்லை. தப்பித்து வந்தது, பதுங்கியிருப்பதற்காக என்று அவர் கருதவில்லை. செயல், செயல் முக்கியம். ஏதாவது செய்தாக வேண்டும். மிகத் தீவிரமாக இயங்கவேண்டிய தருணம் என்று தனக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டார். ஒரு தாற்காலிக ஏற்பாடாகவே தமிழகப் பயணத்தை அவர் எண்ணினார். சில நாட்கள் சென்னைக்குச் சென்று தலைவர்களைச் சந்திப்பது அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. யாராவது உதவ வேண்டும் அதற்கு. யார்?

ஒரு செய்தி வந்திருந்தது. அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பித்த செட்டி தனபாலசிங்கம் மயிலாப்பூரில் வசித்துக்கொண்டிருக்கிறான்.

அடடே அப்படியா என்றார் பிரபாகரன். செட்டியை அவருக்குத் தெரியும். வெகு நன்றாகத் தெரியும். அவனது சகோதரன் செல்லக்கிளியையும் தெரியும். செட்டியின் பெற்றோர், உறவுக்காரர்கள் அனைவரையும் தெரியும். செட்டி ஒரு மாதிரியான ஆள். ஒரு மாதிரி என்றால், உள்ளூர் கிரிமினல் என்று பொருள். கொள்ளைத் திட்டங்களில் ஆர்வம் கொண்டவன். அவனது வயதை ஒத்த தமிழ் இளைஞர்கள் பலர் விடுதலை வேட்கையுடன் ஆயுதம் ஏந்திய சமயம், எந்த வங்கியில் கைவைக்கலாம் என்று மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தவன். போராளி இளைஞர்கள் தமது செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அரசு வங்கிகளில் கொள்ளையடிப்பதை தமக்குத்தாமே அனுமதித்துக்கொண்டதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு வரிசையாகக் கைவரிசை காட்டுவதில் மும்முரமாக இருந்தவன்.

விடுதலை, தமிழர் நலன், மேலான சகவாழ்வு, சுதந்தரக் காற்று குறித்தெல்லாம் செட்டிக்கு எக்காலத்திலும் அக்கறை கிடையாது. போராளி இளைஞர்கள் வங்கிக்கொள்ளைகளில் ஈடுபடுகிறார்களா? நல்லது. அவர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஆயுதம் வாங்கிக்கொண்டு போகட்டும். நான் கூடச் சென்று என் பங்குக்குக் கொஞ்சம் அடித்துக்கொள்கிறேன். எனக்கு ஆயுதம் வாங்க வேண்டாம். ஆனால் ஆகவேண்டிய காரியங்கள் வேறு பல உண்டு.

பிரபாகரனுக்கு இது தெரியும். செட்டி அப்படித்தான். அவனைத் திருத்த முடியாது. அது வேறு வார்ப்பு. ஆனாலும் பழகுவதற்கு நல்லவன். பலமுறை உடன் உட்கார்ந்து பேசியிருக்கிறான். போராளி இளைஞர்களின் பல காரியங்களுக்கு அவ்வப்போது உதவிகூட செய்திருக்கிறான். யாழ்ப்பாணத்தில் அவனைத் தெரியாத போராளிகள் கிடையாது. குட்டிமணி, தங்கதுரை தலைமுறையைச் சேர்ந்தவர்களிலிருந்து பிரபாகரன் தலைமுறைக்காரர்கள் வரை அனைவர் மத்தியிலும் அவன் பிரபலம். மாணவர் பேரவை, இளைஞர் பேரவை உறுப்பினர்களுக்கெல்லாம் கூட அவனைத் தெரியும்.

தெரியுமே தவிர யாரும் மதிக்கமாட்டார்கள். பார்த்தால் ஒரு வணக்கம். நீ சுகமா, நான் நலம். தீர்ந்தது விஷயம். சற்று ஒதுங்கியே இருப்பது வழக்கம்.

பிரபாகரனும் அப்படித்தான். ஆனாலும் இந்தச் சமயத்தில் மயிலாப்பூரில் செட்டி வந்து தங்கியிருப்பது ஒரு முக்கியமான செய்தி. சென்னைக்குப் போகும் எண்ணத்தில் இருந்த பிரபாகரனுக்கு அது ஒரு நல்ல செய்தியாகவும் பட்டது. குறைந்தபட்சம் தங்கிக்கொள்ள ஓரிடம். போதாது?
பிரபாகரன் வேதாரண்யத்திலிருந்து பஸ் ஏறிப் புறப்பட்டு மயிலாப்பூர் வந்து சேர்ந்தார்.

அதற்குள் அவர் செட்டியுடன் சென்று சேருவது பற்றி, பெரியஜோதி சேலம் சென்றிருந்த தங்கதுரைக்கும் குட்டிமணிக்கும் தகவல் சொல்லி விட்டார்.

அவர்கள் அதிர்ந்து போனார்கள். உடனே பிரபாகரனைத் தொடர்பு-கொண்டார்கள். தம்பி வேண்டாம். அவன் ஆபத்தானவன். தவிரவும் உன்னுடைய நோக்கத்துடன் ஒத்துப்போக முடியாதவன்.

அப்படியா? செட்டி பிரபாகரனுடன் வேறு விதமாகத்தான் பேசிக்-கொண்டிருந்தான். நீங்கள் எல்லோரும் என்னைத் தவறாகப் புரிந்து-கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அக்கறை இருக்கிறது. எனக்கும் போராட்டத்தில் ஈடுபாடு இருக்கிறது. நம் மக்களின் நல்வாழ்வின்மீது ஈடுபாடு இருக்கிறது. யாழ்ப்பாணம் திரும்பியபிறகு நீ வேறு செட்டியைப் பார்க்கப் போகிறாய், பார்.

பிரபாகரனிடம் இயல்பாக ஒரு வழக்கம் உண்டு. அவரால் எந்தக் கூட்டத்திலும் சகஜமாக இருக்கமுடியும். ஆனால் எந்தக் கூட்டத்தின் சட்டைச் சாயமும் தன்மீது ஒட்டாமல் பார்த்துக்கொள்வார். பின்னாளில் `டெலோ’வாக உருப்பெற்ற தங்கதுரையின் நண்பர் வட்டத்தில் இருந்தபோதும் பிரபாகரன் தனது தனித்துவத்தை விட்டுக்கொடுத்ததில்லை. செட்டி போன்ற கிரிமினல்களுடன் தொடர்பு இருந்தாலும் தனது லட்சியத்தை மாற்றிக்கொண்டதில்லை.

இதோ பார் செட்டி, வங்கிக்கொள்ளை உனக்கு மிகுந்த கிளுகிளுப்புத் தருகிறது என்பதை நான் அறிவேன். கொள்ளையடிப்பது என் நோக்கமல்ல. ஆனால் இயக்கம் நடக்கப் பணம் வேண்டும். வங்கியில் இருப்பது மக்கள் பணமல்லவா என்று கேட்காதே. அது அரசாங்க வங்கி. கொள்ளையுடன் நீ தேங்கிப் போவதால் நீ கிரிமினல் என்று கருதப்படுகிறாய். பணமே இல்லாது போனாலும் என் செயல்பாடு நிற்கப்போவதில்லை. வித்தியாசம் புரிகிறதா?

நிறையப் பேசினார்கள். யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிய பிறகு என்ன-வெல்லாம் செய்யவேண்டும் என்று பேசிப்பேசித் திட்டமிட்டார்கள். திட்டங்கள் செயல்படுத்தப்படத் தேவையான பணத்துக்குத் தானே பொறுப்பு என்று செட்டி சொன்னான். வேறென்ன? வங்கிக்கொள்ளைதான்.

1974-ம் ஆண்டு மத்தியில் பிரபாகரன் மீண்டும் இலங்கைக்குத் திரும்பிச் சென்றார். பரபரவென்று காரியங்கள் நடைபெறத் தொடங்கின. சாத்வீகிகள் அங்கே தபால் தலைப் போராட்டம் என்று ஒன்றை நடத்திக்கொண்டிருந்த போது, பிரபாகரன் தனது நண்பர்களை அழைத்தார்.

காத்திருந்தது போதும் நண்பர்களே. நாம் தொடங்கலாம் என்று சொன்னார். ஒரு பக்கம் வங்கிக்கொள்ளைகள் ஆங்காங்கே நடைபெற்றன. பொறுப்பு செட்டியுடையது. பிரச்னையே அங்குதான். இயக்கப் பணிகளுக்காக என்று சொல்லிவிட்டு நடத்திய கொள்ளைகளில் பாதிப் பணம் வந்து சேரவே இல்லை. அடடே, செட்டி கார் வாங்கிவிட்டானாமே? அப்படியா? அவன் பளபளவென்று சில்க் சட்டை போட்டுக்கொண்டு போகிறான், கமகமவென்று செண்ட் அடித்துக்கொண்டு வருகிறான் என்று ஆளுக்கொரு தகவல் சொன்னார்கள்.

பிரபாகரனுக்கு வெறுப்பாக இருந்தது. ம்ஹும். சிலரைத் திருத்தமுடியாது. அதற்காக வருத்தப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதில் அர்த்தமில்லை. சரி, நாம் குண்டு வைக்கலாம் என்று எழுந்தார்.

ஒரே நாள். ஒரே சமயம். யாழ்ப்பாணத்தின் முக்கியமான ஒரு கடைவீதி, ரயில்வே ஸ்டேஷன், ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்று தேர்ந்தெடுக்-கப்பட்ட சில இடங்களில் பிரபாகரன் வைத்த குண்டுகள் வெடித்தன. சிறீமாவோ பண்டாரநாயகா திரும்பி உட்கார்ந்து வடக்கிருக்க ஆரம்பித்தார்.

உண்மையில் பிரபாகரனுக்கு அப்போது பொது அமைதிச் சீர்குலைவு நோக்கமாக இருக்கவில்லை. அவரது இலக்கு வேறு. ஒரு பெரும் படுகொலையைத்தான் தொடக்கப்புள்ளியாக மனத்தில் குறித்து வைத்திருந்தார். முதல் அத்தியாயத்தில் பார்த்த ஆல்ஃப்ரட் துரையப்பா. நிச்சயமாக ஒழிக்கப்படவேண்டிய கிருமி என்று தீர்மானம் செய்திருந்தார்.

அந்த வருடம் ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று காவல் துறையும் நகர மேயரான துரையப்பாவும் இணைந்து நடத்திய கலபரத்தில் ஒன்பது தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர். தமிழர்கள் அத்தனை பேரின் வெறுப்பும் அவர் பக்கம் திரும்பியிருந்தது.

துரையப்பாவின் கணக்கைத் தீர்த்ததுதான் பிரபாகரனின் வெளியே தெரிந்த முதல் செயல். அதன்பிறகு அவரது `புதிய தமிழ்ப் புலிகள்’ புதிய வேகம் கொண்டு இயங்க ஆரம்பித்துவிட்டது. 1976 மே 5-ம் தேதி பிரபாகரன் இயக்கத்துக்கு வேறு பெயர் வைத்தார். தமிழீழ விடுதலைப் புலிகள். புதிய விதிமுறைகள் வகுத்தார். புதிய ஒழுக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பழைய அமைப்பில் இருந்த பிசிறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டன. சரி செய்ய முடியாதவை களையப்பட்டன, செட்டியைப் போல.

(தொடரும்)

தலைவர் பிரபாகரன் தொடர் - 4

நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – 5



வந்த ஆமிக்காரர்கள் அங்கேயிருந்த ஒவ்வொரு ஓலை வீடுகளையும் எரித்துக் கொண்டு வந்தார்கள். ஓலை வீடுகள் எரிந்த வெளிச்சத்தில் எல்லா இடமும் வடிவாகத் தெரிந்தது.

அந்த தீச் சுவாலைகளைப் பார்த்த நான், வீரச்சாவடைந்த எங்கட நான்கு வீரர்களுக்கும் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு இருப்பது போல உணர்ந்தேன். அப்போது மனதில் உறுதியெடுத்துக் கொண்டேன். எப்படியாவது போய்ச் சேர்ந்து நடந்தவற்றை தலைமைக்குச் சொல்ல வேண்டுமென்று. அப்படியே படுத்துக்கிடந்தபடி பார்த்துக் கொண்டேயே இருந்தேன். அவன் சகல வீடுகளையும் எரித்துவிட்டு சற்று நேரத்தில் அவ்விடத்தை விட்டுப்போய்விட்டான். என்னை நுளம்புகள் தின்று கொண்டிருந்தன.

