Wednesday, May 15, 2013

மே-18 : விழிமழைக் காலம் விரைவில் மாறும்



காலம் எழுதிய துயரக் காவியம்
கண்களை இன்னும் நனைக்கிறதே-மன
ஓலம் இன்னும் ஓய்ந்திட வில்லை
உலகம் கல்லாய்க் கிடக்கிறதே.

இரவின் உதடுகள் கண்ணீர் சொற்களை 
ஏந்திய படியே அழுகிறதே-அலை
புரளும் கடலும் மௌனம் நோற்று
புவியை வெறுத்து எழுகிறதே.

உறக்கம் குதறும் ஊமை நினைவுகள் 
உயிரில் வலியாய் வலிக்கிறதே-எம்
உறவுகள் எழுப்பிய மரணக் கூச்சல்
ஒவ்வொரு நொடியிலும் ஒலிக்கிறதே.

முள்ளி வாய்க்கால் கரைகளின் மீது 
முளைத்த மரணப் புதர்களிலே-எம்
பிள்ளைகள் ஆடிய பொம்மைகள் கூட
பிணம்போல் வெறித்துக் கிடக்கிறதே.

விழிமழைக் காலம் விரைவில் மாறும் 
வெளிச்சம் தேடி நடையிடுவோம்-நம்
வழிநடைப் பயணம் ஈழம் அடையும்
வருத்தங்க ளுக்கு மடையிடுவோம்.

-ஆரூர் தமிழ்நாடன்