Monday, May 6, 2013

தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போலி பொதுவுடைமைக் கொள்கையும் அவர்களின் தனித் தமிழீழ எதிர்ப்பும்.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி அவர்கள் தங்களின் கட்சியின் வாக்கு வங்கிக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஒன்றை இயக்கி வருகிறார். ஈழத்தில் நடைபெற்ற இனவழிப்பில் தமிழ் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளுக்கு எதிராக இவரும் இவரது மாதர் சங்கமும் குரல்கொடுத்துப் போராட்டங்களை நடத்தவில்லை.

ஈழத்தில் தமிழ் பெண்களுக்கு நடைபெற்ற கொடுமைகளைப் போன்று இவ்வுலகில் அதற்கு நிகரான கொடுமைகளைக் காணமுடியாது. பெண்களுக்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொள்ளும் உ.வாசுகி அவர்கள் ஈழத்தமிழ் பெண்களுக்கு நடைபெற்ற கொடுமையைப் பற்றிப் பேசியதுண்டா? ஈழத்தில் தற்போதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடுமைகளைப் பற்றியாவது பேசியதுண்டா? ஆனால் தமிழக மக்களின் வாக்குகளுக்காக அங்குள்ள பெண்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பேன் என்ற உயரிய இலட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார் உ.வாசுகி அவர்கள். இதனைப் போன்று தான் வாக்குகளைப் பெற்று அரசியல் கட்சியை வளர்ப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விவசாயிகளுக்காகப் போலிச் சங்கங்களையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்,

ஈழத்தில் பெண்களுக்கு நடைபெற்ற கொடுமைகளுக்கு எதிராக தனது திருவாயைத் திறக்காத வாசுகி அவர்கள் தனித் தமிழீழம் உருவாகுவதற்கு தனது எதிர்ப்பையும், கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் அணுகுமுறையினால் தமிழருக்கு தீர்வு ஏற்பாடாமல் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். அப்படியென்றால் தந்தை செல்வா அவர்கள் 30 வருடங்களுக்கு மேலாக தமிழரின் உரிமைக்காகப் போராடிய போதும் ஏன் தமிழருக்கு தீர்வும் விடிவும் ஏற்படாமல் போனது? தந்தை செல்வா அவர்கள் சரியான அணுகுமுறையை கடைப்பிடிக்காமல் விட்டமையினால் தான் தமிழருக்கு தீர்வும் விடிவும் ஏற்படாமல் போனது என்று கூறுவது சரியான விவாதமா? அல்லது தமிழர்களுக்கு சம உரிமை வழங்கக் கூடாது என்று சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் உறுதியாகக் கொண்ட அணுமுறையா காரணம்? வாசுகி அவர்கள் சிங்களப் பேரினவாதிகள் தமிழருக்கு உரிமை வழங்குவதற்கு தயாராக இருந்தார்கள் ஆனால் விடுதலைப் புலிகளின் அணுகுமுறையினால் தமிழருக்குத் தீர்வு ஏற்பாடாமல் சென்றுவிட்டது என்று கூறவருகிறார் போல.

ஈழத்தமிழரின் விடயத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமலும் அறிந்துகொள்ளாமலும் தமிழகத்தில் உள்ளவர்கள் மத்தியில் விசமத்தனமான பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார் வாசுகி அவர்கள்.

அன்று யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதான காலப்பகுதியில் தனித் தமிழீழம் என்ற கோரிக்கையையும் கைவிட்டு சமவுரிமைக்கான தீர்வுத் திட்டத்தை வைத்து சிறிலங்கா அரசை பேச்சு வார்த்தைக்கு விடுதலைப் புலிகள் அழைத்தார்கள், ஆனால் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையார் அவற்றை குழப்பி மஹிந்தவை ஜனாதிபதியாக அமரவைத்தார், அதன்பின்னர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சமாதானம் மூலமாக தீர்வை எதிர்பார்த்துக் கொண்டு இருந்த தமிழ் மக்கள் மீது பாரிய இனவழிப்பை மேற்கொண்டார்கள் சிங்களப் பேரினவாதிகள். ஈழத்தில் என்ன நடந்தது என்று கூடத் தெரியாமல் உண்மைகளை மறைத்து யாரோ கூறியவற்றை வைத்துக்கொண்டு மிகக்கேவலமான இழிவான அரசியலை செய்துகொண்டு இருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி அவர்கள்.

