Monday, May 20, 2013

தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: ச.பொட்டு


பிரிகேடியர் பால்ராஜ் எங்களில் இருந்து பிரியமாட்டார். தமிழ் மக்களின் மனங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் மறைய மாட்டார்.

அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினத்தின் வரலாறானது ஒரு சுதந்திரப் போராட்ட வரலாறாக மாறி தமிழர்களின் போரியல் வரலாறாக மாற்றம் பெற்ற போது அதன் நாயகனாக வாழ்ந்தவர் பால்ராஜ்.

போரின் நாயகனாக போர்க்களத்தின் மத்தியில் நின்று வழிநடத்திய வீரத் தளபதியாக வாழ்ந்தார்.

எம்மை ஆக்கிரமித்தவர்களுக்கு சிம்ம சொர்ப்பனமாக விளங்கிய தளபதி பிரிகேடியர் பால்ராஜை, எதிரிகளால் கடைசி வரை வீழ்த்திவிட முடியவில்லை.

கொடிய நோய் அவரை எம்மிடம் இருந்து பிரித்து வைத்து விட்ட போதிலும் அவரின் வரலாறு அவர் சாதித்த போர் தொடர்பான சாதனைகள் என்றென்றும் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கும். அது தமிழர்களின் வீர விடுதலைக்கான சுதந்திரப் போர் இயக்கமாக எம்மை வழிநடத்தும்.

தமிழர்களின் வரலாறு வீரம் செறிந்ததாக புதிதாக எழுதப் புறப்பட்ட காலத்தில் மிக முக்கிய நாயகனாக பால்ராஜ் விளங்கினார்.

தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக-

போர்க்களத்தில் தமது தளபதி எவ்வாறு படைகளை வழிநடத்த வேண்டும் என்ற தேசியத் தலைவரின் எண்ணத்திற்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மிகச்சிறந்த "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் அவர்.

போர்க்களங்களில் துணிவுடனும் திறனுடனும் பதறாமலும் நின்று போர் விசாரணைகளை வழி நடத்தும் பண்பு அவருக்கே உரிய பண்பாக- அதுவும் இயல்பான ஒன்றாக- இயற்கையில் வாய்த்ததாக- அமைந்திருந்தது.

இந்திய இராணுவத்தினருடனான எத்தனையோ தாக்குதல்களில் திடீர் முடிவுகளை எடுத்து வெற்றிகரமாக நடத்தினார்.

மிக இளம் வயதில் அவர் கிராமப்புறம் சார்ந்த வாழ்கையை மேற்கொண்டிருந்ததால் கிராம வாழ்கை அவருக்கு பிடித்திருந்தது.

ஆனால் அந்த கிராம வாழ்வுக்குள்ளும் மக்களை வழி நடத்துவதற்கான சிந்தனை அவருக்குள் இருந்தது.



படைப் பயிற்சிகளில் உளவியல் ஆசானாக இராணுவத் தலைமைத்துவனாக வெளிக்காட்டியவர்.

தமிழ் மக்களினதும் போராளிகளினதும் மன உறுதியை வளர்ப்பதில் சிறந்து விளங்கியவர் பால்ராஜ்.

பால்ராஜ் நோயினால் வீழ்ந்தது மனதைப் பிழியும் விடயம்.

அதேவேளை எதிரியால் அவரை வீழ்த்த முடியவில்லை என்பதும் எந்தவேளையிலும் எதிரியிடம் அவர் வீழந்துவிடவில்லை என்பதும் நாம் பெருமைப்படும் விடயம்.

ஆனால் அவர் வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கான போர்க்கள தளபதியாக இல்லாது வீழ்ந்து விட தாயாராக உள்ள போர்க்கள தளபதியாக செயற்பட்டார். பல்வேறு தாக்குதல்களில் பாரிய விழுப்புண்களை ஏந்தினார்

பால்ராஜ் வரலாற்றை படைத்தவர். வரலாற்றுக்கான சமர்களை வழிநடத்தி வென்றவர். அதற்காக குருதி கொடுத்து போர்க்களத்தில் நின்று சுழன்று போராடி வழிநடத்தியவர்.

சாவுக்குள்ளும் அவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதையும் தமிழர்களுக்கான வீர விடுதலை வரலாற்றை தனது வாழ்வின் ஊடாக எப்படி நடத்தினார் என்பதையும் நாங்கள் பார்க்க வேண்டும்.

தமிழ் மக்களின் வீர விடுதலை வரலாற்று நாயகனாக வாழ்ந்தார். அவரது சாவைப்பற்றி அல்ல அவரது வாழ்வைப்பற்றி பெருமை கொள்வோம். அவரது வாழ்வு தமிழர்களின் விடுதலை வரலாற்றுக்கான இன்றியமையாத அத்தியாயமாக பதிந்து விட்டது என்பது பெருமை என்றார் அவர்.