Monday, May 6, 2013

தாகம்



ஒற்றுமை என்பது வெற்றித்திருமகள் 
   நெற்றியிலிட்ட திலகம் - தமிழ்ப் 
பற்றினைக் கொண்டெழு ஒன்றெனச் சேர்ந்திடு
   கிட்டிடும் வாழ்வி லுதயம் - உயர் 
நற்றமிழோ உந்தன் நாவில் புரளினும் 
    இரத்தத்திலே கொண்டவீரம் - அதை 
விற்றிடவோ விலைபேசிடவோ உந்தன் 
    சொத்தில்லை பாரம்பரியம்  

வேற்றுமை விட்டணி செல்வாய் அதுவுந்தன் 
    வாழ்வினுக்கோர் அத்திவாரம் -இன்னும் 
சுற்றி மனங்கொண்ட செந்தீ  எழுந்துயிர் 
     கொள்ளும் சுதந்திர தாகம் - வெறும்
புற்றினில் சீறிடும் பாம்பின் விசம்விடப் 
     பொல்லாவெறியரின் மோகம் - இனி
முற்றும் எனத்துயர் கொள்வதை கண்டிட
     முன்னெழுந்தார் இவர் வீரம்  

பற்றிஎரியும் அடிவயிற்றி லெழும் 
     பாசமிகுந் திவர்போலும் - பல 
கற்றிடும் மாணவர் உள்ளம் கண்டதீயும் 
      காற்றினிலே பெரிதாகும் - தீயைப் 
பெற்றிடும் செந்தமிழ் செல்வங்களேஇனி 
      முற்று மெரிந்திடும் நீசம் - நீவிர் 
ஏற்றிடும் தியாகத்தின் தீயும் சுதந்திரம் 
      வெற்றிவரை தொடரட்டும்  

செங்குருதி சிந்தப் பெண்களுயிரைக் 
     குடித்தவன் பஞ்சணை மீதும் - அவன் 
தங்கமுடி தலைகொண்டர சாளவும் 
     தாழ்ந்து நலிவதோ நாமும் - இனி 
சங்கு ஒலித்திடப் பொங்கியெழுந்தவர் 
     சந்தண மார்பெடு தீரம்   கண்ணே
பொங்குமிதற்கொரு பாதைவிடு இது 
     புத்தொளி காணுமோர் தாகம்ர்

கவிஞர் - கிரிகாசன்