Friday, May 17, 2013

ஒன்று சேரடா!


வெட்டும்போது கைகள் தட்டி ஆடவா- குண்டு
வீசும்போது பாசம் விட்டுஓடவா
தட்டி எம்நிலம்பறிக்க தாங்கவா - எங்கள்
தாய்நிலத்தை விட்டு எங்கும் ஓடவா
கட்டிஎங்கள் மாதர் கொல்ல மூடவா - கண்கள்
காணலற்ற பேடியென்று ஆகவா
எட்டியெம் பிணம் உதைக்க ஏங்கவா - இல்லை
எம்நிலத்தை மீட்க ஒன்றுகூடவா

சொட்டி இரத்தம் ஆறுபோலஓடவா - நாமும்
சொல்லதற்ற ஊமையென்று நோகவா
முட்டி எம்மை கீழ்விழுத்த வீழாவா - வீழும்
மூடரென்றவன் இழிக்க வாழ்வதா
தட்டியென்ன வென்று கேட்ட தலவனாம் - அன்று
தலைநிமிர்ந்த வாழ்வுகண்ட தமிழனாம்
பெட்டியுள்ளே பாம்பு அல்ல நாமடா - அவன்
பேசிப் பொய்யை ஊதநின்று ஆடவா

எத்தனையென் றெண்ணும் ஆட்கள் நாங்களா நீயும்
செத்தபின்பு பார்க்கலாம் என்றாரடா
புத்தன்வம்சம் வெட்டவெட்ட பாரெல்லாம் - உளம்
புல்லரித்து கண்ட காட்சி நூறடா
சத்தியத்தை நம்பிநம்பி வீழ்ந்தமோ இந்த
சங்கதிக்கு இன்னம் நூறு வேசமோ
பொத்தி பொத்திவைத்த உண்மை தெரியுதா -இந்தப்
பேய்கள்வாழும் பூமி என்பதுண்மையா

ஒற்றைப்பாதை ஒன்றுசேர்ந்து கொள்ளடா - எங்கள்
உரிமையென்று பகைவிடுத்து சேரடா
வெற்று வாதம்விட்டு உண்மை எண்ணடா - உன்
வேலை எங்கள் ஈழம் காத்தல் தானடா
கற்றும் வாழ்வில் தூய்மைகெட்ட உலகடா - எம்
காக்கும் தெய்வமென்று எண்ணல் பொய்யடா
சொற்களோடு சென்று பேசு பேசடா - உன்
சொல்லில் வில்வளைத்து கொள்ளப் பாரடா

வாயிருக்க ஆயுதங்கள் வேண்டுமா - உன்
வார்த்தை என்ப இறைவ னீந்த வேலடா
போயிருந்து பேசு உண்மை கூறடா - உன்
பேச்சுவன்மை வெல்லும் உள்ளம் நூறடா
தேயிதென்றே எண்ணி திங்கள் சோர்வதா- அது
தேறும் மீண்டுமென்ப தென்ன அறியடா
ஆயிரமென் றேயுன் கைகள் இணையடா - அதில்
அன்னைத் தமிழ் ஈழம் வெல்லும் பாரடா

கிரிகாசன்