Sunday, May 12, 2013

நினைவு சுமந்த கதை


அன்று விடியற் காலை 1.30 இருக்கும் தூக்கத்தைக் கலைத்தது தொலைபேசி மணி... யாராயிருக்கும் இந்த வேளையில் என்றெண்ணி எடுத்தேன் தொலைபேசியை. ‘அக்கா நித்திரையே" என்றான். சீ சீ பிரச்சனை இல்லை. என்ன செல்லம் இந்த நேரத்தில எடுத்திருக்கிற சொல் என்றேன். அக்கா கதைக்க நேரமில்ல. வீட்டச்சுற்றிப் பொலிஸ் வந்திற்றாங்கள். நான் மேல போறன். எல்லோருக்கும் சுகம் சொல்லுங்கோ, தகவலை அங்க அனுப்பிவிடுங்கோ என்றான். என்னடா தம்பி என்றேன். தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. கீக்... கீக்... என்ற சத்தம் வந்து கொண்டேயிருந்தது.

தம்பி... தம்பி... என்றழைத்தேன் பதிலேயில்லை. அவன் வைத்துவிட்டான். அல்லது துண்டித்துவிட்டான். இப்படி ஒரு நாளும் சொல்லுறதில்லை. இன்றைக்கு என்ன நடந்தது இவனுக்கு. சரி பாப்பம் திருப்பி எடுப்பான் தானே என்று இருந்தேன். ரெலிபோன் வரவேயில்லை. எனக்கு நித்திரையும் இல்லை. புரண்டு புரண்டு படுப்பதும் எழும்புவதுமாக இருந்தேன். ஆற்றாக் கொடுமையாக, நேரம் காலை 5 மணியிருக்கும், அவன் சொன்ன தகவலை அனுப்பவோம் என்று நினைத்து கணிணியை அழுத்தினேன்.

தலைப்புச் செய்தியில் குண்டு வெடிப்பு... பதறிப்போனேன். செய்தியை அழுத்தி வாசித்தேன். சந்தேகமேயில்லை. அவன் தான். அவனே தான். உடன் பிறந்த தம்பி என்னிடம் போறேன் அக்கா என்று சொல்லிவிட்டு, வித்தாகிவிட்டான். தொப்புள் கொடி ஒன்று பறந்து விட்டது.

கூடப் பிறந்த குட்டித்தம்பி இன்று, தன்னுயிரை தாய் நாட்டுக்கு ஈகம் செய்து விட்டான். ஆற்ற முடியாத துயரத்துடன் அவனை நினைந்தேன். நான் பிறந்து 12 ஆண்டுகளுக்குப்பின் பிறந்த தம்பி அவன். அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும் போதே, அவனின் வளர்ச்சி கண்டு ஆனந்தப்பட்டோம். அம்மாவின் வயிற்றுக்குள் இருப்பது தம்பியா தங்கையா என்று, எப்போதும் எனக்கும் அண்ணாவுக்கும் சண்டை வரும். கடைசியில் அண்ணாவின் ஆசைதான் நிறைவேறியது.

குட்டித்தம்பி ஊர்க் கோயில் கும்பாபிசேகத்தன்று பிறந்தான். அதனால் அவனை எல்லோரும் குட்டிச்சாமி என்றே அழைத்து வந்தோம். வீட்டிலுள்ள அனைவரின் பாசமும் அன்பும் அவனுக்குத் தான். குவிந்த வாயைப் பிடித்துக்கொண்டும், பெரிய தலையை ஆட்டிக்கொண்டும் எப்போதும் இருப்பான்.

பாலும், தயிரும், மோரும் அவனுக்குப் பிடித்த உணவு. அம்மாவின் பின்னால் திரிவது அவனது வேலை. அம்மாவும் அந்தக் கடைக்குட்டிமீது அளவு கடந்த பாசம். என்ர குட்டி அல்லவா என்று அம்மா சொன்னால் போதும், அப்படியே கனிந்து விடுவான்.

அம்மாவுக்கு மட்டுமல்ல வீட்டில் உள்ள அனைவருக்கும் குட்டிமீது கொள்ளை விருப்பம். அப்பா எப்போதும் கேட்பார் சாமிக்குட்டி சாப்பிட்டுவிட்டாரோ! என்று. அந்தக் குட்டித் தம்பி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பெரியவனாகிவிட்டான். நாட்டு நிலைமையும் மோசமாக மோசமாக நாட்டுப் பற்றும் அதிகரிக்க அதிகரிக்க உன்னதமான தாயக மண் மீட்புப் போரிலே தன்னையும் இணைத்துக் கொண்டான்.

ஒரு வருடமா? இருவருடமா? 12 வருடமாக தன்னை இணைத்து தாயக விடுதலை மூச்சையே சுவாசித்து அண்ணனின் கரத்தை இறுகப் பற்றி, அண்ணன் வழியில் தடம் பதித்தவன். ஒவ்வொரு தவணை பேசும் போதும், எழுதும் கடித்திலும் தமிழீழம் வெகு விரைவில் மலரும். மலரப்போகும் தமிழீழத்தின் சார்பில் இப்போதே உங்களை வரவேற்கிறேன் என்று தான் எழுதுவான்.

அருமையான இரண்டு கண்களாக கருதும் மக்களுக்கு எழுதும் போது, எமது நாட்டின் கண்கள் நீங்கள். எமது நாட்டுக்கு நீங்கள் வரும் போது விஞ்ஞானியாகவும், வைத்தியராகவும் வரவேண்டும். போராட நாங்கள் இருக்கிறோம். நீங்கள் தான் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பான். அடிக்கடி சொல்வான் அண்ணாவுக்கு வயது போகிறது அக்கா. அண்ணான்ர காலத்தில தமிழீழம் மலரவேண்டும். எல்லோரும் ஒத்துழைக்க வேண்டுமக்கா.

இது தான் அவனது தாரக மந்திரம். அந்த உடன் பிறப்பின் குரல் இனி எமக்கு கேட்காது. எமக்கு கடிதம் எழுதாது. ஆனால் அவனுடைய அத்திபூத்தாற்போல் எழுதும் கடிதமும், அப்பப்போ கதைத்த சொற்களும் தான் எமக்கு ஆறுதல். அவனுடைய ஆத்மா சாந்தியடையவேண்டுமாக இருந்தால் எம் தலைவனின் பின்னால், நாம் அனைவரும் அணிதிரள்வோம்.

தாயகக் கனவை நெஞ்சில் சுமந்து, சுமந்து செல்லும் நாலுபேருக்கும் நன்றிக் கடன் வைக்காமல், தன் சாவுக்கு தானே திகதி குறித்து, தன் கையாலேயே தனக்கு கொள்ளிவைத்து காவியமாகிப் போன வீரரே! உங்கள் கனவை எம் தலைவன் நனவாக்குவான்.


"என் செவியில் உன் கடைசி வார்த்தை நான் இறக்கும் வரை கேட்கும்"

-இனியவள்-