Saturday, June 8, 2013

வீரம் தாரும் மைந்தர்காள்!



நீங்கள் நின்றபோது எங்கள் நிலமிருந்தது - அந்த
நிலமிழந்தபோது உங்கள் நினைவு மீந்தது
தாயிருந்தபோதும் பிள்ளை தனியிருக்குது - இன்று 
தவித்திருக்கும் மக்கள் நெஞ்சு உமைநினைக்குது
பாயிருந்தபோது தூக்கம் வரமறுக்குது - இங்கு
பாய்ந்துவந்துபேய்கள் எமது தலையறுக்குது
நீங்கள் வந்து எங்கள் உள்ளே சேர்ந்திருப்பது -
இனி எந்தநாளிலன்றுதானே பயம் விடுப்பது

மயிரிழக்க மானம் என்று உயிரிழப்பது - கவரி
மானின் எண்ணம் அதனையொத்த தமிழிருந்தது
பெயரிழந்து பேச்சிழந்து பெருமை உடைமைகள் - இன்னும்
பேணிக் காத்த கலைவளங்கள் இவையிழந்துமே
துயரெழுந்து அழுதபோதும் அலறிஓடியும் - பெண்ணின்
துகிலிழந்து உயிரிழந்து துடிதுடிக்கவும்
எவரெழுந்தும் கேட்கவில்லைப் புவனம் மீதினில் - இனி
எது இழக்க உண்டு நீங்கள் எழுந்துவாருங்கள்

கையிழந்து கையில்கொண்ட கனமிழந்ததும் - எம்மைக்
காக்க ஏதுமில்லை யென்று காலம்சொன்னதும்
மெய்யிழந்த புத்தன் நாட்டை பையக் கொள்கிறான் - இந்த
மேதினியில் பலர் இணைந்து பாவம் செய்கிறார்
நெய்யிழந்த தீபமாக நாம் அணைவதா? இல்லை
வெய்யிலாக வான்வீதி உதயமாவதா?
பொய்யிழந்த நேர்மை இன்று வாழமுடியுமா இன்று
பேய்கள்கூடிக் கூத்தடிக்கும் பூமியல்லவா

இடியெழுந்து மேகமின்றி மின்னிக் கொண்டது - அன்று
எதிரிவானில் உங்கள்வீரம் புகையைவைத்தது
துடித்தெழுந்து நடை நடந்தீர் கிடுகிடுத்தது எதிரி
துரத்திஓட செய்தீர் ஈழம் பளபளத்தது
எலிபிடித்துவைக்க பூமி வலையறுத்தது - உலகம்
எழுந்து எங்கள் நெஞ்சின் நேரே இலக்கு வைத்ததும்
கடிகடித்து காட்டு நாய்கள் வேட்டையாடவே - இன்று
கையை விட்டுக் காத்திருந்து காட்சிகாணுது

ஐயோ நானா என்ரு ஐநா பின்னிழுக்குது - அது
அத்தனையும் வைத்திருந்து என்னசெய்யுது?
குய்யோ தானோ என்று கத்திக் குமுறினாலுமே - அது
குடைசரித்து கடமைதன்னை குப்பையாகுது
எய்யும் அம்பு எடுத்த கையை இன்னொருநாடு - மெல்ல
இல்லையென்று பின்னிழுத்து மூடிவைத்தது
பெய்யும் மழை, இடியிடிக்கும் புயலடிக்குமே - நீங்கள்
உங்கள்வீரம் எமக்களித்தால் உயிர் பிழைக்குமே!

செயல்வளர்த்து சீற்றம்கொண்டு சீறும் வேங்கையாய் - நீவிர்
சென்ற பாதை நாம்தொடர்ந்து செல்லும்போதிலும்
புயல் எழுந்தபோது பேய்கள் சிங்களம் யாவும் - பேச
பயமெடுத்து மனம்கலங்கி பதுங்கிச் சோர்ந்தன
கயலெழுந்து வாழுமோடும் அலைகடல்தனின் - கூட
ஊயரெழுந்து ஓடிக் கரும்படைகள் ஆண்டன
தயவெழுந்து இன்று எம்மைக் காக்க வாருங்கள் - எங்கள்
தரை, கடலும் வானும் மீட்கும் திறனைத்தாருங்கள்

கிரிகாசன்