Thursday, May 30, 2013

இரவுப்பறையாக பறந்து இயக்கத்தை காத்து, போராட்டத்தை வளர்க்கப் பாடுபட்டவர் மேஜர் சுருளி


இராணுவ வாகனங்கள் யாழ்.நகர வீதிகளில் அரக்கத்தனமாக வலம்வரும் காலம், ஒளிந்தும், மறைந்தும் புலிகள் இயங்கிய நாட்கள், இரவு வருவதற்காக போராளிகள் காத்திருப்பர்கள். இரவுக்காக காத்திருக்கும் புலிகளில் ஒருவன் சுருளியும் ஒருவன்.

அவனது போராட்ட வாழ்வு பெரும்பாலும் இரகசியம் நிறைந்ததும், மறைவானதுமாகவே இருந்தது.

அன்றைய இரவுகள் மிகப்பயங்கரமானவை, எந்த வீதியிலும், எங்கும் இராணவ ஓநாய்கள் வாய்பிழந்து நிற்கும், சில நேரங்களில் இரவின் அமைதியை துப்பாக்கிகளின் வேட்டுக்கள் கலைக்கும். ஒரு போராளியோ, அல்லது ஏதாவதுதொரு வேலைக்குப் போன தமிழ் மகனோ வீதியை முத்தமிட்டுக் கிடப்பான்.

சுருளி இயக்கத்திற்குள் தன்னை இணைத்துக் கொண்டதுமே அவனுக்கு கிடைத்த வேலை, எமது இயக்கத்தின் பெறுமதிமிக்கவையான இராணுத் தளபாடங்கள், ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பாகும். அந்த நேரங்களில், எம்மிடமிருந்தவையே சில ஆயுதங்கள் தான். அவற்றை இழந்துவிட நாம் ஒருபோதும் தயாராக இல்லை ஏன் என்றால், எங்கள் விடுதலைப் போராட்டத்தை வளர்த்தெடுக்கும் உன்னதமான கருவிகள் அவை. அவற்றைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு போராளியும் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். அப்படிப்பட்டதொரு பொறுப்பான வேலைதான் சுருளிக்கும் கிடைத்தது.

பண்டிதர் அவர்கள் தான் அந்த நாட்களில் இயக்கத்தின் பல்வேறு வேலைகளுக்கு பொறுப்பாக நின்று செயல்பட்டுக்கொண்டிருந்தார். அந்த நெருக்கடிமிகுந்த நேரமிகுந்த நேரங்களில் பண்டிதர் அவர்களுக்கு உறுதுணையாக நின்று செயற்பட்டவர்களில் சுருளியும் ஒருவன். பண்டிதருக்கு சுருளி ஒரு செல்லப்பிள்ளை, பண்டிதர் அவனில் மிகுந்த அன்பை வைத்திருந்தார். அதேநேரம் பெரும் நம்பிக்கையும் வைத்திருந்தார். அவரின் கைகளிற்குள் நின்று சுற்றிச் சுழன்று வேலை செய்தவன் சுருளி. அவரின் கைகளிற்குள்ளேயே வளர்ந்தவன், அவனைப் போன்ற இரவுப்பறைகளின் பறப்புகள் தான் இயக்கத்தை காத்தது, போராட்டத்தையும் வளர்த்தது.

இயக்கத் தளபாடங்களை பாதுகாத்தல் எனபது இலகுவானது தொன்றல்ல, மிகவும் கடினமான பணி, இரவு முழுவதும் ஆந்தை மாதிரி கண்விழித்து வேலை செய்ய வேண்டும். மழையிற்கும், வெயிலுக்கும் பாதுகாக்க வேண்டும். அதே நேரம் எதிரியின் கழுகுக் கண்களிற்கும் மறைக்கவேண்டும். இதில் ஏற்படும் சின்னத்தவறு கூட இயக்கம் ஒர் ஆயதத்தை இழக்க வேண்டய நிலையை ஏற்படுத்தலாம்.


சுருளி எவருடனுமே இலகுவாகப் பழகுவான், அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிடுவான். அவனது அந்த இயல்பே அவனுக்கு வழங்கப்பட்ட வேலைக்கு பெரும் உதவியாக இருந்தது. அவனுடைய தோழர்கள் அவனைக் கேலி செய்வதுண்டு, எப்போதுமே சிரித்தபடி திரிகிறாயடா என்று, கள்ளங் கபடமற்ற இந்தப் பிறவி ஒர் உயர்ந்த போராளியாக வாழ்ந்தான்.

அந்த நேரத்தில் தான் ஒரு கடுமையான சுற்றிவளைப்பிற்கு உட்பட்டு பண்டிதர் அவர்களையும், எங்களின் சில தோழர்களும் வீரமரணத்தை சந்தித்தார்கள். பண்டிதர் அவர்களின் வீரமரணம் சுருளியை நன்றாகவே பாதித்திருந்தது. இயக்கத்திற்கு வந்தநாள் தொடக்கம் பண்டிதருக்கு பக்கத்திலேயே திருந்த அவனால் அவரின் இழப்பை தாங்க முடியாமல் இருந்தது. அன்று தொடக்கம் எத்தனையோ இரவுகளில், பண்டிதரின் நினைவுகள் இவனது விழிகளை நனைத்திருக்கிறது.