ஒருவாறாக எழும்பி திரும்பவும் எங்கட ஆட்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு போனேன். மனத்தினுள் ஆமி எங்கேயயாவது மறைந்து நின்று அவதானிக்கிறானா என்று சுற்றிலும் பார்த்தவாறே அவர்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.

நான் நிமலன் அண்ணாவிடம், இதற்கு முதல் நாட்தான் ‘அண்ணா! எப்போதுமே அடிகிடைச்சா எல்லோரும் என்னை விட்டுவிட்டு ஓடிவிடுவாங்க. நீங்களாவது என்னைக் கூட்டிக்கொண்டு போங்க’ எனச் சொன்னேன். அதேபோல இன்று தனிமையாகிப் போனேன். முதல்நாள் பகல் நாங்கள் தங்கியிருந்த வீட்டிலே மருந்துப் பொருட்கள் கொஞ்சம் கிடந்தது. அதோடு காயத்திற்குக் கட்டும் கோசும் (துணிகள்) கிடந்தது. ‘அண்ணா சிலவேளை இது நமக்குத் தேவைப்படும் என்று சொல்லிக் கொண்டு அதையும் எடுத்து எனது பைக்குள் வைத்தேன். அதுவும் இன்றைய நிலைக்கு சரியாகிவிட்டது.

என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டு, இனித் தொடர்ந்து இங்கிருந்து ஒன்றுமே செய்யமுடியாது. எனவே எங்களுடைய மற்ற ஆட்களையும் தேடுவதோடு, தரப்பட்ட வேலையையும் செய்ய வேண்டும். அதோட இங்கு நடந்த சம்பவங்களை மெயினுக்கும் தெரியப்படுத்த வேண்டும். எனவே அதற்குத் தேவையான ஒழுங்கைச் செய்து கொண்டு நகர்வதற்காக, சுற்றும் அவதானித்தபடி மீண்டும் நான் காயப்பட்ட வீட்டுக்குப் போய் இரண்டு தண்ணிப் போத்தலும் 5 நாளுக்கு ஏற்றமாதிரிச் சாப்பாடும் எடுத்துக் கொண்டு றோட்டடிக்கு வந்தேன். ஆமி ரோச்சடிச்சுப் பார்த்துக் கொண்டு நின்றான். நான் அதை விலத்திப் போவதற்காக பற்றை ஒன்றிற்குள் இருந்தவாறு அவதானித்துக் கொண்டிருந்தேன்.

திடீரென்று 200 மீற்றர் தூரத்தில் ஆமியின் சத்தமும், பெரும் வெடியோசை ஒன்றும் கேட்டது. அதைத்தொடர்ந்து பெரிதாகக் குழறிய சத்தங்களும் கேட்டது. பிறகு ஆமியின் ரவுண்ஸ் அடி எல்லாப்பக்கமும் இலக்கின்றி அடிக்கப்பட்டது. கொஞ்சநேரத்தில் மயான அமைதியொன்று நிலவிய பிரதேசமாக காட்சியளித்தது அப்பகுதி. அந்த வெடியோசை எங்கட ஆட்களில் யாரோ சார்ஜர் இழுத்ததால் ஏற்பட்டது தான் என்பது எனக்குத் தெளிவாக விளங்கியது. ஆமிக்கு ஏதோ இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஒரே ரவுண்ஸ்;மழையைப் பொழிந்ததோடு மட்டுமல்லாது, சற்று நேரத்தில் வாகனங்களும் கூடுதலான ஆட்களும் (ஆமி) கொண்டுவந்து குவிக்கப்பட்டதோடு, எல்லா இடங்களையும் கிளியறிங் செய்ததோடு, அப்பிரதேசம் முழுவதும் யாரும் நகரமுடியாதவாறு பொசிசன் போட்டபடியிருந்தான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படி வெளியேறுவது என்று எனக்குத் தெரியவில்லை.

நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தன. எனக்கு முன்னால் நிறைய நாய்கள் கூட்டமாக படுத்துக் கிடந்தன. நாய்கள்; என்னைக் கண்டு குரைத்தால் ஆமி அலேட்டாயிடுவான். என்ன செய்வது என்று யோசித்தேன். ஆமி எங்கே இருக்கிறான் என்று ஒன்றுமே தெரியாது. எனக்கு முன்னுக்குள்ள தெருவுக்கு மற்றப்பக்கம் ஆமி இருந்தாலும் இருப்பான் எதற்கும் ஆயத்தமாகப் போவோம் என்று சேப்ரியைத் தட்டி விட்டு, குண்டடிக்கிறதென்றால் கையேலாது. என்ன செய்வது முட்டுப்பட்டா யார் முந்திறமோ அவன் தான் பிழைப்பான். எனவே கட்டாயம் குண்டடிக்கத்தான் வேண்டும். எனவே கிளிப்பை வாயால் கழற்றிவிட்டு வீசுவமென்று எல்லாத் தயார் நிலையிலும் மெதுவாக நாய்க்குச் சத்தம் கேட்காதவாறு நடந்து, ஒருமாதிரி மறுபக்கம் போய்ச் சேர்ந்துவிட்டேன்.

பொழுது விடியப் போகிறது. சுற்றும் முற்றும் பார்த்துப் பார்த்து அருவியடிக்கு வந்துவிட்டேன். அருவியில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது. ஓர் இடத்தில் இறங்கிப் பார்த்தேன். அப்படியே உள்ளுக்குள்ளே போக டக்கென்று மரத்தை எட்டிப்பிடித்து ஏறிவிட்டேன். பிறகு எல்லாப் பக்கமும் போய்ப் பார்த்தேன். விடியவும் போகிறது அதற்குள்ளேயே இருட்டோடு இருட்டாக கடந்திட வேண்டும். நான் நின்ற இடத்துக்கு பக்கத்தில பெரிய மரமொன்று அப்பிடியே அருவிக்கு நடுவில் விழுந்து கிடந்தது. உடனே அதில் ஒருமாதிரி கஸ்ரப்பட்டு ஏறி, அங்கே பிடித்து, இங்கே பிடித்து மெதுமெதுவாக கரைக்குக் கிட்ட வந்துவிட்டேன். கரைக்கு ஒரு பத்து மீற்றர் இருந்தது. உடனே அருவிக்குள் இறங்கினேன். நெஞ்சு மட்டத்திற்கு தண்ணீர். காயப்பட்ட கையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு மெதுவாக காலால் துழாவியபடி நடந்தேன். பள்ளம் இருக்கிற இடங்கூடத் தெரியாது என்றுதான் அப்படிச் செய்தேன். ஒரு மாதிரி கரைக்கும் வந்துவிட்டேன்;.

ஓரளவு விடிந்து கொண்டு வருகிறது. சரியான களைப்பாகவும், வேதனையாகவும் இருந்தது. இலந்தை முள்ளுப் பற்றையின் முள்ளுங் குத்துகிறது. நுளம்பும் கடிக்கிறது. அப்படியே ஒரு கூடலுக்குள் போய் அதிலிருந்த புத்து ஒன்றில் சாய்ந்து நித்திரை கொண்டேன். ஆனால் நித்திரையே வரவில்லை. நனைந்தது வேறு குளிர்கிறது, கை வேறு வலியில் குத்துகிறது, அத்துடன் சேர்ந்து நுளம்புங் கடிக்கிறது. இயலாமல் போய் தலையைச் சுற்றியது, அப்படியே மயங்கிவிட்டேன் போலவிருக்கிறது. கொஞ்ச நேரத்தால் திடுக்கிட்டு முழித்துப் பார்த்தபோது நன்றாக விடிந்து மணி ஏழாகியிருந்தது. அங்கிருந்து எழும்பிப் பார்த்த போது முன் பக்கம் பாதை மாதிரிப் போனது. அந்தப் பாதை வழியே போய்ப் பார்த்தேன். அங்காலப் பக்கக்கரை தெரிந்தது. ஆமியுடைய பழைய பொசிசன்களும் இருந்தது. பிறகு கொஞ்சம் தள்ளிப் போய்ப் பார்த்தேன். சனம் விட்டுட்டுப் போன பொருட்களும், உடுப்புக்களும் இருந்தன. அவ்விடத்தில் ஒருவித துர்நாற்றம் வீசியது. கிட்டப் போய்ப் பார்த்தேன். மனிச எலும்புக்கூடுகள் அவ்விடத்தில் நிறைய இருந்தன. இறந்தவர்களின் உடல்கள் புதைக்கவோ எரிக்கவோ படாமல் அப்படியே கிடந்து புழுக்களால் தின்னப்பட்டும், அழுகியும் போயிருந்தது. அது அவனால் கொல்லப்பட்ட எங்கட மக்களோடதாகத்தான் இருக்கும்.

மற்றப்பக்கம் போய்ப் பார்த்தேன்; அங்கிருந்த வீடொன்றில் ஒரு பை (பேக்கும்) கிடந்தது. அது யு.என்.சி.எச்.ஆர் கொடுத்த நீலப் புத்தகப்பை. அதையும் எடுத்துக் கொண்டு, அங்கிருந்த சாரங்கள் தண்ணியில் ஊறி சுருட்டி மடித்து வைத்தபடி காய்ந்து கிடந்தது. அதை எடுத்து பையுக்குள் வைத்தேன். பிறகுஅங்கிருந்த பொருட்களைக் கிண்டிப் பார்த்தேன். கத்தரிக்கோலும் ஒரு சேட்டும் கிடந்தது. அதையும் எடுத்தேன். கத்தரிக்கோல் இருந்தால் துணியை வெட்டச் சத்தம் கேட்காது. சாரத்தைக் கிழித்தால் சத்தம் கேட்கும் என்று நினைத்து அதையும் எடுத்தேன். திடீரென்று ஆமி வாற சத்தம் கேட்டது. எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு, நான் மறைந்திருந்த இடத்துக்குப் போனேன். நான் நின்ற பக்கம்தான் சத்தம் கேட்டது.

தொடரும்.

நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது - 4

முகவரி அல்ல முகம் - பாகம் 5




விழியினும் மேலான
தாயகம் மீட்க
விடுதலைப்புலிகளாய் எழுந்தோம்.
மீனுக்கு நீராய்
வேருக்கு மண்ணாய்
இருந்தீர்கள்; நாங்கள் நிமிர்ந்தோம்
இனியும் எமது போராட்டம் தொடரும்
விடுதலை எமது எல்லை!
துணைவந்த நீங்கள்
தோளை உயர்த்தினால்
விடுதலை வெகு தூரமில்லை.

மக்கள் திரள் என்ற
மாபெரும் சக்திதான்
எமது தாயகம் மீட்கும்.
மக்கள் யுத்தம் என்ற
மாபெரும் யுக்திதான்
நமது பணியை எளிதாக்கும்.
தோழமைப் புறாக்கள்
நம் துணையாகும்.
கொடிய வல்லூறை எதிர்க்கின்ற போது
தொடர்கின்ற போரில்
மக்கள் துணை கொண்டால்
விடுதலை இனியும் தப்பாது!

மக்கள் கவிஞர் இன்குலாப்

ஈழப்போர் முடிந்து விட்டதாக சிங்கள இனவெறியர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஒட்டுமொத்தமாய் தமிழினத்தை கொன்றொழிக்க திட்டமிட்டு கொலை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் கொத்து குண்டுகளால் செத்திருக்கலாம் என கதறி கொண்டிருக்கிறார்கள். தமிழ் பிஞ்சுகளுக்கு பால் கிடைக்கவில்லை ஆனால் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துவிட்டு அதன் தடயங்களை அழிக்கும் கொடுஞ்செயலுக்கு சிங்கள இனவெறி அரசு துணிந்து இருக்கிறது. துணைபோன இந்திய அரசு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்திய இளைஞர்கள் இனவெறியர்களால் தாக்கப்பட்டது குறித்து தாவி குதிக்கிறது.

