Wednesday, May 29, 2013

விதைகுழி மீளுங்கள்..!



தேங்கி எழும்புகின்ற
தேசத்தின் ஏக்கங்கள்
வாஞ்சையோடும்மை
வாரி அணைத்திடவே
வழி பார்த்து நிற்கின்றோம்…!

முகிலினை விலக்கி
மூச்சுவிட்டு ஒழி தந்த
அகிலனவன் பெற்ற
அன்பு புதுமைகளே
தீயினை உருக்கி ஒரு
தீந்தமிழ் பாடுகிறோம்
வளருகின்ற கருவினில்
வருகின்ற வேங்கைகளின்
வலிமையினை உறுதி செய்ய
வாயினை திறந்தொரு
வாழ்த்தொன்று சொல்லுங்கள்…!

நாளைய விடியலில்
நாமேனும் அரசவை
நமக்கென பிறக்கட்டும்
தமிழ் புயலென
எங்கணும் தடைகளை
உடைத்தொரு தரணி பாடட்டும்…!

தாயகக் கனவுகள்
நெஞ்சினில் வெளிப்பட
சேயதை போற்றுங்கள்
தமிழ் தாய்மகள் அழுதிட
தொட்டிலில் போட்டொரு
காவியம் பாடுங்கள்
கரிகாலனை போற்றுங்கள் …!

வீழ்வதும் வீரமாய்
வித்திலும் துணிவுற
வேங்கைகள் எழும்புங்கள்
இனிவரும் யுகமது
தடைகளை எரித்திட
துணிவினை கொள்ளுங்கள்
தமிழ் கருக்களை வளர்த்தோரு
செருக்களம் ஏகிட மீண்டும்
தங்க விதைகுழி மீளுங்கள்..!

கவிஞர்:சீராளன் கவிதைகள்