Monday, May 6, 2013

ஐநா அமைப்பு ஈழத்தமிழரின் மனிதவுரிமைகளை மதிக்கிறதா?



சென்ற மாதம் ஐக்கிய நாடுகளின் சமாதானப் படை அணியில் கடமையாற்றுவதற்காக ஒரு தொகுதி இராணுவத்தினர் ஹெயிட்டிக்குச் சென்றுள்ளனர், இதில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா இராணுவத்தின் 18ஆவது படை பிரிவைச் சேர்ந்த 750 பேர் சென்றுள்ளது.

அன்று சிங்களப் பேரினவாத அரசால் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள், சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் குற்றவாளிகளே. உண்மையில் ஐநாவில் உள்ள சிலர் குற்றவாளிகளும் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும். பான் கி மூன், விஜய் நம்பியார் போன்றவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரணை செய்யப்படவேண்டிய குற்றவாளிகளே ஆவார்கள். இவர்கள் மீது விசாரணை செய்யப்படாமல் விட்டால் ஈழத்தமிழின அழிப்பு விடையத்தில் ஐநா சபை நடந்து கொண்டதனைப் போலவே எதிர்காலங்களில் மற்றைய தேசங்களிலும் இவ்வாறான இனவழிப்பும் மிகப்பெரிய மனிதப்பேரவலமும் இடம்பெறலாம்.

இறுதியுத்தத்தின் போது ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை ஐநா அமைப்பு தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அமைத்த சார்ல்ஸ் பெட்ரி ஆணையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அன்று தமிழின அழிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்த காலப்பகுதியின் போது ஐநா அதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தமையையும், சிங்கள அரசின் தலையாட்டிப் பொம்மையாகச் அது செயல்பட்டதனையும் அந்த அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தது.

ஐ.நா மனிதவுரிமைகளை மதிக்கும் அமைப்பா? அல்லது ஐநாவில் உள்ளவர்கள் மனிதவுரிமைகளை மதிப்பவர்களா? என்ற கேள்வி ஈழத்தமிழ் மக்களால் தொடர்ந்து எழுப்படுகிறது. ஐ.நா என்ற அமைப்பு இன்று போர்க்குற்றவாளிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அரணாக மாறியுள்ளது. தமிழின அழிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவரான போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா. தற்போது நியூயோர்க்கில் சிறீலங்காவிற்கான ஐ.நாவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக இருக்கிறார். இவர் மன்னார் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை தமிழின அழிப்பை நடத்தியவர். தற்போது போர்க்குற்றங்களில் இருந்து தன்னை பாதுக்காத்துக் கொள்ளுவதற்கு ஐ.நா என்ற அமைப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழின அழிப்பை அரங்கேற்றி, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினரை (போர்க்குற்றவாளிகளை) ஐ.நாவின் அமைதிப்படையில் இணைக்கப்பட்டு ஆபிரிக்க நாடுகளில் இவர்கள் அனுப்பப்பட்டார்கள். அங்கே சென்ற சிங்களப் போர்க்குற்றவாளிகள் பாலியல் வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டமையினால் இவர்களை ஐநா அமைப்பு சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பியிருந்தது. ஆனால் தற்போது ஐநா அமைப்பு மறுபடியும் சிங்களப் போரக்குற்றவாளி இராணுவத்தை ஐ.நா அமைதிப்படையில் இணைத்து வருகிறது. இவற்றை அவதானிக்கும் போது ஐ.நா என்ற அமைப்பு உண்மையில் மனிதவுரிமைகளை மதிக்கும் அமைப்பா? அல்லது ஐ.நாவில் உள்ளவர்கள் மனிதவுரிமைகளை மதித்து இதயசுத்தியுடன் செயல்படுகிறார்களா? என்று கேள்விகள் எழுகின்றன.

ஐநா அமைப்பு ஈழத்தமிழரின் குரல்களுக்கு மதிப்பளிக்கிறதா? அது ஈழத்தமிழரின் மனிதவுரிமைகளை மதிக்கிறதா? அது ஈழத்தமிழரின் மனிதவுரிமைகளுக்கு மதிப்பளித்து ஆக்கபூர்வமாக செயலபட்டிருந்தால் அன்று தமிழின அழிப்பு நடைபெற்றிருக்காது. வெறும் வாய் மொழிகள் பயன் அற்றவை, செயல்வடிவம் கொடுப்பதே ஆக்கபூர்வமானவையாக இருக்கும், அதன்படி ஐநா நடந்து கொள்ளவில்லை.

சிறீலங்கா அரசு மனிதவுரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்று கூறிவருகிறது ஐநா. ஆனால் சிறீலங்கா அரசு தொடர்ந்து மனிதவுரிமைகளுக்கு எதிராகவே நடந்து வருகிறது. இவ்வாறு செயல்படுகின்ற அரசினை தண்டிக்காமல் அதற்குத் துணை நிற்கிறது ஐநா. மற்றும் தொடர்ந்து மனிதவுரிமை மீறல்களைத் தடுக்காமலும், அதில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்காமலும் இருப்பது எனபது மனிதவுரிமைகளை ஐநாவே மதிக்கவில்லை என்பதையே இது தெளிவாகக் காட்டுகிறது. குற்றம் செய்பவன் குற்றத்தை செய்யட்டும் என்று அனுமதித்துக் கொண்டு குற்றவாளியின் தலையாட்டிப் பொம்மையாகச் செயல்படுகிறது ஐநா,

மனிதவுரிமைகளை மதிக்க வேண்டும் என்று அது உபதேசம் கூறி தனது பொறுப்பில் இருந்து நழுவி விடுகிறது. இவ்வாறு ஐநா தொடர்ந்து செயல்படுவதனால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மனிதவுரிமை மீறல்களையும், இனச்சுத்திகரிப்பையும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருகிறது. ஆகையால் ஐநா சிங்கள அரசை மனிதவுரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்று கூறிவருவதைப் போன்றே ஐநாவும் மனிதவுரிமைகளை மதித்து செயல்பட வேண்டும் என்பதை தமிழர்கள் அழுத்தமாக கூறவேண்டிய காலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். உண்மையில் ஐநா ஈழத்தமிழரின் மனிதவுரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை அதனைப் போலவே சர்வதேச சமூகமும்.

சர்வதேச சமூகமும், ஐநாவும் ஈழத்தமிழரின் மனிதவுரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் வலியுறுத்த வேண்டும். அவ்வாறு சர்வதேச சமூகமும், ஐநாவும் ஈழத்தமிழரின் மனிதவுரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கருதினால் முதலில் அவர்கள் செய்ய வேண்டியது தமிழின அழிப்பை மேற்கொண்ட சிங்களப் போரக்குற்றவாளிகளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டிக்க வேண்டும். எதிர்காலத்தில் ஈழத்தமிழர்கள் மீது மனிதவுரிமை மீறல்கள் இடம்பெறாமல் இருப்பதற்கும், அவர்களின் மனிதவுரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு கௌரவமாக வாழுவதற்கும் கண்டிப்பாக சிங்களப் போரக்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய அவசியமுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் கதறல்களைக் கேட்காதே, ஈழத்தில் இடம்பெறும் தமிழினச் சுத்திகரிப்பைப் பார்க்காதே, ஈழத்தமிழின அழிப்பைப் பற்றிப் பேசாதே! என்ற நிலையில் ஐநா தொடர்ந்தும் செயல்படக் கூடாது.

விஸ்வா