தமிழினத்தை காப்பாற்று என்று தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள் எத்தனை? ஆர்ப்பாட்டங்கள் எத்தனை? மறியல்கள் எத்தனை? அத்தனை இன உணர்வுகளையும் மண்ணுக்கு சமமாய் பாவித்தது இந்திய அரசு, ஆனால் இந்திய இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றவுடன் துடிதுடித்துப் போகிறதே எப்படி? இனக்காயத்தின் வலி இப்போது தான் புரிகிறதா? இந்நிலையில் சிங்கள இனவெறி மக்களவை உறுப்பினர் ஈழம் என்ற வார்த்தையே இலங்கை வரலாற்றில் துடைத்தெறியப்பட வேண்டுமென்று அறை கூவல் விடுக்கிறார். நம்மவர் ஆண்ட தமிழ் மண்ணில் நின்று கொண்டு நமக்கான பெயரையே அழித்தொழிக்க முனையும் அக்கிரமத்தை என்னவென்று சொல்வது? இனி ஒரே நாடு, ஒரே இனம் என்பதை அங்கீகரிக்க எத்தனை தவறுகள் செய்ய வேண்டுமோ, அத்தனை தவறுகளையும் அடுக்கடுக்காய் செய்கிறார்கள். இந்தியா பல்வேறு தேசிய இனங்களை தம்முடைய ஆயுத பலத்தால் அடக்கி ஒடுக்கும் அதே கொள்கையை சிங்கள இனவெறி கூட்டமும் இலங்கையிலே செய்திட முயல்கிறது. சொந்த மண்ணில் அகதிகளாய் வாழும் அவலம் தமிழினத்திற்கு நிகழ்ந்துள்ளது. இடையூறுகளும், அடக்குமுறை சட்டங்களும், ஈயத்தோட்டாக்களும் வரலாற்று நாயகர்களை அசைத்து பார்த்ததில்லை என்பதற்கு அடுக்கடுக்காய் சான்றுகளை காலம் நமக்கு விட்டு சென்றுள்ளது. அடக்கமுறையாளர்கள் வெல்வதில்லை என்பது தான் வரலாறு. பிரெஞ்ச் காலனியாதிக்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நிகழ்த்திய நாடுகளானாலும் சரி, பிரிட்டிஷ் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக ஆர்த்தெழுந்த வீரர்களானாலும் சரி அவர்களின் போர் குணங்களையும், அவர்களின் தியாக முகங்களையும் காற்றும், கதிரும் பாதுகாத்து நம்முடைய காலங்களுக்கு அவற்றை காணிக்கையாக்குகிறது.

அவர்கள் விட்டு சென்ற காலடி சுவடுகளில் தான் கனத்த இதயமும், கனன்று கொண்டிருக்கும் உணர்வும் அடக்கமுடியாத ஆற்றலும் கொண்டு மீண்டும் மீண்டுமாய் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வியட்நாம் மக்களின் விடுதலை போராளி ஹோசிமினை அடக்க முடியாத அமெரிக்கா ‘எங்களிடம் அணுகுண்டுகள் இருக்கிறது’ என்று மிரட்டி பார்த்தது. அந்த மகத்தான போராளி, நீ சில அணுகுண்டுகளை வைத்திருக்கலாம் வியட்நாமிய மக்கள் ஒவ்வொருவரும் பெரும் ஆற்றல் வாய்ந்த அணுகுண்டுகளாக களத்திலே நிற்கிறார்கள் என கடுமையாக எச்சரித்தார். அதோடு இல்லாமல் மாபெரும் ராணுவ பலம் பொருந்தியதாக கருதப்பட்ட அமெரிக்காவை புறமுதுகிட்டு ஓடச் செய்தார். இந்த வரலாறு இனி ஈழத்தில் தொடரலாம். விழுந்த வித்துக்களில் இருந்து முளைத்தெழுந்த வீரர்கள் வீரியமிக்க அணுகுண்டுகளை வீழ்த்துவார்கள். சீறிப்பாயும் கொத்து குண்டுகள் அந்த மாவீரனின் மார்பிலே சமாதியாகும். தமிழ் இன உணர்வுக்கு எதிராக நிற்பவர்கள் அந்த போராட்டக்களத்திலே கல்லறையாக அடையாளப்படுத்தப்படுவார்கள். வரலாறு ஒரே திசையில் நகர்ந்ததாக இதுவரை நாம் வாசித்தறியவில்லை. விதைகள் மண்ணில் மடிவது முளைத்தெழத்தான். இப்போது மீண்டும் முளைக்கவே ஒரு விதைத்தல் நடந்திருக்கிறது.

தெற்கு நோக்கி ஓட்டம் பிடித்த சிங்களர்கள் அங்கே இருந்து கொண்டு இத்தனை காலமும் பாலி மொழியிலும், தமிழினம் எழுதி வந்த தமது எழுத்துக்களுக்கு மாற்றாக சிங்கள மொழிக்கு வரிவடிவம் கொடுக்க தொடங்கினார்கள். பௌத்தர்களாக, சிங்களர்கள் இலங்கையில் தென் பகுதியையும், மலைப்பகுதியையும் தமதாக்கிக் கொண்டு தமது வலிமையை நிலைப்படுத்திக் கொண்டிருக்க, சைவ சமயத்தை சார்ந்த தமிழர்கள் கிழக்கு, வடக்கு, வடமேற்கு பகுதிகளை தமிழரின் நிலங்களாக உருவாக்கி தம்மை தக்க வைத்துக்கொண்டார்கள். ‘மகா வம்சம்’ நூல் தந்த பொய்யுரைகளால் மீண்டும் மீண்டுமாய் சிங்கள அரசுகள் வலிமை பெற்ற போதும் தமிழர் நிலங்களை அவர்களால் தொட்டு பார்க்க முடியவில்லை. கி.பி 1815 -ல் பாண்டிய அரசு இலங்கை தீவு மீது படையெடுத்தது. சிங்களர்கள் பயந்து நடுங்கி மேலும் தெற்கு நோக்கி பின்வாங்கி நகர தொடங்கினார்கள். அவர்கள் கண்டியிலும், கோட்டையிலும் சிங்கள தலைநகரங்களை அமைத்துக் கொண்டார்கள். பெருஞ்சிறப்புடன் வாழ்ந்த தமிழர்களின் தலைநகர் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் புலநறுவையில் இருந்தது. பாண்டிய அரசு படையெடுப்பின் மூலம் இலங்கையின் வடபகுதியான யாழ்பாணத்திற்கு தமிழர் ஆட்சியின் தலைநகர் மாறியது.

வரலாறு தெரியாத பலர் ஏதோ தமிழர்கள் வந்தேறிகளாக இலங்கைக்கு சென்றது போலவும் அது தவறு எனவும் தொடர்ந்து கூறி வருகின்றார்கள். வரலாறு அறிந்த இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு தமிழர் பிரச்சனையை அக்காலத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். பின்னர் வந்த லால் பகதூர் சாஸ்திரி தமிழர்களை எதிலிகளாய் தாயகத்திற்கு அழைக்கத் துணை போனார்.

காங்கிரஸ் ஆட்சியில் இந்திராகாந்தி அம்மையாரை தவிர வேறு எவரும் இலங்கை தமிழர் நலன் குறித்து அக்கறை கொள்ளவுமில்லை. அரவணைக்கவுமில்லை. ஆனால் வரலாறு என்ன சொல்கிறது. இலங்கை தீவில் அப்போது மூன்று அரசுகள் ஆட்சி செய்து கொண்டிருந்தன. தென்மேற்கு கரையோரத்தையும், தெற்கு கரையோரத்தையும் ஆட்சி செய்தவர்களை சிங்கள கோட்டை அரசு என்றும், மத்திய மலைப்பகுதியை ஆட்சி செய்த சிங்கள அரசுக்கு கந்த உடரட்டை சிங்கள அரசு என்றும் பெயர். தமிழர்களோ கிழக்கு, வடக்கு, வடமேற்கு பகுதிகளை தமிழீழ அரசாய் ஆட்சி புரிந்து வந்தனர். சிங்கள இனவெறி மக்களவை உறுப்பினர் கூறுவதை போல, புலிகள் தான் ஏதோ தமிழீழம் என்ற வார்த்தையை கண்டு பிடித்து பரப்பினார்கள் என்ற கூற்று முற்றிலும் பொய்யானது.

இப்படி மூன்று அரசுகளாக நடந்து கொண்டிருந்த ஆட்சி முறை மேற்கத்தியர்கள் இலங்கைத் தீவின் மண்ணை மிதிக்கும் வரை மாறாமலிருந்தது. கி.பி 1505 அளவில் அவர்கள் இலங்கை மண்ணை மிதித்தவுடன் சூழ்நிலை மாறியது. முதன் முறையாக விஜயனின் வருகையால் வீழ்ந்த தமிழர்கள் இரண்டாவது முறையாக எல்லாளன் தோல்வியால் துவண்ட தமிழர்கள் மேற்கத்தியரின் வருகையால் முற்றிலுமாய் வீழ்ந்து விடுவார்கள் என்று அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் புலிகளின் போராட்டம் புவியெட்டும் சிறக்க வரலாறு முழுவதும் தமிழ் வாகை சூட இந்த கேடு அப்போது நிகழ்ந்தது.

கண்மணி

சண்முகதாசன் பிரிவினைவாதியா? - மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 8




'மாறுதல் ஒன்றே மாறாதது’ என்ற மார்க்சிய தத்துவத்தைக்கொண்ட கட்சி, 40 ஆண்டுகளாக ஈழத் தமிழர் பிரச்னையில் 'மாறவே மாறாத’ கொள்கையை வைத்துள்ளது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் பச்சைப் படுகொலை (1983-85) செய்யப்பட்ட காலகட்டத்திலும் 'தமிழர்களும் சிங்களர்களும் சேர்ந்து வாழ வேண்டும்’ என்று ஞான உபதேசம் செய்தார் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட். 'இருவரும் இணைந்து வாழ முடியாவிட்டால், இருவரும் வாழவே முடியாது. இருவரும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள்’ என்றார். 28 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது, லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட புதைகுழிகள் மட்டுமே மிச்சம் இருக்கின்றன. இன்று, ஈ.எம்.எஸ். இருந்திருந்தால்... என்ன சொல்வாரோ?

'தமிழ் ஈழம் கோருவது இலங்கைத் தமிழருக்கு எதிரான விளைவை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா?’ என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, 'இலங்கை என்பது இரு மொழி பேசும் மக்களைக்கொண்ட நாடு. அந்த மக்கள் ஒன்றாக இல்லாவிட்டால், இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற முடியாது. இரண்டு தரப்பினரும் சகிப்புத்தன்மையுடன் ஒன்றுபட்டு நின்றால்தான், அது சாத்தியமாகும். நமது நாட்டில்கூட இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நமக்குத் தெரியும். இப்போது சீக்கியர்களுக்கும் தகராறு. ஆனால் நாம் ஒருமைப்பாட்டைக் காத்துவருகிறோம். இன்னும் பல நாடுகளிலும் பல மொழி பேசும் மக்கள் இணைந்துதான் வாழ்கிறார்கள். எனவே, இலங்கையிலும் இணைந்து வாழ்வது சாத்தியம்தான்’ என்று ஈ.எம்.எஸ். பதில் சொன்னார்.

இலங்கைத் தமிழர் மீதான அக்கறையின் அடிப்படையில் கேள்வி கேட்கப்படுகிறது. ஆனால் நம்பூதிரிபாட், இலங்கையின் ஒருமைப்பாடு பற்றி பதில் சொல்கிறார். தமிழர் படும் தொல்லை பற்றி பேச மறுத்து இலங்கை நாட்டு எல்லை பற்றிய கவலையே அவருக்கு அன்று இருந்துள்ளது. அதுவே இன்றும் தொடர்கிறது.

'யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது என்பது இலங்கையிலுள்ள மக்களைத்தான் பிரித்துவைக்கும். ராணுவத்தினாலேயே வெற்றிபெறுவதும் இப்போது சாத்தியமல்ல. மேலும் மற்றொரு நாட்டை நம்பி ஆயுதப் போராட்டம் நடத்துவது எப்படி முடியும்? வங்காள தேசத்தையும் வியட்நாமையும் இத்துடன் இணைத்துப் பேசுவது பொறுப்பானதல்ல’ என்றும் ஈ.எம்.எஸ் அறிவுரை கூறினார்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதுதான் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை, இலங்கையில் இருந்து பிரித்துவைக்கிறதாம். யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

யாழ்ப்பாணக் கடற்கரையில் நிம்மதியாக மீன்பிடித்துவிட்டு காற்று வாங்கிப் படுத்திருந்த நிலையிலோ... நல்லூர் கந்தசாமி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு திருவாசகம் பாடிக்கொண்டிருந்த நிலையிலோ ஆயுதம் தூக்கவில்லை தமிழர்கள். சிங்கள இனவாதத்துக்கு எதிராக 30 ஆண்டுகள் அகிம்சை வழியில் எப்படியெல்லாமோ போராடிப் பார்த்துவிட்டு சிறு துரும்பு பயனும் ஏற்படாத நிலையில், ஆயுதக் குழுக்கள் உருவாகின. அது மக்களின் நம்பிக்கையைப் பெற்றது. இந்த வரலாறு எதையும் உள்வாங்கிக்கொள்ளாமல், பாதியில் இருந்து ஈழப் பிரச்னையை பார்ப்பது அந்தக் கட்சிக்கு வழக்கமாகிவிட்டது. அதனால்தான் வங்கப் பிரச்னையையும் வியட்நாமையும் ஈழப் பிரச்னையும் ஒப்பிட மனமில்லாமல் ஒதுக்க முடிகிறது.

'இந்தப் பிரச்னை உணர்ச்சிப் பிரச்னையாகியுள்ளதே?’ என்று ஈ.எம்.எஸ்-ஸிடம் கேட்டபோது, 'உணர்ச்சிகள், பிரச்னைகளுக்குத் தீர்வு தராது. இப்படி உணர்ச்சி கிளப்பிவிடப்பட்டதை பாகிஸ்தான் பிரச்னையில் கண்டோம்’ என்று வருத்தப்பட்டார்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது தனக்கு உடன்பாடு இல்லாததுபோல இந்தப் பதில் இருக்கிறது. பாகிஸ்தான் பிரிவினையை காங்கிரஸ் கட்சிக்கு எடுத்துக் கொடுத்துப் பரிந்துரைத்ததே அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதான். (அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகவில்லை.) அன்றைய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களில் குறிப்பாக இதை முன்வைத்தவர் தோழர் பி.ராமமூர்த்தி.

1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் பம்பாய் க்வாலியாக்குள மைதானத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் (அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டங்களில் கம்யூனிஸ்ட்களும் கலந்துகொள்வார்கள்) பி.ராமமூர்த்தி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் ஒரு திருத்தம் கொண்டுவந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கும் முஸ்லீம் லீக் கட்சிக்கும் உள்ள பிரிவைப் பயன்படுத்தி குளிர்காய்வதற்கு பிரிட்டிஷ் ஆட்சி விரும்புகிறது என்று குற்றம்சாட்டியவர்கள், இந்தப் பிரிவை சரிப்படுத்த ஒரே ஒரு வழி இருக்கிறது என்று பரிந்துரைத்ததாக பி.ராமமூர்த்தி தனது புத்தகத்தில் (விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் - பக் 186) எழுதுகிறார்.

சுதந்திர இந்தியா, அனைத்து இன, மொழி மக்களையும் திருப்திசெய்யும் சமஷ்டி ஆட்சி முறையாக (இப்போது இருக்கும் மத்திய அரசு - மாநில அரசுகள் என்பதைப் போலவே) இருக்கும் என்று அன்று காங்கிரஸ் கட்சி சொன்னதை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட்கள், இன்னும் ஒரு படி மேலே போங்கள் என்று அழைத்தனர்.

'இன்னும் சிறிது மேலே போய் வடமேற்கிலும், கிழக்கிலும் மெஜாரிட்டி முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் சேர்த்துக்கொண்டால், காங்கிரஸ் - லீக் ஒற்றுமைக்கு அடித்தளம் ஏற்பட்டுவிடும் என்று நாங்கள் திருத்தம் கொடுத்தோம்’ என்கிறார் பி.ஆர். அதாவது, முஸ்லிம் லீக் கேட்கும் பாகிஸ்தானை பிரித்துக் கொடுக்க ஒப்புக்கொள்ளுங்கள் என்று 1942-ம் ஆண்டிலேயே ஆலோசனை சொல்லியுள்ளனர். காங்கிரஸ் கமிட்டி அன்று இதை ஏற்கவில்லை. நாட்டைப் பிரிக்கக் கோருவதால், 'தேச விரோதிகள்’ என்று கம்யூனிஸ்ட்கள் கொச்சைப் படுத்தப்பட்டனர். பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த ராஜாஜி, அன்று கம்யூனிஸ்ட் மேடைகளில் முக்கியத்துவம் கொடுத்துப் பேச அழைக்கப்பட்டதாக ராமமூர்த்தி சொல்கிறார். மத அடிப்படையிலான பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்த இவர்கள், தென் பகுதியில் அன்று இன அடிப்படையிலான 'திராவிட நாடு’ கோரிக்கையை நிராகரித்தனர். 'திராவிட நாடு’ கேட்டவர்களிடம் கொள்கை ரீதியான பலவீனங்கள் இருந்தன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், 'தமிழ்நாட்டு முதலாளிகளின் நலன்களைப் பிரதிபலிக்கும் கோரிக்கைதான் திராவிட நாடு’ என்று பி.ராமமூர்த்தி கொச்சைப்படுத்தியது கவனிக்கத்தக்கது. 'திராவிட நாடு’ - தமிழ் முதலாளிகளின் நலன்களைப் பிரதிபலிக்குமானால், பாகிஸ்தான் பிரிவினை, முஸ்லிம் முதலாளிகளின் நலன்களைப் பிரதிபலிக்காதா?

அனைத்துப் பிரச்னைகளிலும் தமிழ்நாடு, தமிழர்களுக்கு ஒரு கொள்கை, மற்றவர்களுக்கு மறுகொள்கை என்று கம்யூனிஸ்ட் கட்சி வைத்திருக்கிறதா என்ன?

இதே பி.ராமமூர்த்திதான், 1983-ல் தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது, தமிழர்கள், சிங்களர்கள், புத்த மதத் தலைவர்கள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கவலைப்பட்டார். 'சிங்களர்களுக்கு எதிராக இனப் பகையுணர்வையும் ஆத்திரத்தையும் தூண்டுவதன் மூலம் அப்படிப்பட்ட சக்திகளும் கட்சிகளும் தங்களை அறியாமலேயே இலங்கையின் இனப்படுகொலையை ஊக்குவிக்கும் சக்திகள் மற்றும் கொலை வெறியர்களின் செயல்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும். அவை அந்நாட்டில் வாழும் தமிழர் மற்றும் இந்தியர் நலனுக்குத் துணை செய்யாது. மாறாக அவர்களுடைய உயிருக்கும் உடமைக்கும் மேலும் ஆபத்தையே விளைவிக்கும்’ என்று உபதேசம் செய்தார்.

'சிங்களர்கள் அகிம்சாமூர்த்திகள், கடல் கடந்து வாழும் தமிழர்கள் ஆத்திரப்பட்டுப் பேசுவதால் மட்டுமே அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொலை செய்வார்கள், மற்றபடி புத்தனின் புத்திரர்கள்’ என்று நினைத்தாரா பி.ஆர்?

1991-ம் ஆண்டு மே மாதம் நடந்த ராஜீவ் படுகொலை தொடங்கி 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை சிங்களரை, பேரினவாத ஆட்சியாளர்களை, புத்த பிட்சுக்களை ஆத்திரமூட்டும் பெரிய அளவிலான சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தது இல்லை. இதைப் பார்த்து அமைதியாகிவிட்டதா ராணுவம்? எத்தனை பெண்கள் விதவைகள் ஆனார்கள்? படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் எண்ணிக்கை எவ்வளவு? 67 குழந்தைகளை, ஒரே வெடியில் புதைகுழிக்கு அனுப்பிய வெறியைப் பார்க்கவில்லையா நாம்?

இப்படிச் சொல்வதன் மூலம் என்ன அறிவுரை சொல்ல விரும்பினர்? 'அந்தப் பிரச்னையைப் பற்றி பேசாதே, அதற்காகப் போராடாதே, அதைப்பற்றி சிந்திக்காதே’ என்றா?

பி.ஆர்.சுற்றி வளைத்துச் சொல்வதை ஈ.எம்.எஸ். வெளிப்படையாகவே சொன்னார்... 'இது சிக்கலான பிரச்னையாக இருப்பதால் பகிரங்கமாகப் பேசுவது முறையல்ல. அரசாங்கத்தின் அணுகுமுறை பற்றி நமக்கு ஏராளமான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அரசாங்கங்கள்தானே நடவடிக்கை எடுக்க முடியும்? எனவே, ராஜீவ்காந்தியிடம் தனியாக எங்கள் கருத்தைக் கூறினோம். நாளை, கருணாநிதி பிரதமரானால் அவரிடமும் தனியாகத்தான் சொல்வேன்’ (9.5.1985 - தீக்கதிர்) என்றார்.

உள்ளூர் பிரச்னையை உலகப் பிரச்னையாய் ஆக்குவதும், உலகப் பிரச்னையை உரக்கப் பேசாதே என்பதும் தமிழர் பிரச்னைக்கு மட்டுமே நடக்கிறது. அது மட்டுமே கசக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விருப்பமான இலங்கை கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் நா.சண்முகதாசன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்ணோட்டப்படி எழுதப்பட்ட (இலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு - என்.மருத்துவமணி, மா.இராமசாமி) புத்தகத்தில்கூட மிகப் பெருமைப்படுத்தப்படுகிறார் நா.சண்முகதாசன்.

'தேசிய இனப் பிரச்னை பற்றிப் பேசுவது, ஏகாதிபத்தியங்களின் பிரித்தாளும் சூழ்ச்சி’ என்று (1965-களில்) முதலில் நினைத்தவர். 1980-களில்தான் மாற்றிக்கொண்டார்.

'இலங்கை அரசாங்கமும் சிங்களப் பேரினவாத சக்திகளும் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர் அறுபடாத ஒரு நிலப்பரப்பில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வரும் ஒரு தேசம் என்ற உண்மையையும் அதனால் அவர்களுக்கு சுயநிர்ணயத்துக்கான உரிமை உண்டு என்பதையும் ஏற்க மறுக்கின்றமையே, இன நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாமல் இருப்பதற்கான பிரதான காரணமாகும். இந்த உரிமை ஏற்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டாலொழிய இன்றைய தமிழர் பிரச்னைக்குத் தீர்வு எதுவுமே இருக்க முடியாது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய, உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர்தான், அந்த மக்களிடம் முற்போக்கான சிங்கள சக்திகள், ஒரு தனிநாட்டை அமைப்பதற்கான சுய நிர்ணய உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதை தமிழ் பேசும் மக்களின் மொழி வழிப் பிரதேசமாகிய வடக்கு, கிழக்கு மாகாணங்களைக்கொண்ட சமஷ்டியாகவோ அல்லது பூரணப் பிரதேச சுயாட்சியாகவோ பிரயோகிக்கும்படியும் கேட்டுக்கொள்வதற்கான அருகதையைக்கொண்டிருக்க முடியும். சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்பதானது சிங்கள, தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சாதி, மத, மொழி வேறுபாடுகளின்றி புரட்சிகர சக்திகளை ஒன்று திரட்டுவதை வேண்டி நிற்கும் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகும்’ - என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அளவுகோல்படி தோழர் நா.சண்முகதாசனும் பிரிவினைவாதியா? அவரைப் பிரிவினைவாதி என்பவர்களை என்ன சொல்லலாம்?

தொடரும்

Sunday, May 19, 2013

ஈழம் தமிழர் தாயகம் இல்லையா? - மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 7



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய இதழ் 'செம்மலர்’. அதில் ஈழத் தமிழர் பிரச்னை குறித்து அந்தக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் எடுத்த விரிவான பேட்டி இடம்பெற்றுள்ளது. (மே-2013)

இந்தப் பேட்டிக்கு முன்னுரை எழுதியுள்ள ச.தமிழ்ச் செல்வன், 'சென்னை லயோலா கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் ஆதரவுடன் அந்தக் கல்லூரி மாணவர்கள் தொடங்கிய உண்ணாவிரதத்தில் ஆரம்பித்து...’ என்று குறிப்பிடுகிறார். லயோலா கல்லூரியின் மாணவர்கள் உண்ணாவிரதம் உட்கார்ந்தது தன்னெழுச்சியான அவர்களின் உணர்வின் உந்துதல். அதற்கும் அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த உண்ணாவிரதத்தை நிறுத்த மாணவர்கள் மிரட்டப்பட்டனர். உண்மை இவ்வாறு இருக்க, 'நிர்வாகத்தின் ஆதரவுடன்’ என்று சொல்வதற்கு என்ன காரணம்?