பண்டிதரின் வேலைகளை மேஜர் அல்பேட் பொறுப்பேடுத்த பொழுது, அல்பேட்டுடன் இணைந்து சுருளியும் வேலைகளில் ஈடுபட்டான். யாழ். பொலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடாத்திய பொழுது அல்பேட்டின் தலைமையில் சுருளியும் கலந்துகொண்டான் அந்த நேரங்கள் தான், இராணுவ முகாம்களை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தகாலம். அச்சந்தர்ப்பங்களில் பல தாக்குதல் நடவடிக்கைகளில் சுருளியும் ஒருவனாக பங்குபற்றினான்.

சுருளி ஒரு சாதாரண சுருட்டுத் தொழிலாளியின் மகன். யாழ் மாவட்டத்தில் உள்ள சுதுமலை கிராமம் தான் அவனின் பிறப்பிடமாகும். அங்குள்ள அம்மன் கோயிலடி வீதியிலும், மழை வெள்ளக் காலங்களில் வயல் வெளிகளிலும் விளையாடித்திருந்த இவனின் நெஞ்சத்தில் விடுதலை உணர்வும் துளிர்க்கத் தொடங்கியது.

அது ஆயதப்போராட்டத்தின் ஆரம்ப காலம், விடுதலை இயக்கம் எது, சமூக விரோதக் கும்பல்கள் எதுவென பிரித்தறிய முடியாத நிலை, நரிகளெல்லாம் புலி வேசம் போட்டு நின்றன. உண்மையான விடுதலை இயக்கமொன்றுடன் தன்னை இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற தாகம் சுருளியில் படிந்து கொண்டது, அவனுடன் அவனது கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களுகளும் இணைந்து கொண்டார்கள்.

அவர்கள் அறிந்துகொண்டதெல்லாம் தலைவர் பிரபாகரனைப் பற்றி, அவரின் வீரத்தனைப் பற்றி, அவரால் வகுக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் பற்றித்தான், புலிப்படைத் தேடி அவர்கள் அலைய வெளிக்கிட்டார்கள். புலிகள் மட்டும் கண்ணுக்குத் தெரியவே இல்லை, மற்றும் படி எல்லா இயக்கத்தவர்களும் கால்களிற்குள் நின்றனர். "இயக்கத்தில் சும்மா ஆள்ப்பொலிவுக்கு சேரக்கூடாது. செயல்படவேண்டும், ஒழுங்கும், கட்டுப்பாடும் வேண்டும், அத்தோடு விடுதலைப் போராட்டத்தை கொண்டு செல்லுகிற உறுதியும் தீவிரத்தன்மையும் வேண்டும் இதை எல்லாம் பார்த்துத் தான் நாங்கள் இயக்கத்தில் சேரவேண்டும்" என்று கூறித் தன் நண்பர்களை தவறான வழிகளிற்கு சென்று விடாமல் பார்த்துக்கொண்டான் சுருளி.

இறுதியில் அவன் தான் எங்கோ அலைந்து திரிந்து புலிகளில் ஒருவரை சந்தித்துக் கொண்டான். அந்த நேரங்களில் தான், ஒருநாள் மானிப்பாய் கிராமங்களை துப்பாக்கி வேட்டோசைகள் கண்விழிக்கச் செய்தன. காலை 6 மணிக்கு பிரயாணிகள் பேரூந்தொன்றை மறித்த பச்சைப் பேய்கள் அதிலிருந்தவர்களை இறக்கி, வரிசையில் நிற்க வைத்துச் சுட்டுக்கொன்றனர்.

காலையில் படிப்பதற்காக வந்தமாணவர்கள், பேரூந்துச்சாரதி இன்னும் பொது மக்கள்கள் சிலர்- உடல் சிதறி உயிரற்றுக் கிடந்தார்கள். அந்த இராணுவ மிருங்கள் இந்தச் செய்தியைத் தெரியாமல் வந்த மினி பஸ் ஒன்றையும் மறித்து அதில் ஏறினர். அந்த மினி பஸ் மானிப்பாயிலிருந்து மாதகல் இராணுவ முகாமை நோக்கி ஒட வெளிக்கிட்டது அங்கே ஒர் துயரம் நிறைந்த சம்பவம், அந்த பஸ்ஸிற்குள் இருந்த ஒவ்வொரு தமிழனும் கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு சுடப்பட்டு வீதிவீதியாக வீசப்பட்டார்கள். அந்தப் பச்சை மிருங்களின் கோரப்பற்கள் எங்கள் தேசத்தின் வீதிகளைச் சிதைத்துச் சென்றன.