மேலும் வாசுகி அவர்கள் கூறுகிறார் இலங்கையில் உள்ள முஸ்லிம் தமிழர்கள் கடந்த காலத்தில் புலிகளால் புறக்கணிக்கப்பட்டனர் என்று பொய்யான விசமத்தனமான கருத்துக்களைக் கூறுகிறார். இதற்கு உதாரணமாக வடக்கில் இருந்து முஸ்லிம்களைப் புலிகள் துரத்தியடித்தார்கள் என்கிறார். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களை சிங்களப் பேரினவாதத்துடன் இணைந்து இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் முஸ்லிம்கள் ஈடுபட்டு அயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்தும், அம்பாறை மாவட்டங்கள் முதல் பல இடங்களில் வசித்தவந்த தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் இருந்து துரத்தியடித்தமையினால் தான் வடக்கில் இருந்த முஸ்லிம்களை புலிகள் வெளியேறச் சொன்னார்கள். ஆனால் வாசுகி அவர்கள் முஸ்லிம்களை புலிகள் புறக்கணித்தார்கள் என்று கூறிப் புதிய குண்டைப் போடுகிறார்.

மேலும் சமாதான காலப்பகுதியில் முஸ்லிம் அரசியல்வாதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் ஒரு தேசிய இனம் தான், அவர்களின் பூர்வீகத் தாயகம் வடக்கு கிழக்கு மாகாணங்கள், தமிழர்களைப் போன்று அவர்களுக்கும் சமமான தீர்வு வழங்கப்படவேண்டும் என்று சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களே கூறுவதற்கு மறுத்து வந்த விடயங்களை அங்கிகரித்து கூறியவர் தான் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள். உண்மையில் புலிகளின் அமைப்பிலேயே முஸ்லிம்கள் இருந்தார்கள் என்ற உண்மையைக் கூடத் தெரியாமல் புத்தி பிசங்கிய நிலையில் உளறுகிறார் வாசுகி அவர்கள். தமிழர்கள் என்று இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தங்களை ஒருபோதும் கூறுவதில்லை என்ற உண்மையைக் கூட அறியாமல் ஈழவிவகாரத்தைப் பற்றி உண்மைக்குப் புறப்பானவற்றைக் கூறுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாசுகி அவர்கள்.

சமாதானத்தின் ஊடாகத் தீர்வை எதிர்பார்த்துக் கொண்டு இருந்த தமிழ் மக்கள் மீது இனவழிப்பை மேற்கொண்டது சிங்களப் பேரினவாதம், தமது நாட்டுச் சிங்கள மக்கள் போன்று தமிழர்களை அது கருதியிருந்தால் சிங்களப் பேரினவாதம் ஒன்றரை லட்சம் மக்களைப் படுகொலை செய்திருக்காது, 60 ஆண்டுகளுக்கு மேலாகவும் இன்றுவரையும் எதுவுமே தமிழர்களுக்கு தரப்போவதில்லை என்று கூறிவருகிறது சிங்களம். தமிழினம் அழிக்கப்பட்டும் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டும் தொடர்ந்து அவலத்தில் வாழும் தமிழர்களுக்கு தனி தமிழீழத்தை தவிர வேறுவழியில்லை. நிரந்தர விடிவிற்கும் ஈழத்தமிழர்களின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தனித் தமிழீழம் தான் தீர்வு. வந்தேறிகள் தங்களின் நாடு என்று கூறும் போது அதனை அங்கிகரிக்கும் கூட்டம் தனி தமிழீழத்தை அங்கிகரிக்க மறுக்கிறது.

மேற்கத்தையர்கள் இலங்கையில் படையெடுக்க முன்னர் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆண்டார்கள். இலங்கையில் சுதந்திரம் கிடைத்தது அதனால் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மாறி சிங்கள ஆட்சியாளர்கள் பொறுப்பில் வந்தார்களே தவிர இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. ஆண்ட ஆச்சியாளர்கள் மாறினார்களே தவிர தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்காமல் இன்றுவரை ஆங்கிலேயர்களின் ஆட்சியை விட பல மடங்கு அடக்கு முறையையும் கொடுமைகளையும் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து எதிர்கொண்டு வருகிறார்கள் ஈழத்தமிழர்கள். ஏன் இந்தியர்கள் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள்? எங்களுக்கு ஆங்கிலேயரின் ஆட்சியில் சம உரிமை கொடுத்தாலே போதும் என்று அவர்கள் அன்று கேட்டிருக்கலாமே? இக்கேள்வியானது தவறானதாக கருதப்படுகிறதோ அதனைப் போன்று தான் தனித் தமிழீழம் கோருவது தவறு என்று கூறும் கருத்துக்களும் தவறானவையே. இலங்கையில் ஆண்ட ஆட்சியாளர்கள் மாறினார்களே தவிர தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை அந்தச் சுதந்திரத்தை கேட்பது தவறு என்பவர்கள் தமிழினத்திற்கு விரோதமானவர்கள்.