லயோலா நிர்வாகம் என்றால் கிறிஸ்தவர்களாம். கிறிஸ்தவப் பின்னணி என்றால், அமெரிக்காவாம். அமெரிக்காவின் தூண்டுதலால் இந்தப் போராட்டம் நடந்ததாம். கூடங்குளம் மக்கள் தேவாலயம் முன்னால் உண்ணாவிரதம் உட்கார்ந்திருப்பதால் அது அமெரிக்கத் தூண்டுதல் என்று சொல்வதைப் போல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூளைக்குத்தான், இப்படி உள்நோக்கம் எல்லாம் கற்பிக்க முடியும்!

இந்தப் பேட்டியில் ஒரு கேள்வி...

பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிவதை ஆதரிப்பவர்கள், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டிப்பவர்கள் இலங்கைப் பிரச்னையில் மட்டும் மாறுபட்டு முடிவெடுப்பது சம்பந்தமாகக் கருத்துக் கூறும் ஜி.ராமகிருஷ்ணன்,

'பாலஸ்தீனம் என்பது அந்த மக்களின் நாடு. அவர்களின் நாட்டை அவர்களிடமிருந்து பறித்து ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டு, அந்த மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். இலங்கையில் சிங்களரும் தமிழரும் நட்புடன் வாழ்ந்த நீண்ட கால வரலாறு உண்டு.... ஆகவே, ஒரு நாட்டை இன்னொரு நாட்டுடன் ஒப்பிட முடியாது’ என்கிறார். இதைப் போல வரலாற்று விரோதக் கருத்து எதுவும் இருக்க முடியாது. தமிழர்களின் பாரம்பரிய உரிமையை நிராகரிக்கும் வார்த்தைகள் இவை.

பாலஸ்தீனம் என்பது அந்த மக்களின் நாடு என்றால், ஈழ மக்களுக்கு அது சொந்த மண் அல்லவா? அவர்கள் அனைவருமே வந்தேறிகளா? 'குடியிருக்கப் போன இடத்தில் சண்டை போடலாமா?’ என்று திண்ணையில் உட்கார்ந்து பேசுவதைப் போல மார்க்சிஸ்ட்கள் பேசலாமா?

'பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது தனித் தீவாகப் பிரிந்திருக்கிற இலங்கை, தமிழகத்தோடு இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. அந்தக் காலத்தில் கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் கிழக்கிலும் பாண்டி நாட்டோடு இணைந்திருந்த நிலம் இலங்கையோடு இணைந்து சேர்ந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. பின்னர் காலந்தோறும் ஏற்பட்ட கடல் கோள்களாலேயே அந்த நிலப் பகுதி சிறிது சிறிதாகக் கடலில் மூழ்கி இப்போதுள்ள நிலையை அடைந்தது. தமிழ்நாட்டின் கரையோரங்களைச் சுற்றிலும், இலங்கைத் தீவில் கரையோரங்களைச் சுற்றிலும் இப்போதுள்ள கடல் ஆழமில்லாமல் இருக்கிறது. இந்தக் கடல் ஆழமில்லாது இருப்பது முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி நிலமாக இருந்து இலங்கையும் தமிழகமும் ஒன்றாக இணைந்திருந்தன என்பதற்குச் சான்றாக இருக்கிறது’ என்று சொல்பவர் புலிவாதி அல்ல. வரலாற்றாசிரியர் மயிலை சீனி.வேங்கடசாமி தான் இப்படிச் சொல்கிறார்.

சிங்களர் தங்கள் வரலாற்றைச் சொல்ல ஆதாரமாக 'மகாவம்சம்’ என்ற புத்தகத்தைக் காட்டுவார்கள். சிங்களர்களின் மூதாதையரான விஜயன் தன்னுடைய தோழர்களுடன் லாலா தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு ஏறி வந்த கப்பல், இலங்கையில் தரை தட்டிக் கரையேறியபோது, அவர்களுக்குப் புகலிடம் அளித்தவர் யட்சப் பெண்ணரசி 'குவெய்னி’ என்கிறது மகாவம்சம். அந்த குவெய்னியை ஏமாற்றி அரசுரிமை பெற்றான் விஜயன். 'குவி எய்னி = குவெய்னி. அதாவது அழகெல்லாம் ஒருங்கு திரண்டவள் என்று பொருள்படும் ஒரு தூய தமிழ்ச் சொல் இது’ என்கிறார் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்.

தலைச் சங்கம் இருந்த இடம், கடல்கொள்ளப்பட்ட மதுரை. இடைச் சங்கம் இருந்த இடம், கடல்கொள்ளப்பட்ட கபாடபுரம். கடைச்சங்கம் இருந்த இடம், உத்தர மதுரை. இதில் கபாடபுரம் என்பது எங்கே இருந்தது? பிளவுபடாத நிலப்பரப்பாகிய குமரிக் கண்டத்தில் தமிழகத்தில் தொடங்கி ஈழம் வரை தாமிரபரணி இருந்தது என்றும், அந்த ஆற்றைத் தாண்டி கபாடபுரம் இருந்தது என்றும், யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய ஆ.முத்துத் தம்பிப் பிள்ளை சொல்கிறார். இது, தியரி வகுப்புகள் எடுத்த ஜி.ராமகிருஷ்ணனுக்குத் தெரியாமல் இருக்கலாம். இலக்கியவாதி தமிழ்ச்செல்வனுமா மறந்துபோனார்?

அநுராதாபுரத்தில் ஆட்சி புரிந்த மாமன்னன் எல்லாளன், தமிழன். அவன் காலத்தில் இலங்கையில் 32 தமிழரசர்கள் இருந்தனர். அவர்களையெல்லாம் வென்ற பிறகுதான் சிங்கள மன்னன் துட்டகைமுனுவால் அரியணை ஏற முடிந்தது என்பதும், அவர்களே ஒப்புக்கொண்ட வரலாறு. ஈழத்துத் தொல்லியல், மானிடவியல், மரபணுவியல், சமூகவியல், சாசனவியல் ஆகியவற்றின் சான்று ஆதாரங்களுடன் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், ஈழத் தமிழர் தொன்மை குறித்து எழுதி இருக்கிறார். 'பௌத்தக் கலாசாரம் பரவுவதற்கு முன், இந்தோ ஒஸ்ரிக் முண்டா, திராவிட மொழிகள் இங்கு பேசப்பட்டிருக்கலாம்’ என்ற கருத்தை பேராசிரியர் சுதர்சன் செனிலரத்தினா ஏற்றுக்கொள்கிறார். அநுராதாபுரத்தில் அகழ்வாய்வு செய்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கொன்னிங்காம் இதை ஒப்புக்கொள்கிறார்.

அநுராதாபுரம், பொலனறுவை, யாழ்ப்பாணம், தம்பதெனிய, கண்டி, கொட்டே ஆகிய ராஜ்யங்கள்தான் போர்ச்சுக்கீய, ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் இருந்தவை. 1799-ல் பிரிட்டிஷார் வெளியிட்ட வரைபடத்தில் மூன்று ராஜதானிகள் உள்ளன. கொட்டி கிங்டம் (சிங்களீஷ்), கண்டி கிங்டம் (சிங்களீஷ் - ஒருமுறை தமிழ் மன்னர் ஆளுகையில் இருந்தது.) ஜாஃப்னா கிங்டம் (தமிழ்) என்று அவற்றைக் குறித்துள்ளனர். வட மாகாணத்தில் தமிழர்கள் தங்கள் கட்டுப்பாட்டை வைத்திருந்தனர் என்பதைப் பல சிங்கள வரலாற்று ஆசிரியர்களே ஒப்புக்கொள்கின்றனர்.பிரிந்து கிடந்த பகுதியை பிரிட்டிஷார் தான் ஒன்று படுத்தினார்கள். நாட்டைவிட்டு வெளியேறும் போது சிங்களவர்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டுப் போனார்கள். அதுதான் சிக்கலே. 'வடக்கு - கிழக்கு பகுதி என்பது தமிழர் தாயகம்’ என்று தமிழ்த் தேசியவாதிகளாலும் புலி ஆதரவாளர்களாலும் இட்டுக்கட்டிச் சொல்லப்படுவது அல்ல. ராஜீவ் - ஜெயவர்த்தனா கையெழுத்திட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்திலேயே, 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தமிழர்களின் வரலாற்றுக் குடியிருப்புப் பிரதேசங்களாக இருந்துள்ளன’ என்று இருக்கிறது.

வட கிழக்கு மாகாணத்தை இலங்கைத் தமிழர்களின் வரலாற்றுக் குடியிருப்புப்பிரதேசங்களாக ஜே.ஆர் ஜெயவர்த்தனாவே ஒப்புக்கொண்டார். ஆனால், மார்க்சிஸ்ட் செயலாளர் இதை நிராகரித்து, 'இலங்கையில் சிங்களரும் தமிழரும் நட்புடன் வாழ்ந்த நீண்ட கால வரலாறு உண்டு’ என்று முக்கியத்தன்மையைக் குறைக்கிறார். வரலாற்றுக் காலம் முதல் தமிழர்கள் அங்கு வாழ்ந்த உரிமை என்பதே தாயக உரிமை. இதை ஒப்புக்கொண்டால், தேசிய இனப் பிரச்னை தொடர்பாக முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்பதால், ஈழத் தமிழர்களின் முன்வரலாற்றையே மறைக்கப்பார்க்கிறார்கள்.

பாலஸ்தீன விடுதலை பற்றிப் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இஸ்ரேலியக் கொடுமை பற்றி விலாவாரியாக எழுதும். அந்த இஸ்ரேல் அளவுக்கதிகமான அழித்தொழிப்பு வேலைகளை பாலஸ்தீனம், சிரியாவில் செய்ததைப்போல ஈழத்திலும் செய்தது.

ரத்தக் கறை படிந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, 1983-ல் இஸ்ரேலைத்தான் முதலில் அணுகினார். அமைச்சரவைச் செயலாளர் ஜீ.வி.பீ.சமரசிங்காவை இஸ்ரேலுக்கு ரகசியமாக அனுப்பிவைத்தார். அதன்பிறகு, ஜெயவர்த்தனாவின் மகனும் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்த ரவி ஜெயவர்த்தனாவும் இஸ்ரேல் போனார். மொசாட் தலைவர் அட்மொனியையும், இஸ்ரேல் பிரதமர் ஷமீரையும் சந்தித்தனர். 'ஒரு பொதுவான எதிரியை - பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இஸ்ரேலின் வளங்களைப் பயன்படுத்தத் தயார்’ என்று ஷமீர் வாக்களித்தார். இலங்கைப் படைக்கு இஸ்ரேல் பயிற்சி கொடுத்தது. இதை அப்போதே முஸ்லீம் எம்.பி.கள் கண்டித்தனர். 'அரசாங்கத்தின் முடிவு பிடிக்கவில்லை என்றால், கூட்டணியைவிட்டு வெளியேறுங்கள்’ என்று பகிரங்கமாகவே ஜெயவர்த்தனா அறிவித்தார்.

சிங்கள ராணுவம் கொடூரமாக மாறுவதற்கு இந்தப் பயிற்சிகள்தான் பயன்பட்டன. முழுக் கிராமங்களையும் தீயிட்டுக் கொளுத்துதல், அகதி முகாமுக்குள் நுழைந்து அனைவரையும் வெட்டிப் போடுவது, தேடித் தேடிக் கண்டுபிடித்துக் கொல்வது போன்றவை அப்போதுதான் ஆரம்பமாகின. சித்ரவதையில் கோரமான முறைகள் கையாளப்பட்டன. தமிழ்ப் பகுதியில் நடத்தப்பட்ட வன்கொடுமைகளை விவரித்தால், துன்பமே அதிகமாகும்.