அந்தச் சம்பவத்தின் பின்பு, வெளியில் வாழ்வதற்கு சுருளியின் மனம் இடந்தரவில்லை, அவன் ஒரு முழுமையான போராளியாக மாறிவிட்டான். பண்டிதருடன் இணைந்து வேலைசெய்யத் தொடங்கினான். காலங்கள் ஓடின, விடுதலைப் போராட்டம் தொடர்ந்தது. சுருளியின் தம்பிகளில் ஒருவனான ரதிதரனும் புலிகளுடன் இணைந்து கொண்டான்.

இந்தியப் படை தமிழீழத் தேசத்தின் மீது ஆக்கிரமிப்பை நடாத்தி, ஒர் போரைத் தொடங்கிய நேரம் எம் தேசமெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், தமிழ்ப் பெண்களில் பலர் படுமோசமாக பாலியல் வன்முறைக்காளானார்கள். இந்த மண்ணை நேசித்தவர்கள் பிடித்துச் செல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டார்கள், தமிழீழ தேசத்தில் விலக இடமின்றி இந்தியர்கள் நிறைந்து போய் நின்றார்கள்.

அந்த நிலைகளில் ஆயுத தளபாடங்களையும், ஆவணங்களையும் பாதுகாக்க சுருளியும் அவனது தோழர்களும் கடுமையாக போராடினார்கள், அந்த நாட்களில் அவர்கள் விடுதலைப் போராட்டத்தை பாதுகாத்தார்கள், அதற்காக ஆயுதங்களைப் பாதுகாத்தார்கள். சில நாட்கள் சென்றன, இந்தியப் படைகள் சுருளியைத் தேடத் தொடங்கினார்கள். சுருளியின் வீடு அடிக்கடி சுற்றிவளைக்கப்பட்டது. போராட்டத்திற்காக இருவரைத் தந்த அவனின் குடும்பம் கொடுமையான சித்திரவதைக்காளானது. பல வருடங்களாக இருந்த பகையுணர்வை சமூகவிரோதி ஒருவன் இந்தியர்களுடன் சேர்ந்து நின்று தீர்க்கத் தொடங்கினான்.


அப்போது தான் ஒரு நாள் சுருளியின் தம்பி ரதிதரனும், அவனது தோழர்களும் இந்தியப்படைகளாலும், தேசவிரோதிகளாலும் சுற்றி வளைக்கப்பட்டார்கள், சின்னதொரு சண்டை அதில் ரதிதரனின் உடலிலும் சில ரவைகள் பட்டன, அவனது தோழர்கள் தப்பிச் சென்றார்கள், ரதிதரனின் உயிரற்ற உடலை இந்திய படையினர் வீதியால் இழுத்துச் சென்றார்கள். இந்த மண்ணை நேசித்த போராளி ஒருவன் தேசவிரோதிகளாலும், இந்தியர்களாலும் இந்த தேசத்தின் தெருக்களின் வழியே இழுத்துச் செல்லப்பட்டான்.

இந்திய இராணுவத்தினர் இங்கு நின்ற போது, சில காலம் வன்னியில் நின்ற சுருளி, மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்து செயல்படத் தொடங்கினான். ஆபத்து நிறைந்த அந்த நேரத்தில் சுருளியும், அவனது தோழர்களும், மிக அவதானமாகச் செயல்பட வேண்டி இருந்தது. தேசவிரோதிகளும் இந்தியர்களும், வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி முகாமிட்டு நின்றார்கள், தமிழீழ மக்கள் இந்தியத் துப்பாக்கிகளின் முனைகளில் நின்று வாழ்ந்தனர்.

அந்த நேரம் தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களை மறைவில் இருந்து எடுக்க வேண்டியிருந்தது. ஏனையவற்றைப் பாதுகாக்கவேண்டியிருந்தது. இதற்காக சுருளியும் அவனது நண்பர்களும் நம்பிக்கையானவர்களைத் தேடி அலைய வேண்டியிருந்தது.

இந்தியப் படைகள் ஈழமண்ணை விட்டு வெளியேறிய பின்பு, புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இணைந்து சுருளி செயற்பட்டான். சுருளிக்கு கொடுக்கப்படும் வேலைகளைப் பொறுப்புணர்ச்சியுடன், சிறப்பாகச் செய்து முடிப்பவன். பண்டிதரிடமிருந்து இவனிடம் தாவிக்கொண்டத்தில் ஒன்று எளிமை.

தன்னைக் கவனியாது, ஒரு சைக்கிளில் கிராமத்து வீதிகளில் ஏதோ ஒரு வேலைக்காக ஓடித்திரியும் சுருளி... ஒரு வெடி விபத்தில் சிக்கினான். மூன்று நாட்கள், அவன் சாவுடன் போராடினான், ஆனாலும் 30.05.1991 அன்று மேஜர் சுருளி வீரமரணத்தைச் சந்தித்துக் கொண்டான்.