சிறிலங்காவிற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அண்மையில் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. தனி ஈழத்துக்காக இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கு எதிர்புத் தெரிவித்திருந்தது. மற்றும் போர்க்குற்றம் குறித்த விசாரணையை இலங்கை அரசே மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான டி.கே.ரங்கராஜன் சென்ற முறை ஜநாவின் மனிதவுரிமை பேரவையில் சிங்கள அரசிற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கூடாது என்று கூறியிருந்தார். சென்றவருடம் இந்திய அரசின் குழுவினருடன் சிறிலங்காவிற்குச சென்று திருப்பிய டி.கே.ரங்கராஜன் கூறுகையில் ஈழத்தில் நிலைமை சகஜமாகி விட்டதாகவும், மக்கள் சகஜநிலைக்குப் போய் விட்டதாகவும், யாரும் தனி ஈழம் கேட்கவில்லை என்றும் ஏதோ ஈழத்தில் தமிழர்களுக்குப் பிரச்சனையும் இல்லை என்பதைப் போல பேசியிருந்தார்.

தனி ஈழத்துக்காக இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், மக்கள் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பாகும் அதனை கூறுவதற்கு முதுகெலும்பில்லாமல் வடவரின் எழும்புத் துண்டிற்காக தமிழகத்தில் உள்ள
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்க்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது தமிழக கட்சியல்ல அது வடவரின் கைப்பொம்மையாகச் செயல்படும் கட்சியாகும். மத்தியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அம்மனமாக நின்று கூத்தாடச் சொன்னால் அதற்கு ஆடுவதற்குத் தயாராகத்தான் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புலிகளைத் தீவிரவாதிகள் என்றும் பயங்ரவாதிகள் என்றும் கூறுகிறார்கள் அவர்கள் முதலில் சே குவேரா கூறியதனைப் படிக்கவேண்டும்.

நாங்கள் தீவிரவாதிகளா, அயோக்கியர்களா என்பதைக் குறித்து பரீசிலனை செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இல்லை.

எல்லாக் காலங்களிலும் மக்களுக்காகப் பேசுபவர்களையும் அவர்களுக்காகப் போராடுபவர்களையும் வல்லரசு நாடுகள் தீவிரவாதிகள் என்றால் அவரவர் நாட்டு சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை மட்டும் தியாகிகள் என்றார்களே ஏன்?

- சே குவேரா

இதனைத் தமிழகத்தில் உள்ள காங்கிரஸாரும் டி.கே.ரங்கராஜன் முதல் அனைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பல தடவை மனப்பாடம் செய்து மனதில் பதித்து வைத்துக்கொள்ள வேண்டும், புலிகளை அமெரிக்கா பயங்ரவாதிகளாக தனது பட்டியலில் இணைத்தது அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் புலிகளைப் பயங்ரவாதிகளின் பட்டியலில் இணைப்பதற்கு அமெரிக்கா தீவிரமாகச் செயல்பட்டது. இவ்வாறு அன்று சிங்கள அரசின் கைப்பொம்மையாகச் செயல்பட்டு 30க்கு மேற்பட்ட நாடுகளில் புலிகளை தடைசெய்தவதற்கு அமெரிக்கா தீவிர முயற்சியில் இறங்கியது. உண்மையில் போலி பொதுவுடைமை கொள்கை கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்காவின் கொள்கையையே ஈழவிடயத்தில் பின்பற்றுகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி அவர்கள் ஈழத்தமிழ்ப் பெண்களுக்காக இதுவரை குரல் கொடுக்காதவராகவும் மனிதநேயமும், தாய்மை உணர்வும் இல்லாத பிழைப்பு நடத்தும் அரசியல்வாதியாக மட்டுமே இருக்கிறார். ஜே.வி.பி என்ற சிங்களப் பேரினவாதிகளுடன் தொடர்பை வைத்துக்கொண்டு விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்ளுகிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். வரும் தேர்த்தலில் காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் அடக்கம் செய்துவது தமிழரின் கடமையாகும்.

தயவுசெய்து தமிழகத்தில் உள்ள மானம்கெட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினேரே உங்கள் அரசியல் பிழைப்பிற்காக பொதுவுடைமை கொள்கை, பெண் உரிமை இவற்றையும் மற்றும் மார்க்ஸ், லெனின், சே குவேரா போன்றவர்களையும் நாறடிக்க வேண்டாம்.

விஸ்வா