தமிழ் இனத்தின் ஒற்றுமைக்கு மிகப் பெரிய வேட்டு வைக்கும் சம்பவத்தை அன்று மொசாட் செய்தது. இனத்தால், மொழியால் தமிழர்களாகவும், மதத்தால் முஸ்லிம்களாகவும் இருந்தவர்களை இரு பிரிவாகப் பிரித்து மோதவிடும் வேலையைத் தொடங்கியது. 'இஸ்ரேலின் மொசாட் என்ற உளவுப் பிரிவின் ஆலோசனைக்கு இணங்க தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையில் ஆழ்ந்த பிரிவினையை உருவாக்கும் பொருட்டு தமிழ்-முஸ்லிம் கலவரங்களை உருவாக்குவதற்குத் தூண்டிவிடப்பட்டனர்’ என்று, கலாநிதி ஆ.க.மனோகரன் எழுதுகிறார். இவர் புலி ஆதரவாளர் அல்ல. இப்படி, தமிழர் ஒற்றுமையை இஸ்ரேல் சிதைத்த வரலாற்றை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் எடுத்துப் பார்க்க வேண்டும்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் கொடுமை செய்தால் பரிதாபப்படுவதும்... அதையே, ஈழத்தில் செய்தால் பாராமுகமாக இருப்பதும் ஓரவஞ்சகச் சிந்தனை. இது ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகிக்கு மட்டுமல்ல... அந்தக் காலத்தில் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட், பி.ராமமூர்த்தி போன்ற பெரிய தலைவர்களுக்கே இருந்துள்ளது. அதுவே இன்று வரை தொடர்கிறது!

-தொடரும்

நன்றி - விகடன்

Friday, May 17, 2013

தலைவர் பிரபாகரன் தொடர் - 4


வல்வெட்டித்துறையில் அப்போது இருபது இருபத்தைந்து இளைஞர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள். இரண்டு நண்பர்கள் அவர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். ஒருவர், நடராஜா தங்கதுரை. இன்னொருவர், செல்வராஜா யோகச்சந்திரன். துடிப்பானவர்கள். ஏதாவது செய்யவேண்டும் என்கிற தணியாத தாகம் கொண்டவர்கள். தரப்படுத்துதல் என்கிற பெயரில் தமிழ் மாணவர்களை அரசாங்கம் பழிவாங்கிக்கொண்டிருப்பதில் வெறுப்புற்றிருந்தவர்கள். தமிழ் அரசியல்வாதிகளால் பத்து பைசாவுக்குப் பிரயோஜனமில்லை என்று வருந்திக்கொண்டிருந்தவர்கள். தமிழர்களின் மீட்சிக்கு ஆயுதம் ஒன்றே இறுதி வழி என்று முடிவு செய்து, களம் இறங்கியிருந்தவர்கள்.

ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை. ஆயுதம் கிடைப்பது. வெடிபொருள்கள் கிடைப்பது. கிடைத்ததெல்லாம் இரண்டாம் தரம். உடைந்த துப்பாக்கிகள். துருப்பிடித்த பிஸ்டல்கள். கெஞ்சிக் கூத்தாடினால் ஏழெட்டு ரவைகள் கிடைக்கும். சுடுவதற்குப் பயிற்சி வேண்டாமா? பயிற்சிக்கு ரவைகளை வீணாக்கினால் புரட்சிக்கு என்ன செய்வது?

தவித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு மெக்கானிக்கை நட்பாக்கிக்கொண்டு, கிடைத்த உடைந்த துப்பாக்கிகளைக் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொல்லியிருந்தார்கள். குழுவின் இளம் உறுப்பினராகச் சேர்ந்திருந்த பிரபாகரனுக்கு, அந்த மெக்கானிக்கின் அசிஸ்டெண்டாக வேலை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

துருப்பிடித்த பிஸ்டல்களைக் கழற்றிப் போட்டு ரிப்பேர் செய்யும் மெக்கானிக்கின் கைவிரல்களையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பார் பிரபாகரன். எண்ணெய் போட்டுத் தேய்த்துத் தேய்த்து மெருகேற்றி, பகுதி பகுதியாக மீண்டும் இணைத்து, ஒரு நல்ல உருப்படியாக மாற்றி வைத்துவிட்டு மெக்கானிக் எழுந்து போனதும் பிரபாகரன் அதனைக் கையில் எடுப்பார். மீண்டும் பகுதி பகுதியாகக் கழற்றிப் போட்டுவிட்டு, மெக்கானிக் செய்தது போலவே திரும்ப இணைத்துப் பார்ப்பார். அதுதான் ஆரம்பம்.

தங்குமிடம்தான் பெரும் பிரச்னையாக இருந்தது. டீக்கடைகளின் பின்புறம். ரயில்வே லைன் ஓரத்து புதர் மறைவுகள். நண்பர்களின் வீடுகள். கோயில் திண்ணைகள். பள்ளிக்கூடத் திண்ணைகள். உலகம் உறங்கும் வரை விழித்திருந்துவிட்டு, ஒதுங்கிப் படுப்பார். ஊர் விழிப்பதற்கு முன்னால் எழுந்து போய்விட வேண்டும். எந்த இடமானாலும் சரி. இதுதான் விதி. இதுதான் வாழ்க்கை.

ரொம்பக் கஷ்டமாக இருக்கிறதா தம்பி? தங்கதுரை ஆதரவாகக் கேட்பார். பிரபாகரன் சிரிப்பார். என்ன சாப்பிட்டாய்? அடுத்த கேள்வி அநேகமாக அதுவாகத்தான் இருக்கும்.

பொதுவாக அந்நாட்களில் பிரபாகரன் உட்கார்ந்து வயிறாரச் சாப்பிட்டது வெகு அபூர்வம். வசதியில்லாமல் இல்லை. இடமில்லை என்பதுதான் விஷயம். போலீஸ் தேடத் தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததுமே தலைமறைவாகியிருக்க வேண்டும். வீடுவரை வந்துவிட்டபின் தப்பித்தது சற்றே பிழை. இன்னும் கொஞ்சம் முன்கூட்டி யூகித்திருக்க வேண்டும். இப்போது தேடுதல் தீவிரமடைந்திருக்கும். எங்கும் கண்காணிப்புக் கழுகுகள் வட்டமிட்டபடியேதான் இருக்கும்.

இத்தனைக்கும் அன்றைய பிற தமிழ் இளைஞர்கள் செய்ததுபோல், அப்போது அவர் வங்கிக்கொள்ளை எதிலும் ஈடுபடவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து பாயிண்ட் பெட்ரோவுக்குப் போகும் பேருந்து ஒன்றில் தீ வைத்த குழுவில் அவர் இருந்தார். மக்கள் இல்லாத பேருந்து. ஷெட்டுக்குப் போய்க்கொண்டிருந்தபோது வழியில் நிறுத்தி, ஓட்டுநரை இறங்கி நடந்து போகச் சொல்லிவிட்டு எரித்தார்கள். அதற்குத்தான் போலீஸ் தேடிக்கொண்டிருந்தது.

வெறும் ஆர்வம். ஏதாவது செய்யும் ஆர்வம். கவன ஈர்ப்பில் ஆர்வம். அரசாங்கத்தைப் பதறச் செய்யமாட்டோமா என்கிற தவிப்பு. அப்படியாவது தமிழர்களுக்கு ஏதாவது செய்யமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பு. ஆனால், இம்மாதிரியான உதிரிச் செயல்கள் பெரிய அளவில் உதவாது என்று மட்டும் அவருக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்க வேண்டும். ஆனால் இதுவல்ல. இப்படியல்ல. எனில் எது? எப்படி?

யோசித்துக்கொண்டிருந்தார். இரவுப் பொழுதுகளில் வயல்வெளியில் இறங்கி வெகுதூரம் நடப்பார். வயல் காட்டில் எங்கே கிழங்கு பயிரிட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பார். சர்க்கரை வள்ளிக் கிழங்கு. இருட்டில் தடவிப் பார்த்து செடியை உணர்ந்து, கிழங்கைத் தோண்டி எடுத்துக்கொள்வார். மேலும் நடந்து மிளகாய்த் தோட்டம் பக்கமாகப் போய் நாலைந்து பச்சை மிளகாய்களை வேலியோரம் நின்று பறித்துக்கொள்வார்.

எங்காவது கால்வாய் அல்லது குளத்தில் கிழங்கைக் கழுவி, கையாலேயே தோலைச் சீவிவிட்டு பச்சையாக அப்படியே உண்பார். தொட்டுக்கொள்ளப் பச்சை மிளகாய்.

கஷ்டம்தான் இல்லை? யோகச்சந்திரன் என்கிற குட்டிமணி கேட்பார். இல்லையே என்பார் பிரபாகரன். பச்சை சர்க்கரை வள்ளிக்கிழங்கும் பச்சை மிளகாயும் வெகு விரைவில் அவரது இஷ்ட உணவாகிவிட்டிருந்ததுதான் காரணம்.

வீட்டை விட்டு வெளியேறி எத்தனை நாளானது என்பதே நினைவில்லை. வாழ்க்கை அதன் போக்கில் காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரபாகரன் மறைந்திருந்த இடத்துக்கு வேலுப்பிள்ளை வந்து நின்றார்.

அதிர்ந்து போய்விட்டார் பிரபாகரன். அப்பா, நீங்களா? இங்கேயா?

போலீஸ்காரன் தேடுவது பிழைப்புக்கு. அவனிடம் சிக்காதிருக்க முடியும். பெற்றவன் தேடுவது அப்படியா? தம்பி, என்ன இது? என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

பிரபாகரன் உடனே பதில் சொல்லவில்லை. வெகுநேரம் யோசித்தார். பிறகு சொன்னார். அப்பா, உங்களுக்கு முழுக்கப் புரியுமா என்று தெரியவில்லை. என்னால் உங்களுக்கு இனி பயனில்லை. என்னை விட்டுவிடுங்கள்.

தலைமறைவுக் காலத்தில் பிரபாகரனைச் சுற்றி ஒரு சிறு குழு சேர்ந்திருந்தது. தங்கதுரை, குட்டிமணி குழுவிலிருந்தவர்கள் அல்லர். இது வேறு குழு. வேறு இளைஞர்கள். பிரபாகரனைப் போலவே ஆர்வமும் துடிப்பும் மிக்க இளைஞர்கள். அதிகமில்லை. பத்துப் பதினைந்து பேர் இருக்கலாம். ஒரு குழுவாகச் செயல்படலாம் என்று முடிவு செய்திருந்தவர்கள். பிரபாகரனைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தவர்கள். தமக்குள் பேசி தங்கள் இயக்கத்துக்குப் `புதிய தமிழ்ப் புலிகள்’ என்று பெயரிட்டிருந்தார்கள்.

வெளியில் யாருக்கும் தெரியாது. பெயர் அல்ல; அப்படியொரு குழு உருவானது கூட. தலைமறைவு வாழ்க்கை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. கொஞ்சம் வெளிச்சத்தில் நடமாட முடிந்தால் ஏதாவது செய்யலாம் என்று எண்ணியிருந்தார்கள்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, பிரபாகரன் பதுங்கியிருந்த இடம் அவரது தந்தைக்குத் தெரிந்தது போலவே போலீஸுக்கும் தெரிந்து போனது. அடுத்த இடம் தேடும் அவசரத்தில் அப்போது இருந்தார் பிரபாகரன். அப்போதுதான் வேலுப்பிள்ளை வந்திருந்தார்.

சொல் தம்பி. என்ன செய்யப்போகிறாய்?

இந்தியாவுக்குப் போகப்போகிறேன் அப்பா என்று அவர் சொல்லவில்லை. ஆனால் அதைத்தான் அப்போது செய்தார்..


தொடரும்

தலைவர் பிரபாகரன் தொடர் - 3

நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது - 4



எல்லா இடத்தையும் மேலோட்டமாக பார்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டான். நான் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஆமி மேலிடத்தோடு தொடர்பு கொண்டான். அதன் பின்பு வாகனமும்;, நிறைய ஆமிக்காரரும் வந்தார்கள். பிறகு வீட்டுக்குள் வந்து ஆட்களை எண்ணினான். எனக்கு மேலே கட்டிலில் ஒரு அண்ணா வேதனையில் துடித்துக் கொண்டு இருந்தார்.

