Tuesday, June 4, 2013

சங்கே முழங்கு!



நேர்மையினான்… ஆதலினால்
வலிய பகை நேர்வரினும்
எதிர்த்து மோதும்
ஓர்மையினான்! காலத்தை
ஊடறுத்துத் தொலைநோக்கும்
கண் ஓட்டத்தில்
கூர்மையினான்! தமிழீழம்
எழ எழுந்து கூண்டுடைத்த 
மான வாழ்வின்
சீர்மையினான்! எந்தலைவன்
பிரபாகரன் கீர்த்தி
முழங்கு சங்கே!

அலைநிகர்த்தான் தொடர்தொடராய் 
படைவரிசை திரட்டி எழும்
ஆற்றல் தன்னில்!
உலைநிகர்த்தான் படைக்கருவி
வகைவகையாய் உருவாக்கும்
தொழில் நுட்பத்தில்!
வலைநிகர்த்தான் சூழ்ச்சியினால்
எதிரிகளை வளைத்தழிக்கும்
போர்த் திறத்தில்!
மலைநிகர்த்தான்! எந்தலைவன்
பிரபாகரன் மாண்பை
ஊது சங்கே!

மொழிமறவான்! இனம்மறவான்! 
பகைமொத்த நீர்பொழியும்
தமிழீழத் தாய்
விழிமறவான்! தமிழ்மாந்தர்
உயிர்பறித்து வெறியாடும்
கொடிய மாற்றார்
பழிமறவான்! களமாடி
எதிர்த்தபகை அழித்தொழிக்கும்
தமிழ் மறத்தின்
வழிமறவான்! எந்தலைவன்
பிரபாகரன் வலிமை
உறுமு சங்கே!

அடிதருவான்… எனினும் உயிர் 
பிழைத்திடுக என அயலார்
படைக்கும் காலம்
நொடிதருவான்! களத்துமிசை
உறவிழந்து நொந்த தமிழ்
மழலைக்குத் தன்
மடிதருவான்! போர் மறவன்
ஆயினும் மண் மீதிலிவன்
அன்பொன்றுக்கே
பிடிதருவான்! எந்தலைவன்
பிரபாகரன் பெருமை
கூவு சங்கே!

வீறுடையான்! தமிழ் வேங்கை! 
கொடிய பகை வீழ்த்தி எழும்
போரின் ஆற்றல்
நூறுடையான்! மாற்றார்தம்
பாசறையை நொடிப்பொழுதில்
எரித்த சாம்பல்
நீறுடையான்! தமிழீழம்
நிறுவியவன் எனவரலாற்
றேட்டில் நிற்கும்
பேறுடையான்! எந்தலைவன்
பிரபாகரன் வீரம்
பிளிறு சங்கே!

காசி ஆனந்தன்