கட்டிலுக்கு மேலே இருந்து அவரது குருதி (‘பிளட்’) வடிந்துகொண்டேயிருந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என் கண்முன்னே அவர் துடிப்பதையும், குருதி வழிவதையும் பார்த்துக் கொண்டிருக்க, சிங்களவன் மேல் கோபம் கோபமாக வந்தது. இவங்களை சும்மாவிடக் கூடாது என எண்ணிக்கொண்டேன்.

ஆமிக் கொமாண்டர் வந்து சிங்களத்தில் ஏதோ சொன்னான். ஆமிக்காரர்கள் உடனே சிலர் எல்லாப் பக்கமும் போய் நின்று கொள்ள, சிலர் அங்கங்கே எல்லா இடமும் போய்த் தேடினாங்கள். நான் அந்த வீட்டில் கட்டிலோடு ஓரளவு கிடையாக சாத்தி வைக்கப்பட்டிருந்த தகரங்களின் உள்ளேதான் பதுங்கியிருந்தேன்.

ஒருத்தன் (ஆமி) மேலே இருந்த தகரங்களை ஒவ்வொன்றாக எடுத்தான். எனக்குப் பயமாக இருந்தது. அடுத்தடுத்த தகரத்தையும் எடுத்தால் சரி நான் இருப்பது தெரியும்;. நான் தகரத்தின் மேல் கையை வைச்சுப் பார்த்தேன். எடுக்கும் போது அதிரும்தானே என்று பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்படி ஏதும் நடந்தால் அடுத்து என்ன செய்யலாம், அவனின் கையில் பிடிபடக் கூடாது என்பதற்காக குப்பியை வாயில் வைத்த வண்ணம் நடப்பதைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன்;;. அவன் தான் எடுத்த தகரங்களை எண்ணிக்கொண்டு இருந்தான்;. ஒரு ஆமிக்காரன் ஏதோ சொல்லிப் பெரிதாகக் கத்தினான். பின்னர் ‘வெடித்தியாண்டேப்பா’ என்று நிறையத் தரம் கத்தினான்.

உடனே எல்லோரும் அவன் நின்ற பக்கம் ஓடினார்கள். அங்கே காயப்பட்டுக்கிடந்த ஒரு அண்ணனை இழுத்துக் கொண்டு போனார்கள். அவரை வீட்டுக்கு முன்பு இழுத்துக் கொண்டு போய் விட்டுட்டு ‘உங்களுடைய ஆக்கள் யாரும் ஒளிந்திருந்தால் கூப்பிடு’ என்று ஒரு ஆமிக்காரன் சொன்னான். அவர் பேசாமல் இருக்க, சப்பாத்துக் காலால் காயத்தில்; உழக்கி சித்திரவதை செய்தான். அவர் வேதனைக் குரலில் குழறியபடி ‘டேய் அண்ணாக்கள் ஆரும் ஒளிஞ்சிருந்தால் வாங்கோடா’ என்று கத்திக் கூப்பிட்டார். அப்போது ஒரு அண்ணா கையை உயர்த்திக் கொண்டு போனார்.

ஆமிக் கொமாண்டர் ஆ…..நல்லம் நல்லம் என்று சொல்லிக் கொண்டு இரண்டு பேரையும் வாகனத்தில் ஏற்றினான். பிறகு வீட்டுக்குள் வந்து வீரச்சாவடைந்த நாலு பேரையும் இழுத்துக் கொண்டு போய் ஓரிடத்தில் அடுக்கிப் போட்டார்கள். எனக்கு மேலே கட்டிலில் கிடந்த அண்ணனை இழுக்கும்(அவரும் வீரச்சாவடைந்துவிட்டார்) போது ஆமியின் சப்பாத்துக்கால் என்னுடைய காலுக்கு மேலே இருந்தது. (தகரத்தின் மேலே ஏறி நின்றபோது) நான் சத்தம் போடாமல் வேதனையை அடக்கிக் கொண்டிருந்தேன். பிறகு எல்லோரையும் பலமாதிரி போட்டோ எடுத்தான். ஒவ்வொருவராகப் பார்த்து ஏதேதோ சிங்களத்தில் எல்லாம் சொன்னான்.

அதன் பிறகு ஆமிக்காரர்கள் அவர்களை இழுத்துக் கொண்டு போய்ப் போட்டுவிட்டு புரட்டிப் புரட்டிப் பார்த்தாங்கள். தமிழண்ணாவின் கோல்சரை வெட்டி எடுத்து ஏதோ சொல்லிச் ‘செக்’; பண்ணிப்பார்த்தபின், எல்லோருடைய உடைகளையும் கழற்றி, அவர்களின் மீது ஏறி நின்று உழக்கியும், அடித்தும் சொல்லமுடியாத செயல்களையெல்லாம் வீரச்சாவடைந்த அவர்களுக்குச் செய்து கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கு வேதனையாக இருந்தது. அந்த நால்வரில் பெண் போராளியை (செல்வியக்காவை) வீரச்சாவடைந்த பின்னும் அவங்கள் கூடி நின்று அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியதைக் கண்ட போது எனக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை.

அந்த உணர்வு கோபமா அல்லது கொலை வெறியா என்று தெரியவில்லை. வித்துடல்களாக நாங்கள் மரியாதையுடன் விதைப்பவர்களை அவன் செய்த செயல்கள் எனக்குள் மாறாத வடுவாகப் பதிந்தது. அது என்றும் எனக்குள் போராட்டக் கனலை பற்றியெரிய வைத்துக் கொண்டிருக்கும்.

பின்பு வீரச்சாவடைந்த அந்த நால்வரையும் அந்த வீட்டின் முற்றத்தின் மேற்குப்பக்கத்திலே இருந்த தென்னைகளுக்கு கிட்ட இழுத்துக் கொண்டு போய் ஏதோ ஊற்றி எரித்தான். பிறகு வீட்டுக்குள் வந்து எல்லா இடமும் ‘டோச்’ அடித்துப் பார்த்துவிட்டுப் போனான். ஆமிக் கொமாண்டர் நாலுபேரைக் கூப்பிட்டு சிங்களத்தில் ஏதோ சொன்னான். பின்னர் பிடிச்ச இரண்டு பேருடனும் வாகனத்தில் ஏறிப் போய்விட்டான். அந்த நாலுபேரும் அதிலேயே ‘பொசிசன்’ போட்டு நின்றார்கள். மற்றவங்கள் அங்காலப்பக்கம் வேற எங்கட ஆட்கள் இருக்கினமோ என்று கிளியறிங் செய்து கொண்டு போனாங்கள்.

அந்த நேரத்தில் நான் உயிர் தப்பியது அவனோட ஆணவம் கலந்த அலட்சியமும், மாவீரரின் ஆசியும், என்னோட அதிஸ்டமுமாகத்தான் இருக்க வேண்டுமென நினைத்தேன். சம்பவம் நடந்தது பகல் 3.00 மணியிருக்கும். இப்போது இரவு 10.00 மணியாகிவிட்டது. ஆமியின் சத்தத்தைக் காணவில்லை. மெல்ல நேரத்தைப் பார்த்தேன். (நான் கையில் மணிக்கூடு கட்டியிருந்தேன்.) மணி 10. எனவே ஆமி இருக்கமாட்டான் என்று நினைத்தபடியே தகரத்திற்குக் கீழேயிருந்து எழும்ப முற்பட்டேன். ஆனால் முடியவில்லை. ஏனென்றால் பலமணி நேரமாக ஆடாமல் அசையாமல் படுத்திருந்ததால் மிகவும் கஸ்ரப்பட்டு எழும்ப முயற்சி செய்து காயப்பட்ட கையைத் தூக்கினேன்.

கை மண்ணோடு சேர்ந்து ஒட்டியிருந்தது. சரியான வருத்தமாக இருந்தது. பகல் 3.00 மணிக்கு காயப்பட்டு இன்னும் ஒன்றுமே செய்யவில்லை. எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு எழும்பி வெளியே காலை வைத்தேன். உடனே சறுக்கி விழுந்துவிட்டேன். என்னவென்று பார்த்தேன். காயப்பட்ட அண்ணாக்களுடைய இரத்தம் வீடு முழுக்க பரவிக் கிடந்தது. எனக்கு அழுகையும் வந்தது. சிங்கள வெறிபிடித்த அவர்களின் மேலே பயங்கரக் கோபமும் வந்தது.

இதற்கு முதல் அவனோட ரவுண்டப்புக்குள் இருந்த போது, றைபிளை விட்டுவிட்டு ஓடி வந்த கலைமகள் அக்கா எனது பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு ‘என்ன செய்யிறது’ என்று கேட்டா. நான் ‘அக்கா நான் இருக்கிற இடத்திற்கு வாங்கோ’ என்று சொன்னேன். நீண்ட நேரமாகியும் அவா வரவில்லை. எனவே அவா பக்கங்களில் எங்கேயாவது ஒளிஞ்சிருப்பா என்று நினைத்துக் கூப்பிட்டுப்பார்த்தேன். ஒரு சத்தத்தையும் காணவில்லை. வீட்டைச் சுற்றி எல்லா இடமும் தேடிப்பார்த்தேன். அவவின் தொடர்பு கிடைக்கவில்லை. நான் தான் தனித்துப் போய் நின்றேன். எனவே எங்களின் அணியிலுள்ள மற்ற ஆட்களைத் தேட வேண்டுமென்று அங்கிருந்த துணியை எடுத்து கைக்காயத்துக்கு சுற்றிக் கொண்டு, எனது றைபிளையும் எடுத்துக்கொண்டு நான் காயப்பட்ட இடத்துக்கு மீண்டும் வந்தேன்.

என்னிடம் இப்ப ஒரு குண்டும், 30 ரவுண்ஸ்சும்தான் இருக்கிறது. எனவே நான் போக வேண்டிய தூரமும், தரப்பட்ட வேலையும் மனதில் வந்தது. எனவே மற்றவர்களைத் தேடிப் போகமுன், நான் காயப்படுமுன் கையிலே ஒரு குண்டு வைத்திருந்தேன். அதையும் எடுத்தால் உதவியாக இருக்கும் என்று போய்த் தடவிப்பார்த்து ஒருமாதிரி எடுத்துவிட்டேன். எடுத்துக் குண்டைப் பார்த்தால் குண்டின் பாதி ‘லிபர்’ஐக் காணவில்லை.

கிளிப்போடு ஒரு கொஞ்ச ‘லிபர்’ தான் இருந்தது. உடனே குண்டை அப்படியே வைத்துவிட்டேன். சண்டையின் போது பாதிலிபர் பறந்திருக்கிறது. கொஞ்சம் மேலே பட்டு லிபர் முழுக்க விடுபட்டிருந்தால் குண்டு வெடித்திருக்கும் என்று நினைத்துவிட்டு, மெதுவாக வெளியால் வந்து எல்லா இடத்தையும் சுற்;றிப் பார்த்துவிட்டு எங்களுடைய மற்ற அணி இருந்த வீட்டுக்குப் போவமென்று பார்த்தேன். ஆமி எங்கே இருக்கிறான் என்று ஒன்றும் தெரியாது. எனவே ஒரு வெட்டையொன்று ( கொஞ்ச சின்னப் பற்றைகள் கொண்ட வெளி) இருந்தது. அதனூடாக நடந்து போனால் தெரியும். அப்படியென்றால் ஊர்ந்து தான் போகவேண்டும். எனவே ஒருமாதிரி றைபிளையும் தூக்கி வைச்சு, வைச்சுக் ‘குறோள்’ இழுத்துப் போனேன். இரத்தம் போய்க்கொண்டே இருந்தது. இரத்தம் வழிந்த தடயத்தைப் பார்த்தால் அவன் கண்டிடுவான் என்று மிகவும் அவதானமாகத்தான் நகர்ந்து அவர்கள் இருந்த வீட்டைப் போய்ப் பார்த்தேன். எவருமில்லை. கூப்பிட்டுப் பார்த்தேன். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

நாங்கள் இருந்த எல்லா இடங்களிலும் போய்ப்பார்த்துக் கூப்பிட்டேன். பதில் வரவில்லை. எப்படி அவர்களைத் தேடுவது என்றெண்ணிக் கொண்டு திரும்பவும் நான் இருந்த வீட்டிற்கு வந்தேன். அப்போது மூன்று ஆமிக்காரர்கள் ‘டோச்’ அடிச்சுக்கொண்டு வந்தார்கள். நான் வேகமாக வேலியைக் கடந்து ஒரு வயல் வெட்டையிலிருந்த பெரிய வாய்க்கால் ஒன்றுக்குள் படுத்துக் கொண்டேன். காயத்திற்கு ஒரு மெல்லிய துணியினால் கட்டியிருந்தேன். அது துணியையும் மிஞ்சி இரத்தம் கசிந்து கொண்டிருந்தது………..

தொடரும்.

நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது - 3

முகவரி அல்ல முகம் - பாகம் 4




முடக்கப்பட்ட
உன் முகாம்களில் கேட்டேன்….
துரத்தப்பட்ட
உன் சுவடுகளில் உணர்ந்தேன்…
எனக்கும் வேர்விட இடமில்லை என்பதை

என்சொல் பழகிய
செவிகள் கேட்கட்டும்
உன்னை மறுப்பது
என்னை மறுப்பது.

சிறகு விரித்து
விதையொன்று அலையும்
முளைக்க ஒருபிடி
மண்தேடி.

கவிஞர் இன்குலாப்

தமக்கு எழுந்த விடுதலை வேட்கையால் தமிழனுக் கென்று ஒரு நாடு அமைக்க இழப்புகளையும், துன்பத்தையும், இன்முகத்தோடு தாங்கி தமது இலட்சியத்தை வென்றெடுக்கும் பணியை இடையராது செய்து கொண்டிருந்த தமிழ் போராளிகள் முறியடிக்கப் பட்டதாக வடநாட்டு ஊடகங்கள் நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லி தீர்த்தது. தமிழர்கள் வீழ்ந்தார்கள் என்பது வட இந்தியர்களுக்கு ஒர் இனிய செய்தி. சிங்களவன் அதை உணர்ந்ததால் தமது பரப்புரை தளமாக வடநாட்டு ஊடகங்களையேத் தேர்வு செய்தான்.

இத்தனை கேடுகளையும் செய்துவிட்டு சிங்கள இனவெறியன் ராஜபக்சே இந்த போர் இந்தியாவிற்காக நடத்தப்பட்டது என்று பகீரங்கமாக அறிவிக்கிறான். ராஜபக்சே இவ்வாறு கூறியதற்கு இதுவரை இந்திய அரசிடமிருந்து எவ்வித மறுப்போ, கருத்தோ வெளிபடவில்லை. சோனியா ஆட்சியை அமைத்ததும் தாம் தமிழரை வென்றதும் சமமான வெற்றியாகக் கருதும் ராஜபக்சே ஒரு சிறு போராளி குழுவை எதிர்கொள்ள சீனா, பாகிஸ்தான், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆற்றலை ஒட்டுமொத்தமாய் பயன்படுத்தியிருக்கிறான். இது ஒன்றே போதும் புலிகளின் வீரத்தை அடையாளப்படுத்த. நமது ஊர்களில் எணூணிதணீ கீணிதீஞீடிண்ட் என்று சொல்லக் கூடிய குழு போக்கிரிகள் கருவித்தரிக்காத ஒருவரை கூடி நின்று வெட்டி வீழ்த்துவார்களே அப்படி கையில் ஆயுதமில்லா அப்பாவி தமிழர்களை சிங்கள வெறியர்களின் கூலிப்படையாய் மாறி குதறித்தள்ளியது அந்த பன்னாட்டுப் படை. ஆனாலும், கூட அவர்களால் வெற்றியை எட்டமுடியவில்லை என்பது சிங்கள அரசின் செய்தியாளர்கள் தரும் கூற்றுகளில் இருந்து வெளிப்படுகிறது. இவர்கள் தமிழப் போராளிகளை முறியடிக்கப்போவதாக கூறிவிட்டு அப்பாவித் தமிழர்களை அநியாயமாய் பழி தீர்த்து தமது முகங்களிலே குருதியால் கோலம் வரைந்துள்ளார்கள். ஆனாலுங்கூட ஆட்டைக் கொன்ற ஒநாய் ரத்தக்கறையை மறைக்க அப்பாவியாய் நடிப்பது போல இவர்கள் செய்த அத்தனை அநியாயங்களையும் மறைக்க பயங்கரவாதத்திற்கு எதிரானபோர் என்று வசனம் பேசுகிறார்கள்.

அப்பாவி தமிழ்மக்கள் 50.000 பேரை ஒரே நாளில் கொன்றொழித்ததற்குப் பெயர் எவ்வளவு பெரிய பயங்கரவாதம். ஆனால் ‘புத்தநாடு செய்த பெருங்கொடுமையை ஆதரித்து காந்தி நாடு கையெழுத்து போடுகிறது’. இவர்களுக்கு ஆதரவாய் நின்ற நாடுகள் சீனா, திபெத் மக்களின் ஜனநாயக உரிமையை அவர்களின் தேசிய அடையாளத்தை தோட்டாக்களின் முனையில் துடைத்தெறிய துடிக்கும் நாடு. அதனால்தான் வேறெந்த தேசிய அரசும் தமது அடையாளத்தை வெளிக்கொணரகூடாது என்ற கயமையோடு செயல்படுகிறது. அதோடில்லாமல் மேற்காசிய நாடுகளில் தமது பேரரசை நிலவ பல புதிய வழிகளை தேடி வருவதால் இலங்கையின் கடல்வழிகள் அந்நாட்டிற்கு தேவைப்படுகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு எத்துனை பெரிய அச்சுறுத்தல் என்பது இந்தியா ஏன் உணரமறுக்கிறது என்பது புரியவில்லை.

ரஷ்யாவை பொறுத்தமட்டில் கட்டிக்காக்கப்பட்ட மாந்தகுல மேன்மைகள் முதலாளித்துவ வெறியால் முறியடிக்கப்பட்டதன் விளைவாக சுகபோக வாழ்வுக்கு ஆசைப்பட்ட சில பூஷ்வா சிந்தனையாளர்கள் தம்மை வளர்த்துக் கொள்ள, ஒப்பற்ற மாமனிதன் லெனின் கட்டியமைத்த சோவியத் ஒன்றியத்தை சிதறடித்தார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானை தமது கட்டுக்குள் கொண்டுவர அளவிட முடியாத போர்கருவிகளால் ஆப்கானிஸ்தானை நிரப்பினார்கள். ஆப்கானிய மக்களின் தேசிய அடையாளத்தையும் லெனின் கூறியதைப்போல அவர்கள் பிரிந்து போகும் உரிமையையும் மறுத்தவர்கள் தான் இந்த ரஷ்யர்கள். இப்படி இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகள் ஒவ்வொன்றும் தனிமனித உரிமைகளை மட்டுமல்ல தேசிய மொழி, சிந்தாந்தம், கலாச்சாரங்களை, கல்லறைக்கட்ட துடிக்கும் நாடுகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவர்கள் எல்லாம் ஒன்றிணைந்ததுதான் இலங்கையை இந்த ஒநாய் ஆடுகளைக் கொல்லாது என்று சாட்சியம் கூறியிருக்கிறார்கள்.

தமது பெயரிலேயே துட்டன் என்ற அடைமொழி கொண்ட இனவெறியன் எல்லாளனோடு போரிட்டு புறமுதுகிட்டு ஒடினான். வயது முதிர்த்த எல்லாளனை எப்படி கொல்வது என திட்டமிட்டு குறுக்கு வழியிலே துட்டகாமினி எல்லாளனை வெட்டிக் கொன்று தமிழரசைக் கைப்பற்றினான். சூழ்ச்சி செய்வதும், சதி செய்வதும், தமிழர்களுக்கு ஏனோ வராமலேயேப் போனது. தமிழர்கள், சிங்களர்கள் எதிர்ப்பு என்பது இந்த நிகழ்வின் மூலமே தொடங்கியது. தமிழர்களின் தலைநகராய் இருந்த அனுராதபுரத்தை பௌத்த சமயத்தினர் கைப்பற்றி தமது தலைநகராக மாற்றியமைத்தார்கள்.

கி.பி. 550- 800 களில் தமிழ்நாட்டில் ஆழ்வார்களும், நாயன்மார்களும், வைணவ, சைவ சமயங்களில் மறுமலர்ச்சி பெற மாபெரும் தொண்டாற்றினார்கள். வைணவ சமய கருத்துக்கள் வேகமாய் பரவத் தொடங்கியது. இக்காலங்களில் தான் தமிழர்கள் தம்மை தமிழர்களாக மீண்டும் பார்க்கத் தொடங்கினார்கள். இப்படி தமிழ்நாட்டில் பேரலையாய் புறப்பட்ட வைணவ, சைவ சமயங்களின் ஆற்றல் இலங்கையில் பேரிடியாய் வந்திறங்கியது. தமிழர்கள் பலர் மீண்டும் தமிழர்களாயினர். தமிழ்நாட்டில் பல்லவ, பாண்டிய மன்னர்கள் சைவ சமயத்திற்கு தம்மை மாற்றிக் கொண்டதால் இலங்கையில் உள்ள பௌத்தசமய தலைமைக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. எங்கே தமது சமயம் அழிந்து விடுமோ என்ற அச்சத்தால் கூடிப்பேசி திட்டமிட்டார்கள் பௌத்தத்தைக் காப்பாற்ற என்னவெல்லாம் செய்யமுடியும் என்று ஆலோசனை நடத்தினார்கள். அப்போதுதான் அவர்கள் மூளையில் மகாவமிசம் என்ற கற்பனைக் கதைத் தோன்றியது. இந்த கதையிலே தமிழர்க்கு எதிராகவும், சைவ சமயத்திற்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் புகுத்தப்பட்டன. குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக அரசு அமைய வேண்டும் என்பதே மகாவமிச கருத்தோட்டமாக அமைந்திருந்தது. விஜயனின் வழிவந்த அந்த இனத்தினர். தம்மை சிங்களவர் என அழைத்துக் கொண்டனர், அதோடில்லாமல் பௌத்தத்தைக் கட்டிக் காக்கும் பெரும் பொருப்பு தமக்குண்டு என கூறிக்கொண்டனர். வெறும் வட்டார வழக்காக வரிவடிவமற்ற இந்த சிங்கள மொழி சிங்களர்களின் மகாவமிசத்தின் மூலம் அங்கீகாரம் பெறத் தொடங்கியது. மகாவமிசத்தை படைத்தளித்த சிங்கள அரசன் தாதுசேனன் காலத்தில் இது நிகழ்ந்தேறியது.

இக்காலத்தில் தமிழ்நாட்டை நாயன்மார்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அந்த காலத்திலே பௌத்தர்களாய் இருந்தவர்கள், இல்லாவிட்டால் பௌத்த சமயத்திற்கு மாறியவர்கள் சிங்கள மொழியை பௌத்த மொழியாக உள்வாங்கிக் கொண்டனர். ஒன்றுபட்டு கிடந்த மக்கள் மொழியால், சமயத்தால் வேறுபட்டு நின்றவர்கள், அது சிறிதுசிறிதாய் வளர்ந்து தமிழர் நிலப்பகுதி, சிங்களர் நிலப்பகுதி என வேற்றுமை வேரூண்றத் தொடங்கியது. இந்த நிலப்பகுதிகள் எப்படி பிரிந்து கிடக்கிறது என்பதை புவியியல் ஆய்வு கண்ணோட்டத்தோடு பார்த்தோம் என்றால் தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்குமான உறவு எத்தனை நெருக்கமானது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டிற்கு அருகே உள்ள கரையோரங்களும், சமவெளிகளும், தமிழர்களின் நிலப்பகுதியாக இருக்கின்றன.

மலைப்பாங்கான நடுப்பகுதியும் தமிழ்நாட்டிற்கு எட்டாத தெற்கு நிலப்பகுதியும் சிங்களர் நிலப்பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதை நாம் மிகச் சாதாரண புவியியல் தளத்திலிருந்து புரிந்து கொள்ள முடியும். கி.பி. 993-1070 காலங்களில் ராஜராஜ சோழன், மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோர் இலங்கையின் மீது படையெடுத்து முழுத்தீவையும் தமிழர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பொலநடுவையில் சோழரின் தலைநகரம் அமைக்கப்பட்டது. சிங்களர்கள் தெற்கு நோக்கி ஒட்டம் பிடிக்கத் தொடங்கினார்கள்.

தொடரும்…

கண்மணி

முகவரி அல்ல முகம் - பாகம் 3